Skip to main content

"மத்திய அரசின் முடிவை திரும்பப் பெற வைத்த பெருமை பாமகவுக்கு மட்டும்தான் உண்டு" - ராமதாஸ்

Published on 04/02/2023 | Edited on 04/02/2023

 

pmk founder ramadoss talks about union government budget 

 

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 31 ஆம் தேதி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் தொடங்கிய நிலையில் கடந்த ஒன்றாம் தேதி  2023-2024 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து உரையாற்றிய போது பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்தும் புதிய  அறிவிப்புகளையும் வெளியிட்டார்.

 

இந்நிலையில், மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ள ரயில்வே திட்டங்கள் குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, "நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 2023-24 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், தமிழ்நாட்டில் நிலுவையில் உள்ள புதிய தொடர்வண்டிப்பாதை திட்டங்களை செயல்படுத்துவதற்காக  ரூ.1158 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது. தமிழ்நாட்டின் தேவைகளை ஒப்பிடும்போது இது குறைவு தான் என்றாலும், நீண்டகாலமாக புறக்கணிக்கப்பட்டு வந்த தமிழ்நாட்டின் தொடர்வண்டிப் பாதைகளுக்கு புத்துயிரூட்டும் வகையில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

 

சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தெற்கு தொடர்வண்டி துறையின் பொது மேலாளர் ஆர்.என்.சிங், தொடர்வண்டி திட்டங்களை செயல்படுத்துவதற்காக தமிழ்நாட்டிற்கு மட்டும் ரூ.6,080 கோடியும், ஒட்டுமொத்த தெற்கு தொடர்வண்டி துறைக்கும் சேர்த்து ரூ.11,313 கோடியும் ஒதுக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார். நிதிநிலை அறிக்கையில் தொடர்வண்டித் துறைக்கான ஒட்டுமொத்த நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டிருக்கும் விகிதத்துடன் ஒப்பிடும்போது இந்த நிதி ஒதுக்கீடு குறைவாகும். ஆனாலும், தமிழ்நாட்டில் திண்டிவனம் - நகரி, திண்டிவனம் - திருவண்ணாமலை,  தருமபுரி - மொரப்பூர், மதுரை - அருப்புக்கோட்டை- தூத்துக்குடி, ஈரோடு - பழனி, ராமேஸ்வரம்- தனுஷ்கோடி  ஆகிய 6 புதிய பாதை திட்டங்களுக்கு ரூ.1158 கோடி நிதி ஒதுக்கப்பட்டிருப்பது தான் மகிழ்ச்சியளிக்கும் செய்தி ஆகும். இவற்றில் ராமேஸ்வரம் - தனுஷ்கோடி திட்டம் தவிர மீதமுள்ள 5 திட்டங்களுக்கும் கடந்த பத்தாண்டுகளில் சொல்லிக்கொள்ளும்படியாக நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. அதுமட்டுமின்றி, இவற்றில் திண்டிவனம் - திருவண்ணாமலை,  ஈரோடு- பழனி உள்ளிட்ட 5 திட்டங்களை கைவிடுவதாக கடந்த 2019-ஆம் ஆண்டு தொடர்வண்டித்துறை அறிவித்தது. அதைக் கடுமையாக எதிர்த்து மத்திய அரசின் முடிவை திரும்பப் பெற வைத்த பெருமை பாட்டாளி மக்கள் கட்சிக்கு மட்டும் தான் உண்டு.

