Skip to main content

''மக்கள் சேவை ஒன்றுதான் உங்கள் லட்சியம்'' - குரூப் 4 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல்வர் அறிவுரை

Published on 27/09/2023 | Edited on 27/09/2023

 

'People's service should be the only aim'- Chief Minister advises the winners of Group 4 examination

 

2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்ற 10,205 பேருக்கு பணி ஆணை வழங்கும் நிகழ்வானது சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று தொடங்கியது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.

 

நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ''பல லட்சம் பேர் தேர்வு எழுதி லட்சத்தில் ஒருத்தராக நீங்கள் எல்லாம் தேர்வாகி வந்திருக்கிறீர்கள். இப்படி லட்சத்தில் ஒருத்தராக இருக்கக்கூடிய உங்களுக்கு மக்கள் சேவை ஒன்றுதான் லட்சியமாக இருக்க வேண்டும். அதற்காக மட்டும் தான் நீங்கள் எல்லோரும் பணியாற்ற வேண்டும். மக்களுக்காக மக்களால் நடத்தப்படுவது மக்களாட்சி. அந்த வகையில் அரசாங்கம் தீட்டுகின்ற எந்த திட்டமாக இருந்தாலும் அது மக்கள் நன்மைக்காகத்தான். அரசின் திட்டங்களையும் பல்வேறு சேவைகளையும் மக்களுக்கு கொண்டு சேர்க்கக்கூடிய மிக முக்கியமான பணியை நீங்கள் எந்தக் குறையும் இல்லாமல் நிறைவேற்ற வேண்டும்.

 

மக்கள் சேவையே மகேசன் சேவை என்று சொன்னவர் பேரறிஞர் அண்ணா. அப்படிப்பட்ட மகத்தான பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கக் கூடிய எல்லோரையும் நான் பாராட்டுகிறேன். நீங்கள் எல்லோரும் அரசு ஊழியர்களாக ஆகி இருக்கிறீர்கள். அரசு ஊழியர்களில் தன்னலம் கருதாமல் மக்களுக்காக வாழ்பவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். அதற்கு ஒரு எடுத்துக்காட்டு இந்த மேடையிலேயே நான் சொல்லியாக வேண்டும். கடந்த சனிக்கிழமை 23ம் தேதி ஒரு அறிவிப்பை வெளியிட்டேன். அதாவது இறக்கும் முன்பு உடல் உறுப்புகளை தானம் வழங்குபவர்களுடைய இறுதிச்சடங்கு இனி அரசு மரியாதையோடு மேற்கொள்ளப்படும் என்று சொல்லி இருந்தேன். மனிதநேயமிக்க உடல் உறுப்பு தானம் செய்து அரசு மரியாதையோடு அடக்கம் செய்யப்பட்ட முதல் நபர் ஒரு அரசு ஊழியர் தான்.

 

தேனி மாவட்டம் சின்னமனூரில் மூளைச்சாவடைந்த நிலையில் உடல் உறுப்பு தானம் செய்த அரசு ஊழியர் வடிவேல் உடைய உடல் நேற்று அரசு மரியாதை உடன் அடக்கம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த இறுதிச் சடங்கில் அமைச்சர் சுப்பிரமணியன் மற்றும் மாவட்ட நிர்வாகத்தை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர். வடிவேல் உடைய உடல் உறுப்புகளை தானமாக பெற்ற குடும்பங்களின் சார்பாக மட்டும் அல்ல அவருடைய குடும்பத்தினருக்கு தனிப்பட்ட என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இந்தச் செய்தி உடல் உறுப்பு தானம் பற்றிய ஒரு பெரும் விழிப்புணர்வை நிச்சயம் ஏற்படுத்தும். இந்த வகையில் அரசு ஊழியராக பணியாற்றிய வடிவேல் காலத்திற்கும் மக்களால் நினைவு கூறப்படுவார். ஒரு இயந்திரம் சிறப்பாக செயல்பட வேண்டும் என்றால், அதில் இருக்கக்கூடிய ஒவ்வொரு பாகமும் பழுது இல்லாமல் சிறப்பாக செயல்பட வேண்டும். அதுபோலத்தான் அரசு என்ற மாபெரும் இயந்திரம் சீரிய முறையில் மக்களுக்கு சேவை செய்ய அரசு ஊழியர்களாகிய நீங்களும் முழு ஈடுபாட்டுடன் பங்களிக்க வேண்டும்'' என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

