Skip to main content

காவி உடையில் திருவள்ளுவர் படம்; அமைச்சர் ரகுபதி தெரிவித்த கருத்து என்ன?

Published on 24/05/2024 | Edited on 24/05/2024
Picture of Thiruvalluvar in saffron; What was the comment made by Minister Raghupathi?

தமிழக ஆளுநர் மாளிகை சார்பில் இன்று (24.05.2024) மாலை 5 மணிக்குத் திருவள்ளுவர் திருநாள் விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக அச்சிடப்பட்ட திருவள்ளுவர் திருநாள் விழா அழைப்பிதழ் ஒன்று வெளியாகி இருந்தது. அதன் முகப்பு பக்கத்தில் காவி உடையில் திருவள்ளுவர் உள்ளது போன்று அச்சிடப்பட்டிருந்தது.ஆளுநரின் செயலாளர் கிர்லோஷ்குமார் பெயரில் இந்த அழைப்பிதழ் வெளியிடப்பட்டது. இதனால் சர்ச்சை ஏற்பட்டது.

மேலும் காவி உடையுடன் கூடிய திருவள்ளுவர் படத்தை வெளியிட்டதைக் கண்டித்து தமிழ் அமைப்புகள் போராட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளன எனத் தகவல் வெளியாகி இருந்தது. திருவள்ளுவர் திருநாள் விழா எனக் காவி உடையில் திருவள்ளுவர் படத்துடன் ஆளுநர் மாளிகை வெளியிட்ட அழைப்பிதழில் மக்கள் மத்தியில் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து சென்னை கிண்டியில் உள்ள தமிழக ஆளுநர் மாளிகைக்குக் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. திருவள்ளுவர் காவி உடை சர்ச்சை எழுந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆளுநர் மாளிகைக்குப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. 

Picture of Thiruvalluvar in saffron; What was the comment made by Minister Raghupathi?

அதே சமயம் காவி உடையுடன் இருக்கும் திருவள்ளுவர் படத்திற்குத் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி இன்று (24.05.2024) மலர் தூவி மரியாதை செலுத்தினார். இது குறித்து ஆளுநர் மாளிகையின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்த பதிவில், “திருவள்ளுவர் திருநாள் (வைகாசி அனுஷம் வள்ளுவர் திருநாள்) எனும் புனிதமான தருணத்தில், ஆளுநர் ஆர்.என். ரவி மயிலாப்பூர் திருவள்ளுவர் கோயிலில் திருவள்ளுவரைத் தரிசனம் செய்தார். பின்னர், ஆளுநர் மாளிகையில் தெய்வப் புலவர் திருவள்ளுவருக்கு ஆளுநர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

முன்னதாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கடந்த ஜனவரி மாதம் 16 தேதி (16.01.2024) திருவள்ளுவர் காவி உடை அணிந்தபடி இருக்கும் புகைப்படத்தை எக்ஸ் சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டு திருவள்ளுவர் தினத்துக்கு வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தார். அதில், “திருவள்ளுவர் தினத்தில், ஆன்மிக பூமியான நமது தமிழ்நாட்டில் பிறந்த பெரும் புலவரும், சிறந்த தத்துவ ஞானியும் பாரதிய சனாதன பாரம்பரியத்தின் பிரகாசமான துறவியுமான திருவள்ளுவருக்கு எனது பணிவான மரியாதையைச் செலுத்துகிறேன். அவரது ஞானம் நமது தேசத்தின் சிந்தனை மற்றும் அடையாளத்தை வடிவமைத்து, வளப்படுத்தி ஒட்டுமொத்த மனிதக் குலத்துக்கு வழிகாட்டியாகவும் உத்வேகத்தின் ஆதாரமாகவும் நீடிக்கிறது. இந்தப் புனிதமான நாளில் அனைவருக்கும் எனது அன்பான நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார். இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனத்தைத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

Picture of Thiruvalluvar in saffron; What was the comment made by Minister Raghupathi?
கோப்புப்படம்

இந்நிலையில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி புதுக்கோட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் பேசுகையில், “குரங்கு கையில் பூமாலை கிடைத்தால் அதனைப் பிய்த்துக்கொண்டே தான் இருக்கும். அதுபோல என்னவோ நம்முடைய கெட்ட நேரம் அது போன்று நமக்கு ஆளுநர் வந்து வாய்த்துள்ளார். ஏற்கனவே திருவள்ளுவருக்குக் காவி உடை அணிவித்தது சர்ச்சை கிளம்பியது. திருப்பி காவி உடை அணிவித்தால் ஆளுநரை என்னதான் செய்ய முடியும். வாதத்துக்கு மருந்து உண்டு. பிடிவாதத்துக்கு மருந்து கிடையாது” எனத் தெரிவித்தார். 