 

2022-23 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டில் இராமேஸ்வரம்- தனுஷ்கோடி புதிய தொடர்வண்டிப் பாதை திட்டத்திற்கு மட்டும் தான் ரூ.59 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. மீதமுள்ள எட்டு திட்டங்களுக்கு தலா ரூ.1000 மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. அதைக் கண்டித்து பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் 16.04.2022 அன்று அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் போராட்டங்கள் நடத்தப்பட்டன. அதைத் தொடர்ந்து கடந்த நவம்பர் 21-ஆம் தேதி தெற்கு தொடர்வண்டித்துறை பொது மேலாளர் ஆர்.என்.சிங்கை, பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் சந்தித்து தமிழகத்திற்கான தொடர்வண்டித் திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். பா.ம.க. மேற்கொண்ட நடவடிக்கைகளின் பயனாக தமிழ்நாட்டில் நீண்டகாலமாக நிலுவையில் வைக்கப்பட்டிருந்த திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டிருப்பது பெருமிதம் அளிக்கிறது.

 

அதே நேரத்தில் தமிழகத் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி போதுமானது அல்ல. தமிழ்நாட்டில் கிடப்பில் போடப்பட்டுள்ள 9 புதிய பாதை திட்டங்களை செயல்படுத்த, அவற்றுக்கான தொடக்ககால மதிப்பீடுகளின்படி ரூ.7,910 கோடி தேவை. இந்த மதிப்பு இப்போது ரூ.10,000 கோடியை கடந்திருக்கும். ஆனால், அதில் 11% அளவுக்கு தான் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக தருமபுரி - மொரப்பூர் புதிய பாதை திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள ரூ.100 கோடி நிலம் கையகப்படுத்துவதற்கு மட்டுமே போதுமானதாக இருக்கும். அங்கு கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள அதிக நிதி தேவைப்படும்.

 

அதுமட்டுமின்றி, சென்னை-மாமல்லபுரம்-கடலூர், அத்திப்பட்டு-புத்தூர், திருப்பெரும்புதூர்- கூடுவாஞ்சேரி ஆகிய 3 முக்கிய தொடர்வண்டிப்பாதை திட்டங்களுக்கு இந்த நிதிநிலை அறிக்கையிலும் நிதி ஒதுக்கீடு செய்யப்படாதது ஏமாற்றமளிக்கிறது. இந்த 3 திட்டங்களும் பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் மத்திய தொடர்வண்டித்துறை இணை அமைச்சர்களாக இருந்தபோது அறிவிக்கப்பட்டவை. சென்னை-மாமல்லபுரம்-கடலூர் பாதை கிழக்குக் கடற்கரை தொடர்வண்டிப்பாதை அமைக்கவும், சுற்றுலா வளர்ச்சிக்கும் பெரிதும் உதவியாக இருக்கும். திருப்பெரும்புதூர்- கூடுவாஞ்சேரி பாதை சரக்குகளை கையாளுவதற்கு வசதியாக இருக்கும். அதனால் இந்தத் திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்கப்பட வேண்டும்.

 

பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் தொடர்வண்டித்துறை இணையமைச்சர்களாக பதவி வகித்த காலத்தில் தான் தமிழ்நாட்டிற்கு அதிக அளவில் தொடர்வண்டித் திட்டங்கள் கிடைத்தன. 2009-ஆம் ஆண்டுக்குப் பிறகு கடந்த 14 ஆண்டுகளாக தமிழகத்திற்கு புதிய திட்டங்களும் வரவில்லை; ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கு நிதியும் ஒதுக்கப்படவில்லை. அதனால், தொடர்வண்டிப்பாதை கட்டமைப்பை மேம்படுத்துவதில் தமிழகம் மிகவும் பின் தங்கியிருக்கிறது. அதைக் கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் நிலுவையில் உள்ள 9 புதிய தொடர்வண்டிப்பாதை திட்டங்களுக்கும் மத்திய அரசு கூடுதலாக நிதி ஒதுக்க வேண்டும். அனைத்துத் திட்டங்களுக்கும் அதிகபட்சமாக 3 ஆண்டுகள் காலக்கெடு நிர்ணயித்து, அதற்குள்ளாக செயல்படுத்தி முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" என தெரிவித்து உள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“டிஎன்பிஎஸ்சி குரூப் 2 நேர்முகத் தேர்வு ரத்து வரவேற்கத்தக்கது” - ராமதாஸ்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
“Cancellation of TNPSC Group 2 Interview is welcome says Ramadoss