''இதை பிரதமர் சார்பில் கூறுகிறேன்''- சென்னையில் ராஜ்நாத் சிங் பேட்டி

Published on 07/12/2023 | Edited on 07/12/2023

 

Minister Rajnath Singh consults with Chief Minister M.K.Stalin

 

தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான அளவிற்கு வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும், தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

 

இந்நிலையில் சென்னையில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்ய மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று (07.12.2023) டெல்லியில் இருந்து சென்னை வந்தடைந்தார். பின்னர் மழை வெள்ள பாதிப்புகளை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு செய்தார். அவருடன் அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா உள்ளிட்டோரும் சென்றனர். அதனைத் தொடர்ந்து தலைமைச் செயலகத்திற்கு சென்ற மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் ஆலோசனை நடத்தினார். இதில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக பேரிடர் மீட்பு துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.

 

Minister Rajnath Singh consults with Chief Minister M.K.Stalin

 

அதனைத் தொடர்ந்து தமிழக முதல்வரும், மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதல்வர், 'தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் சேதம் பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளது. புயல் நிவாரண நிதியாக முதற்கட்டமாக மத்திய அரசு 450 கோடியை விடுவித்துள்ளது. தமிழகத்தின் கோரிக்கைகள் தேவைகள் குறித்து மத்திய அமைச்சரிடம் மனுவாக அளித்துள்ளேன்' என்றார்.

 

தொடர்ந்து பேசிய மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், 'தமிழக மக்களின் பாதிப்பை அறிந்ததும் பிரதமர் மோடி கவலை அடைந்தார். தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய விரைவில் மத்திய குழு தமிழகம் வரும். சென்னை வெள்ள மேலாண்மை திட்டத்திற்காக 521.29 கோடி ரூபாய் வழங்கப்படும். புயல் பாதிப்பிலிருந்து தமிழகத்தை மீட்பதற்கான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும். தமிழகத்திற்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்பதை பிரதமர் சார்பில் கூறுகிறேன். தமிழக மக்களுக்கு தேவையான அனைத்து நிவாரண உதவிகளும் விரைந்து செய்யப்படும்' என்றார்.

 

 

 

 

Next Story

முதல்வருக்கு பறந்த போன் கால்; உறுதியளித்த பிரதமர்

Published on 07/12/2023 | Edited on 07/12/2023

 

Prime Minister Modi inquired from the Chief Minister of Tamil Nadu over phone

 

தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான அளவிற்கு வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

 

இந்நிலையில், புயலால் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக கேட்டறிந்தார். முன்னதாக புயல் பாதிப்புகளை சரி செய்ய இடைக்கால நிவாரணமாக 5,060 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார்.

 

அந்த கடிதத்தில், சாலைகள், பாலங்கள் உள்ளிட்ட கட்டமைப்புகள் சேதம் அடைந்திருக்கிறது. இடைக்கால நிவாரணமாக 5,060 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. சேதமடைந்த பகுதிகளை பார்வையிட மத்திய குழுவை அனுப்பி வைக்கக் கோரியும், புயல், வெள்ள பாதிப்பு குறித்த முழு விவரங்கள் சேகரிக்கப்பட்டு, பின்னர் விவர செய்தி அறிக்கை அளிக்கப்படும் எனவும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

 

தமிழக முதல்வர் எழுதியுள்ள இந்த கடிதத்தை திமுக பாராளுமன்ற உறுப்பினர் குழு தலைவர் டி.ஆர்.பாலு பிரதமர் மோடியிடம் இன்று நேரில் அளித்தார். அதனைத் தொடர்ந்து தமிழக முதல்வரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட பிரதமர் மோடி புயல் பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் இந்த உரையாடலில் தமிழகத்திற்கான அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக உள்ளதாக மோடி உறுதியளித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.