சார்ந்த செய்திகள்

 

Next Story

தனியார் பேருந்து தலைகீழாகக் கவிழ்ந்து விபத்து; 20 பேர் காயம்

Published on 25/06/2024 | Edited on 25/06/2024
Private bus overturned accident; 20 people were injured

புதுக்கோட்டையில் தனியார் பேருந்து கவிழ்ந்து 20க்கும் மேற்பட்டோர் படுகாயத்துடன் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

புதுக்கோட்டையில் இருந்து புறப்பட்டு மணப்பாறை நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து அன்னவாசல் பகுதிக்கு முன்பாக உள்ள ஒன்றிய அலுவலக பகுதியில் சென்று கொண்டிருந்த பொழுது பேருந்தின் முன்பக்கம் டயர் வெடித்ததாகக் கூறப்படுகிறது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையின் நடுவில் குறுக்காக தலைகுப்புற கவிழ்ந்தது. அந்தப் பேருந்தில் 50க்கும் மேற்பட்டோர் பயணித்த நிலையில் இருபதுக்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.

அலறியடித்தபடி உள்ளே சிக்கியுள்ள பயணிகளை மீட்கும் வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது. காயங்களுடன் மீட்கப்பட்ட பயணிகள் அனைவரும் 108 ஆம்புலன்ஸ் மூலமாக அன்னவாசல், இலுப்பூர், மணப்பாறை உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். சிலருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. விபத்து குறித்து தகவல் கொடுத்தும் சம்பவ இடத்திற்கு காவல்துறை வரவில்லை என அந்தப் பகுதி மக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். அதேபோல் பேருந்து அதிவேகமாக வந்ததால்தான் இந்த விபத்து நடந்தது என அங்குள்ள ஒரு சாரார் குற்றச்சாட்டுகளை வைத்துள்ளனர்.

Next Story

'கள்ளக்குறிச்சி சம்பவம் ஒரு இருண்ட நிகழ்வு' - ஆளுநர் பேச்சு

Published on 25/06/2024 | Edited on 25/06/2024
'kallakurichi incident is a dark incident'-Governor's speech

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 5 பெண்கள் உட்பட 59 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. சிகிச்சையில் இருப்பவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகின்றனர். இதனால் இறப்புகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதே சமயம் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு கள்ளக்குறிச்சி, சேலம் மற்றும் விழுப்புரம் அரசு மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதோடு கள்ளச்சாராய உயிரிழப்பு தொடர்புடைய சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்தது.

நேற்று தமிழக பாஜக மூத்த நிர்வாகிகள் ஆளுநரைச் சந்தித்த நிலையில் இன்று அதிமுக தலைவர்கள் ஆளுநரைச் சந்தித்திருந்தனர். இந்த நிலையில் ஆளுநர் மாளிகையில்  போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் பார்வையாளர்கள் மத்தியில் உரையாற்றிய ஆளுநர் பேசுகையில், ''கள்ளக்குறிச்சியில்  விஷ சாராயம் அருந்தி 60 பேர் உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது.  கள்ளக்குறிச்சியில் நடந்தது ஒரு இருண்ட நிகழ்வு. போதைப் பொருள் புழக்கம் குறித்து இங்குள்ள அதிகாரிகளுக்கு எப்படித் தெரியாமல் உள்ளது. தமிழ்நாட்டில் போதைப் பொருட்களுக்கு இளைஞர்கள் அடிமையாகி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் போதைப்பொருள் இல்லை கஞ்சா மட்டுமே உள்ளது எனக் கூறுகின்றனர். பள்ளி, கல்லூரிகளுக்கு அருகாமையிலேயே விற்பனை செய்யப்படும் போதைப் பொருட்களை தடுக்க நடவடிக்கை எடுக்க பெற்றோர்கள் கூறுகின்றனர். பெற்றோர் உள்ளிட்டோர் கூறுவதைக் ஏற்காமல் போதைப் பொருள் இல்லை எனக் கூறி வருகின்றனர். சிந்தடிக் போதைப் பொருள்கள் உள்ளதாக பெற்றோர் கூறும் நிலையில் அதிகாரிகளுக்கு இதையெல்லாம் எப்படி தெரியாமல் உள்ளது. போதைப்பொருட்கள் புழக்கம் இருந்தும் இல்லை என அதிகாரிகள் மறுக்கிறார்கள் என்றால் அதில் ஏதாவது நோக்கம் இருக்கும்'' என்றார்.