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 நேர்முகத் தேர்வு ரத்து வரவேற்கத்தக்கது என்றும் நிலையான தேர்வு அட்டவணை, கூடுதல் சீர்திருத்தம் தேவை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் குரூப் 2 பணிகளுக்கு இனி நேர்முகத்தேர்வுகள் நடத்தப்படாது என்பது உள்ளிட்ட பல்வேறு சீர்திருத்தங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருக்கிறது. தேர்வர்கள் நலன் கருதியும், தேர்வுகளை விரைவுபடுத்தவும் அறிவிக்கப்பட்டுள்ள இச்சீர்திருத்தங்கள் வரவேற்கத்தக்கவை.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தை காலத்திற்கும், தேவைக்கும் ஏற்ற வகையில் மாற்ற வேண்டும்; அதற்காக பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது. பா.ம.க. வலியுறுத்திய சில சீர்திருத்தங்களை தேர்வாணையம்   செயல்படுத்தியுள்ள போதிலும், தேர்வாணையத்தை நவீனப்படுத்துவதற்கு இவை மட்டும் போதுமானதல்ல.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் அனைத்து பணிகளுக்கும் நேர்முகத் தேர்வு கூடாது என்பது தான் பா.ம.க.வின் நிலைப்பாடு. இதை கடந்த ஐந்தாண்டுகளாக பா.ம.க.வின் நிழல் நிதிநிலை அறிக்கை மூலம் வலியுறுத்தி வருகிறோம். ஆள்தேர்வில் நடைபெறும் முறைகேடுகளுக்கு முதன்மைக் காரணம் நேர்முகத் தேர்வுகள் தான். அவை அகற்றப்பட்டால் தான் நேர்மையான முறையில் பணியாளர்களைத் தேர்ந்தெடுக்க முடியும். அப்போது தான் ஏழை, நடுத்தர மக்களுக்கும் வேலை கிடைக்கும்.

மத்திய அரசுப் பணிகளை பொறுத்தவரை குரூப் ஏ, குரூப் பி அரசிதழ் பதிவு பணிகள் தவிர மற்ற அனைத்து பணிகளுக்கும் நேர்காணல் முறை ரத்து செய்யப்பட்டு விட்டது. ஆந்திர மாநிலம் அதை விட அடுத்தக்கட்டத்திற்கு சென்று மாவட்ட துணை ஆட்சியர், காவல்துறை துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட முதல் தொகுதி பணிகளுக்குக் கூட நேர்காணலை ரத்து செய்து விட்டது. ஆந்திராவைப் பொறுத்தவரை அரசு பணிகளுக்கு நேர்காணல் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு விட்டது. ஆந்திரத்தைப் போலவே தமிழ்நாட்டிலும் முதல் தொகுதி பணிகளுக்கும் நேர்முகத் தேர்வை நிரந்தரமாக நீக்க வேண்டும்.

