Skip to main content

பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் வீடு தரவில்லை என்ற கோபத்தில் தற்கொலைக்கு முயன்றவர் கைது...!

Published on 17/10/2020 | Edited on 17/10/2020

 

PM Home scheme issue

 

 

தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியங்களிலும் உள்ள கிராம ஊராட்சிகளில் வாழும் ஏழை எளிய மக்களுக்கு பிரதமரின் வீடு கட்டும் திட்டத்திலும் பசுமை வீடு திட்டத்திலும் பயனாளிகளுக்கு வீடுகள் கட்டி கொடுப்பதற்கு மத்திய அரசு, மாநில அரசுகள் இணைந்து திட்டத்தை செயல்படுத்திவருகிறது. அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்து உள்ள கூவாகம் நத்தம் பகுதியைச் சேர்ந்தவர் ஏழுமலை மகன் ராஜ்குமார் வயது 25. 

 

சென்னையில் ஜே.சி.பி ஆப்ரேட்டராக வேலை செய்து வருகிறார். இவர் அவ்வப்போது சென்னைக்கு வேலைக்கு சென்றுவிட்டு ஊருக்கு வருவது வழக்கம். இவருக்கு திருமணமாகி ஊரில் மனைவி பிள்ளைகள் என குடும்பம் உள்ளது. இவர்களுக்கு இட நெருக்கடி காரணமாக வீடு இல்லாமல் தவித்து வந்துள்ளார். இந்த நிலையில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் தனக்கு ஒரு வீடு வழங்குமாறு அதிகாரிகளிடம் மனு கொடுத்துள்ளார். 

 

அதிகாரிகள் இவருக்கு வீடு கட்ட உத்தரவு வழங்கவில்லை எனத் தெரிகிறது. இதனால் ஆத்திரமுற்ற ராஜ்குமார், நேற்று மாலை 3 மணி அளவில் திருநாவலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அங்கிருந்தவர்கள் அவரை தடுத்து நிறுத்தி  போலீசாரிடம் ஒப்படைத்தனர். 

 

போலீசார், ராஜ்குமார் தற்கொலைக்கு முயன்றதாக அவர் மீது வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனர். இதுகுறித்து ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் கூறும்போது ஒரு ஊரில் ஆண்டுக்கு சில பயனாளிகளை தேர்வு செய்து வீடு வழங்கப்படுகிறது. அடுத்தடுத்த ஆண்டுகளில் பயனாளிகளுக்கு தொடர்ந்து வீடு வழங்கப்படும். மேலும் ஏற்கனவே விண்ணப்பித்த ராஜகுமாரின் தாயார் மீராவிற்கும் அவரது அண்ணன் ராஜுவுக்கும் வீடு ஒதுக்கப்பட்டுள்ளது.  

 

வரும் ஆண்டுகளில் ராஜ்குமாருக்கும் வீடு ஒதுக்கீடு செய்யப்படும். இந்தத் திட்டத்தில் படிப்படியாகத்தான் ஏழை எளிய பயனாளிகள் பயன் பெறுவார்கள். அதற்கு காத்திருக்காமல் ராஜ்குமார் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது கண்டனத்துக்குரியது, வருத்தத்துக்குரியது என்று ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ராஜ்குமார் தற்கொலை முயற்சி சம்பந்தமாக வழக்குப் பதிவு செய்த திருநாவலூர் போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். அரசு வீடு கிடைக்காத விரக்தியில் இளைஞர் தற்கொலை முயற்சியில் இறங்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ளக்குறிச்சி, விழுப்புரம் தொகுதியில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் 

Published on 25/03/2024 | Edited on 25/03/2024

 

கள்ளக்குறிச்சி திமுக வேட்பாளர் மலையரசன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். திமுக கூட்டணி கட்சிகள், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ஜெய்கணேஷ், சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ்.ஆர். சிவலிங்கம், சிபிஐ, சிபிஎம், முஸ்லீம் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் வந்தனர். 

அதேபோல் அதிமுக மாவட்டச் செயலாளரும் வேட்பாளருமான குமரகுரு கூட்டணி கட்சியான தேமுதிக நிர்வாகிகளுடன் சென்று தேர்தல் அதிகாரி ஷரவண்குமாரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். திமுக, அதிமுக கட்சி வேட்பாளர்கள் ஒரே நாளில் வேட்புமனு தாக்கல் செய்ததால் இரு கட்சி மற்றும் கூட்டணி கட்சித் தொண்டர்கள் கூட்டம் கள்ளக்குறிச்சி நகரில் நிரம்பி வழிந்தது.

விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணிக் கட்சிகளின் சார்பில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் துரை. ரவிக்குமார் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவரும் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலருமான பழனியிடம் வழங்கினார். ரவிக்குமாருடன் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, விசிக பொதுச் செயலாளர் சிந்தனைச் செல்வன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமமூர்த்தி, காங்கிரஸ் கட்சியின் குலாம் மொய்தீன் உட்பட கூட்டணிக் கட்சியினர் கலந்து கொண்டனர். 

அதேபோல் பா.ம.க. வேட்பாளர் முரளி சங்கர் பாமக மற்றும் பிஜேபி கட்சி நிர்வாகிகளுடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். இவரைத் தொடர்ந்து அதிமுக சார்பில் போட்டியிடும் மாவட்ட மாணவர் அணி செயலாளர் காந்தலவாடி பாக்யராஜ், அதிமுக மாவட்டச் செயலாளர் சண்முகம், தேமுதிக மாவட்டச் செயலாளர் வெங்கடேசன் உள்ளிட்டோருடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். 

Next Story

ஏமாற்றிய வடமாநில இளைஞர்; தர்ம அடி கொடுத்த பொது மக்கள்

Published on 11/03/2024 | Edited on 11/03/2024
Two people were arrested for deceiving people by claiming were applying jewelry polish

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள நயினார்பாளையம் பஸ் ஸ்டாப் அருகே பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு வாலிபர்கள் பழைய வெள்ளி, தங்கம், கண்ணாடி பொருட்கள், ஆகியவற்றிற்கு பாலிஷ் போட்டு தருவதாக கூறி கிராம மக்களை நம்ப வைத்துள்ளனர். அப்போது ஒரிஜினல் தங்க நகைகள் உள்ளிட்ட பொருட்களை பொதுமக்களிடம் வாங்கிய அந்த பீகார் இளைஞர்கள் பாலிஷ் போட்டு கொடுத்துள்ளனர்.

இதை பயன்படுத்திக் கொண்டு அந்த பீகார் இளைஞர்கள் ஒரிஜினல் நகைகளை பாலிஷ் போடுவதாக வாங்கிக் மறைத்து வைத்துக்கொண்டு அதற்கு பதிலாக போலியான நகை மற்றும் பொருட்களை திருப்பிக் கொடுத்துள்ளனர். இந்த விவகாரம் ஊர்மக்களுக்கு தெரியவர இருவரையும் பிடித்து தர்ம அடிகொடுத்து நயினார்பாளையம் வி.ஏ.ஓவுக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த வி.ஏ.ஓ ரஞ்சித் குமார் பீகார் இளைஞர்களிடம் விசாரணை நடத்தினார். 

விசாரணையில், பீகார் மாநிலத்தை சேர்ந்த பப்புகுமார்(31), அமர குமார் யாதவ்(34) இருவரும் தான் என தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து பாலிஷ் போட வைத்திருந்த உபகரண பொருட்களுடன் இருவரையும் கீழ்குப்பம் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று ஒப்படைத்தனர். பொதுமக்கள் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.