Skip to main content

"எனக்கும் கணக்குக்கும் ரொம்ப தூரம்ங்க...பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்ட காவல் ஆணையர் ஏ.கே.வி..!"

Published on 30/11/2019 | Edited on 30/11/2019

சென்னை அம்பத்தூரில் இயங்கும் ராமசாமி முதலியார் மேல்நிலைப் பள்ளியில் 40 ஆண்டுகளுக்கு முன்னர் 10-ஆம் வகுப்பு படித்த மாணவர்கள் மீண்டும் ஒன்று கூடும் நிகழ்ச்சி நேற்று(29-11-2019) நடைபெற்றது. 55 வயதை கடந்த முன்னாள் மாணவர்கள் 250-க்கும் மேற்பட்டவர்கள், இந்த நிகழ்வில் ஒன்று கூடி உறவாடி மகிழ்ந்தனர்.
 

nakkheeran

 

 

சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதன், பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜே.சி.டி. பிரபாகர் உள்ளிட்ட முன்னாள் மாணவர்களும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பித்தனர். பாடம் கற்றுக் கொடுத்த ஆசிரியர்களுக்கு சிறப்பு செய்த மாணவர்கள், தங்களது அனுபவங்களை மெல்ல அசை போட்டனர். அதிலும் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனின் பேச்சை வந்திருந்தவர்கள் வெகுவாக ரசித்தனர்.

கணக்கு எனக்கு வராது..!

"எனது பள்ளிக்காலத்தில் 11 பள்ளிக்கூடங்களில் படித்தேன். அதில் அதிக பட்சம் இரண்டரை ஆண்டுகள் கல்வி கற்றது இந்த பள்ளிக்கூடம் தான். 8,9,10 வகுப்புகள் இங்கு தான் படித்தேன். 1976-ல் நான் 8-ங்கிளாஸ் சேரும்போது பிரேமாவதி டீச்சர் தான் எனக்கு கணக்கு டீச்சர். அவங்க எனக்கு ரொம்ப மெனக்கெட்டு கணக்கு எடுப்பாங்க. ஆனால், எனக்கு கடைசி வரைக்கும் கணக்கு வரவே இல்லை. அப்புறம் சுகுமாறன் சார் எனக்கு டியூசன் எடுத்தார். கடைசி வரைக்கும் அவங்களால எனக்கு கணக்கு சொல்லி கொடுக்க முடியலை. எனக்கும் வரலை... ஆனா எப்ப பார்த்தாலும் அன்பா பேசுவாங்க... பரவாயில்ல விடுடா... வருகிறது தான வரும்? என்று சொல்லி  கற்றுக் கொடுக்க ரொம்ப முயற்சி பண்ணுவாங்க..

40 வருஷ நண்பன்..!

பலராமன் சார் தான் எனக்கு கிளாஸ் டீச்சர்.  அவரை பற்றி ஒரு விஷயத்தை சொல்லனும். 8-ங்கிளாஸ் படிக்கும்போது அவரோட மேரேஜூக்கு லீவு கிடைக்கலை... காலையில் தாலி கட்டிட்டு, மதியம் ஸ்கூலுக்கு வந்திட்டார். இந்த பள்ளியில் நிறைய பிரண்ட்ஸ் கிடைச்சாங்க...அப்புறம் நான் 8-ங்கிளாஸ்ல பெஞ்சில் மோகன் பக்கத்தில தான் உட்கார்ந்தேன். இப்போது வரைக்கும் எனக்கும் அவனுக்குமான நட்பு தொடர்கிறது" என்று எதார்த்தமாக பேசி முடித்தார் ஏ.கே.வி.

அப்போது 40 ஆண்டுகளுக்கு முந்தைய நினைவுகளில் மூழ்கி இருந்தனர் ஏ.கே.வி.யின் தோழர்கள்..!

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வெறுப்பு பிரச்சாரம்; மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டி போராட்டம் (படங்கள்)

Published on 24/04/2024 | Edited on 24/04/2024

 

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது. பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் கூறிவருகின்றனர்.

இந்த நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி, வெறுப்பு பிரச்சாரம் செய்துவரும்  பிரதமர் மோடி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவும், வழக்கு பதிவு செய்திடவும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் மத்திய சென்னை மாவட்டம் சார்பில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று காலை கண்டனம் முழக்கப் போராட்டம் நடைபெற்றது. பிறகு நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க, பேரணியாக சென்றனர்.

Next Story

ஷர்மிளா தற்கொலை விவகாரம்; ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Sharmila incident RdO Order for investigation

சென்னை பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன். இவர் ஜல்லடையான் பேட்டையைச் சேர்ந்த ஷர்மிளா (வயது 22) என்ற பெண்ணை கடந்த சில வருடங்களாக பிரவீன் காதலித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரவீன் - சர்மிளா இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுடைய காதலுக்கு இரு வீட்டார் தரப்பிலும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், எதிர்ப்பையும் மீறி இந்தத் திருமணமானது நடைபெற்றது. இந்த காதல் திருமணத்தை தொடர்ந்து அதே பகுதியில் இவர்கள் இருவரும் வசித்து வந்தனர்.

இத்தகைய சூழலில் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி ஷர்மிளாவின் சகோதரன் தினேஷ் மற்றும் நண்பர்கள் சேர்ந்து இரவு அந்தப் பகுதியில் இளைஞர் பிரவீன் அமர்ந்திருந்தபோது அவரை சரமாரியாக பயங்கர ஆயுதங்களைக் கொண்டு தாக்கினர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞர் பிரவீன் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீசார் விசாரணையில் நடந்தது ஆணவக் கொலை என்பது உறுதியானது. கொலையில் ஈடுபட்ட பெண்ணின் சகோதரர் தினேஷ் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இதனையடுத்து காதல் கணவன் கொலை செய்யப்பட்டதால் ஷர்மிளா மன உளைச்சலில் இருந்த நிலையில் தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக மீட்கப்பட்டு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் 9 நாட்களாக கோமா நிலையில் சிகிச்சை பெற்றுவந்த ஷர்மிளா, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் நள்ளிரவு (22.04.2024) உயிரிழந்தார். மேலும் தன்னுடைய காதல் கணவன் கொல்லப்பட்டது குறித்தும், தன்னுடைய தற்கொலை முடிவு குறித்தும் ஷர்மிளா கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார். அதில், 'அவன் இல்லாத லைஃப் எனக்கு வேண்டாம். நானும் அவன் கூடவே போறேன்' என உருக்கமாக எழுதியுள்ளதோடு கொலைக்கு காரணமானவர்களின் பெயர்களையும் ஷர்மிளா குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் தற்கொலை செய்து கொண்ட ஷர்மிளா மரணம் தொடர்பாக கோட்டாட்சியர் (RDO - ஆர்.டி.ஓ.) விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஷர்மிளாவின் உடற்கூராய்வு சற்று நேரத்தில் நடைபெற உள்ளது எனவும், உடற்கூராய்வு வீடியோ பதிவு செய்யப்படும் எனவும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.