2 ஏ தொகுதியில் இதுவரை இருந்து வந்த நகராட்சி ஆணையர், தலைமைச் செயலக உதவி பிரிவு அதிகாரி ஆகியவை தொகுதி 2 க்கு மாற்றப்பட்டு விட்டன. இவை தவிர 2 ஏ தொகுதியில் உள்ள அனைத்து பணிகளும் சாதாரணமானவை தான். அப்பணிகளுக்காக முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு என இரு தேர்வுகளை நடத்த வேண்டிய தேவையில்லை. எனவே, 2 ஏ தொகுதி பணிகளுக்கு  இனி ஒரே தேர்வை நடத்துவதற்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் முன்வர வேண்டும்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் எதிர்கொள்ளும் மிகக் கடுமையான விமர்சனம் தேர்வு முடிவுகளை குறித்த காலத்தில் வெளியிடுவதில்லை என்பது தான். தொகுதி 1, தொகுதி 2 பணிகளுக்கான தேர்வு நடைமுறைகளை பல நேரங்களில் 30 மாதங்கள் வரை ஆகின்றன. இதனால் தேர்வர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இந்த நிலையை மாற்றி குறித்த நேரத்தில் முடிவுகளை வெளியிட வேண்டும்.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடிமைப்பணி அதிகாரிகளை தேர்தெடுப்பதற்கான போட்டித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. லட்சக்கணக்கான மாணவர்கள் பங்கேற்கும் அத்தேர்வுகளின் முடிவுகள் அறிவிக்கை வெளியான நாளில் இருந்து ஓராண்டுக்குள் வெளியிடப்படுகின்றன. அடுத்தத் தேர்வுக்கு தேர்வர்கள் தயாராவதற்காக இத்தகைய ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குடிமைப்பணி தேர்வுக்கான முடிவுகள் ஒரு முறை கூட தாமதமாக வெளியிடப்பட்டதில்லை. மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தைப் பின்பற்றி ஒவ்வொரு தொகுதி பணிக்கும் எந்த மாதத்தில் அறிவிக்கை வெளியிடப்படும்? எந்த மாதத்தில் தேர்வு நடைபெறும்? எந்த மாதத்தில் முடிவுகள் வெளியாகும்? என்ற விவரங்கள் அடங்கிய நிலையான தேர்வு அட்டவணையை  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமும்  வெளியிட வேண்டும்.

முதல் தொகுதி பணிகளுக்கான அறிவிக்கை பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டு, ஏப்ரல் மாதத்தில் முதல்நிலைத் தேர்வு, ஜூலை மாதத்தில் முதன்மைத் தேர்வு நடத்தப்பட்டு, திசம்பர் மாதத்தில் இறுதி முடிவுகள் வெளியிடப்பட வேண்டும். இரண்டாம் தொகுதி பணிகளுக்கான அறிவிக்கை மார்ச் மாதம் வெளியிடப்பட்டு, மே மாதத்தில் முதல்நிலைத் தேர்வு, ஆகஸ்ட் மாதத்தில் முதன்மைத் தேர்வு நடத்தப்பட வேண்டும். ஒவ்வொரு ஆண்டும்  இரண்டு முறை தொகுதி 4 பணிகளுக்கான அறிவிக்கைகள் வெளியிடப்பட்டு, மார்ச், செப்டம்பர் மாதங்களில் தேர்வுகளை நடத்தி முறையே மே, நவம்பர் மாதங்களில் முடிவுகளை வெளியிட வேண்டும்.

பொறியியல் பணிகள், வேளாண் பணிகள், புள்ளியியல் பணிகள் உள்ளிட்ட முதல் 4 தொகுதிகளுக்குள் வராத பணிகளுக்கான அறிவிக்கைகள் ஆகஸ்ட் மாதத்தில் வெளியிடப்பட்டு, அடுத்த 5 மாதங்களில் தேர்வுகள் நடத்தி, முடிவுகளை வெளியிட வேண்டும். இதற்கேற்ற வகையில் தேர்வு நடைமுறையில் சீர்திருத்தங்களைச் செய்ய தமிழ்நாடு அரசுப் பணியாளர்  தேர்வாணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

குடியைக் கெடுக்கும் குடிக்கு முடிவு கட்டப்படுவது எப்போது? - ராமதாஸ்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Ramdoss has questioned when liquor will be abolished in Tamil Nadu

