Skip to main content

“தமிழ்நாட்டிற்கு வரும் போதெல்லாம் புதிய சக்தி கிடைக்கிறது” - பிரதமர் மோடி

Published on 02/01/2024 | Edited on 02/01/2024
PM Modi says Whenever you come to Tamil Nadu, you get new power

திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையம் ரூ.1112 கோடியில் உருவாக்கப்பட்டது. இதனை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் விழா மற்றும் ரூ.20 ஆயிரம் கோடி திட்டங்களைத் தொடங்கி வைத்தல், மற்றும் அடிக்கல் நாட்டுவிழா இன்று மதியம் விமான நிலைய வளாகத்தில் நடந்தது.

இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு புதிய முனையத்தை தொடங்கி வைத்தார். முன்னதாக அவருக்கு முதல்வர் ஸ்டாலின் பொன்னாடை அணிவித்தார். அதைத்தொடர்ந்து மத்திய அமைச்சர் முருகன் வரவேற்று பேசினார். முன்னதாக பிரதமர் மோடிக்கு, விமான முனையத்தின் சிறப்புகளை விமான மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா விளக்கி கூறினார். மேலும், புதிய முனையத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகள், வாகனங்கள் நிறுத்தும் வசதி, உள்ளிட்ட சிறப்பு அம்சங்கள் குறித்தும் ஜோதிராதித்யா விழாவில் பேசினார். சாமானியர்களும் விமானத்தில் செல்ல வேண்டும் என்பதே பிரதமரின் இலக்கு என்றும் அவர் கூறினார்.

இதனை தொடர்ந்து, இந்த விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது, “புத்தாண்டுக்கு பிறகு என் முதல் நிகழ்ச்சி தமிழ்நாட்டில் நடப்பது பெருமையாக உள்ளது. ரூ.20 ஆயிரம் கோடியில் தொடங்கப்பட்ட இந்த திட்டங்கள் வேலை வாய்ப்புகளை உருவாக்கும். தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக கடினமானதாக இருந்துள்ளது. தமிழ்நாட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களின் உயிர், உடைமைகளை இழந்திருக்கின்றனர். அந்த மக்களுக்கு மத்திய அரசு துணையாக இருக்கும். 

கடந்த சில நாட்களுக்கு முன் உயிரிழந்த விஜயகாந்த், சினிமாவில் மட்டுமல்ல அரசியலிலும் கேப்டனாக இருந்துள்ளார். அவர் தேசிய நலனுக்குத் தான் எப்போதும் முக்கியத்துவம் தருவார். அடுத்த 25 ஆண்டுக்கால கட்டத்தில் பாரதத்தை வளர்ச்சி அடைந்ததாக மாற்ற வேண்டும். வளர்ச்சி என்பது பொருளாதாரம் மற்றும் கலாச்சாரம் இரண்டும் சேர்ந்த வளர்ச்சி தான். தமிழ்நாட்டிற்கு நான் வரும் போதெல்லாம் புதிய சக்தி கிடைக்கிறது. நான் எங்கு சென்றாலும் தமிழ்நாட்டின் கலாச்சாரம் குறித்து பேச மறப்பதில்லை. எனக்கு தமிழ் மொழி, தமிழ் கலாச்சாரம் குறித்து உற்சாகம் அதிகரித்து கொண்டே இருக்கிறது. 

திருச்சி என்று கூறினாலே வளமான வரலாற்று சான்றுகள் உள்ளன. அதில், பல்லவர்கள், சோழர்கள், நாயக்கர்கள் திருச்சியை வளமாக ஆட்சி செய்திருக்கின்றனர். 2024ஆம் ஆண்டுக்கு முன் பெற்ற நிதியை விட 2.5 மடங்கு அதிக நிதியை தமிழக அரசு மத்திய அரசிடமிருந்து பெற்று வருகிறது. தமிழகத்துக்கு வரலாறு காணாத நிதி வழங்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் வளர்ச்சியே தேசத்தின் வளர்ச்சி என்ற நோக்கத்தில் மத்திய அரசு செயல்படுகிறது. ” என்று பேசினார். 

சார்ந்த செய்திகள்