Police arrested three persons for hunting deer

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள எலவனாசூர்கோட்டை பகுதியில் கொட்டையூர் பரிந்தல் சாலையில் எலவனாசூர்கோட்டை போலீசார் இன்று வியாழக்கிழமை காலை வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியே ஒரு இருசக்கர வாகனத்தில் 3 பேர் வந்த நிலையில் அந்த வாகனத்தை போலீசார் வழிமறித்துத் தடுத்து நிறுத்தினர் அப்போது 3 பேரும் இருசக்கர வாகனத்தில் நிற்காமல் அதிவேகமாகச் செல்ல முயன்ற நிலையில் போலீசார் அவர்களை விரட்டி சென்று பிடித்து விசாரணை செய்தனர்.

அதில் போலீசாரிடம் பிடிபட்ட மூன்று பேரில் எறையூர் கிராமத்தைச் சேர்ந்த ஜூலியன் ஜேக்கப் பீட்டர், இறையூர் பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ஜெய்சன் மற்றும் அரவிந்த் சாவியோ என்பது தெரியவந்தது. தொடர்ந்து இவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் இவர்கள் மூன்று பேரும் உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு வரஞ்சரம் காப்புக்காடு பகுதியில் மான் வேட்டையாடி அதன் இறைச்சியைச் சாக்குப் பையில் போட்டு எடுத்து வந்தது தெரிய வந்தது.

இதையடுத்து 3 பேரையும் கைது செய்த எலவனாசூர்கோட்டை போலீசார் உரிமம் இன்றி துப்பாக்கி வைத்து மான் வேட்டையாடியதாக வழக்குப்பதிவு செய்து அவர்களிடம் இருந்த மான் இறைச்சி உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கி மற்றும் ரூபாய் 2 லட்சம் மதிப்பிலான விலை உயர்ந்த இருசக்கர வாகனம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.