குடிப்பழக்கம் உள்ள பெற்றோரின் பிள்ளைகளுக்கு சுயமரியாதை குறைவு என ஆய்வில் வெளியாகியுள்ளது; குடியைக் கெடுக்கும் குடிக்கு முடிவு கட்டப்படுவது எப்போது? என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான  பெற்றோர்களின் பிள்ளைகள் சுயமரியாதைக் குறைவு, தாழ்வு மனப்பான்மை உள்ளிட்ட மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்படுகின்றனர் என்று சென்னை மருத்துவக் கல்லூரியின் சமூக மருத்துவ நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. குடிக்கும் பெற்றோரின் பிள்ளைகள் இளம் வயதிலேயே மதுப்பழக்கம் மற்றும் புகையிலைப் பழக்கத்திற்கு அடிமையாகுதல், தீய செயல்களில் அடிக்கடி ஈடுபடுதல் உள்ளிட்ட பாதிப்புகளுக்கும் ஆளாவதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.  இந்த ஆய்வு முடிவுகள் சிறிதும் அதிர்ச்சியோ, ஆச்சரியமோ அளிக்கவில்லை. மாறாக, மதுப்பழக்கத்தின் தீமைகள் குறித்து பல பத்தாண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி கூறி வரும் குற்றச்சாட்டுகளை உறுதி செய்திருக்கிறது.

அனைத்து சமூகக் கேடுகளுக்கும் ஆணிவேர் மதுப்பழக்கம் தான்.  தினமும் குடித்து விட்டு வந்து வீட்டில் உள்ளவர்களை கொடுமைப் படுத்தும் தந்தை உள்ள வீட்டில், அவர்களின் பிள்ளைகளால் நிம்மதியாக படிக்க முடியாது; சமூகத்தில் தலை நிமிர்ந்து நடக்க முடியாது என்பது நடைமுறையில் நாம் கண்டு வரும் உண்மை ஆகும். தந்தை குடிப்பதைப் பார்க்கும் பிள்ளைகளும் மது எளிதாக கிடைக்கும் போது அந்தப் பழக்கத்திற்கு அடிமையாவது வழக்கம் தான். 

இந்த உண்மைகளைத் தான்  சென்னை மருத்துவக் கல்லூரியின் ஆய்வு உறுதி செய்திருக்கிறது. அதனால் தான் குடி குடியைக் கெடுக்கும், குடிப்பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும் என்ற எச்சரிக்கை வாசகங்கள் மதுப்புட்டிகள் மீது எழுதப்பட்டன. மதுவே முற்றிலுமாக ஒழிக்கப்பட  வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், தமிழ்நாட்டை மாறி மாறி ஆட்சி செய்து வரும் திமுகவும், அதிமுகவும் மதுவின் தீமைகளை கருத்தில் கொள்ளாமல் சட்டப்படியாக அரசுக்கு கிடைக்கும் வருமானத்தையும், சட்டவிரோதமாக தங்களுக்கு கிடைக்கும் லாபத்தையும் மட்டுமே கருத்தில் கொண்டு  தமிழகத்தின் அனைத்து வீதிகளிலும் மதுவை வெள்ளம் போல ஓட விடுகின்றன.

அதுமட்டுமின்றி, மதுப்புட்டிகளில் மதுவின் தீமைகளை குறிக்கும் வகையிலான, 'குடி, குடியை கெடுக்கும்; குடிப்பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும்; மது நாட்டுக்கு, வீட்டுக்கு, உயிருக்குக் கேடு' என்ற, விழிப்புணர்வு வாசகங்களை நீக்கி விட்டு, 'மது அருந்துதல் உடல் நலத்திற்கு கேடு; பாதுகாப்பாக இருப்பீர். மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டாதீர்' என்ற மென்மையான வாசகங்களை அச்சிட்டது தான் திமுக, அதிமுக அரசின் சாதனைகள் ஆகும்.

எந்த வகையில் பார்த்தாலும் மது மிகப்பெரிய சமூகக் கேடு என்பதில் மாற்றமில்லை.  மது இல்லாத தமிழகத்தில் குடும்பங்கள் மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள்; குழந்தைகள் சுயமரியாதையுடன் நல்லவர்களாக வளர்வார்கள். எனவே, குடியைக் கெடுக்கும் குடிப்பழக்கத்திற்கு முடிவு கட்டும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள மதுக்கடைகளை மூடிவிட்டு முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.