Skip to main content

எட்டு வழிச்சாலைக்கு மக்கள் ஆதரவு கொடுக்க வேண்டும்! முதல்வர் வேண்டுகோள்!!

Published on 13/12/2018 | Edited on 13/12/2018
edappadi

 

போக்குவரத்து நெரிசல், சாலை விபத்துகளில் உயிரிழப்புகளை தடுக்கவே சர்வதேச தரத்தில் எட்டு வழிச்சாலைத் திட்டம் கொண்டு வரப்படுவதால், இத்திட்டத்திற்கு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 


சேலம் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (டிசம்பர் 13, 2018) மாலை நடந்தது. ஈரடுக்கு பேருந்து நிலையம், ஐந்தடுக்கு வாகன நிறுத்துமிடம் உள்பட ரூ.166.52 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். பின்னர் அவர் பேசியது:


சர்வதேச தரத்தில் சேலம் - சென்னை எட்டு வழிச்சாலை அமைப்பதற்கான திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இப்போதுள்ள நிலவரப்படி 150 சதவீதம் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 250 மடங்காக அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. 

 


வாகன பெருக்கத்தால் சாலை விபத்துகள் பெருகும். அவற்றால் விலைமதிப்பற்ற உயிர் பலிகளும் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. அதேபோல் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்குச் செல்ல நேரமும், எரிபொருளும் விரயம் ஆகிறது. இவற்றை எல்லாம் தடுப்பதற்காகவே வெளிநாடுகளில் இருப்பதுபோல், போக்குவரத்து நெரிசலை குறைக்க எட்டு வழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டது.  

 

edappadi


ஆனால், சில அமைப்புகள் இத்திட்டத்திற்கு தடையாக இருந்து வருகின்றன. இதனால்தான் இத்திட்டம் ஜவ்வுபோல் இழுத்துக்கொண்டே செல்கிறது. எட்டு வழிச்சாலைக்கு நிலம் வழங்குபவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என அரசு ஏற்கனவே உறுதி அளித்துள்ளது. மக்களுக்கு நல்ல திட்டமாக அமையவுள்ள இத்திட்டத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும். 

 


தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகள் சிறப்பாக செயல்படுவதற்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணிதான் காரணம். எனக்கு அவர் உறுதுணையாக உள்ளார். துணை முதல்வரும், மற்ற அமைச்சர்களும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். 

 


கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களின் வாழ்வாதாரமே அழிந்து விட்டது. தென்னை மரங்கள், மாமரங்கள், தேக்கு, சவுக்கு, வெற்றிலைக்கொடி என அனைத்தும் சேதமடைந்துள்ளன. இதனைக் காணும்போது மனம் வேதனை அடைகிறது. புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் அதே வேகத்தில் புனரமைப்புப் பணிகள் நடந்து வருகின்றன. 

 


புயலால் 2.21 லட்சம் மின் கம்பங்கள் சாய்ந்து விட்டன. 26 ஆயிரம் ஊழியர்கள் மின் கம்பங்களை நடும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். உயிரை பணயம் வைத்து அவர்கள் பணியாற்றுகின்றனர். உள்ளாட்சி துப்புரவு பணியாளர்கள் 2400 பேர் தூய்மைப் பணியில் ஈடுபட்டுள்ளனர். வருவாய்த்துறையினரும் களத்தில் இறங்கி மக்களுக்கு வேண்டிய நிவாரணப் பணிகளை செய்து வருகின்றனர். அவர்கள் அனைவருக்கும் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

 


சேலத்தில் நவீன பேருந்து நிலையம் அமைப்பதற்கு மத்திய அரசு அதிகாரிகள் பார்வையிட்டுச் சென்றுள்ளனர். மின் தடை ஏற்படாமல் இருக்க, பூமிக்கடியில் மின் கேபிள்கள் பதிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சேலம் மாநகரம் மிகுந்த வளர்ச்சி அடைந்துள்ளது. எதிர்க்கட்சிகள் எதையும் செய்யவில்லை என்று குற்றம் சாட்சி வருகின்றன. அவர்களுக்கு சேலத்தின் வளர்ச்சியே பதிலாக அமையும். 

 


இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

 

  
உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி, மாவட்ட ஆட்சியர் ரோகிணி, எம்எல்ஏக்கள் செம்மலை, வெங்கடாசலம், சக்திவேல், மாநகராட்சி ஆணையர் சதீஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  
 

சார்ந்த செய்திகள்

Next Story

17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போர் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
17th century warrior headstone Kantipudi

சேலம் மாவட்டம், மாதநாயக்கன்பட்டி பெருந்தலைவர் காமராசர் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் தலைவர் தலைமை ஆசிரியர், பொறுப்பு ஆசிரியர்களாக அன்பரசி, விஜயகுமார் ஆகியோர் உள்ளனர். இப்பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின்படி ஆசிரியர்களும், மாணவர்களும் களப்பயணத்தின் போது வீரனின்  நடுகல்  ஒன்று கண்டறியப்பட்டது.

பொது ஆண்டு 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நடுகல்லில் எழுத்துகள் எதுவும் இல்லை. கல்பூமியின் மேற்பரப்பில் 2 அடி உயரமும் 1.5  அடி அகலம் கொண்டது. இந்த நடுகல்லை சுற்றி கல்திட்டை போன்ற அமைப்பும் உள்ளது . நடுகல்லில் போர் வீரனின் சிற்பம்  உள்ளது.
வேட்டைக்கு சென்று இறந்ததற்காக எடுக்கப்பட்ட நடுகல்லாக இருக்கலாம். ஆலிடாசனம் நிலையில் வில்லில் நாணில் அம்பு எய்துவது போன்றும், இடுப்பில் குரு வாளும், காதில் பத்ர குண்டலமும்,   கழுத்தில் சரப்பளி, சவுடி, முத்தாரம் அணிகலன் அணிந்திருப்பது  போன்றும் கையில் தோள்வளை  இருப்பது போன்ற உருவமைப்பு உள்ளது.

17th century warrior headstone Kantipudi

இப்பகுதி தாருகாவனத்திற்க்கு அருகில் இருப்பதால்  இந்த வீரன் வேட்டுவ தலைவனாக இருக்கலாம். இந்த நடுகல் எல்லாம் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வைக்கப்பட்டதாகும்.  தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் சார்பாக தொல்லியல் சார்ந்த வரலாற்று தகவல்களையும், அதனை பற்றிய விழிப்புணர்வையும் இன்றை இளைய தலைமுறை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பது தான் தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் நோக்கமாகும் என்கின்றனர் தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள்.

Next Story

இறுதிக்கட்ட பரப்புரை; சேலத்தில் எடப்பாடி 'ரோட் ஷோ'

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
 Final campaign; Edappadi 'Road Show' in Salem

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. இதற்கிடையில், தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தஙளது வேட்பாளர்களை அறிவித்து தீவிரப் பிரச்சாரங்கஙளை நடத்தி வருகின்றனர்.

இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியுள்ளது. இன்னும் ஒரு மணி நேரத்தில் தேர்தல் பரப்புரை முடிவடைய இருக்கின்ற நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகளும் தீவிர பரப்புரையில் இறங்கியுள்ளது. இந்நிலையில் சேலத்தில் எடப்பாடி பழனிசாமி 'ரோட் ஷோ' என்னும் வாகன பேரணியைத் தொடங்கியுள்ளார். சேலம் அஸ்தம்பட்டி ரவுண்டானாவில் தொடங்கி சேலம் டவுன் வரை இந்த ரோட் ஷோ நடைபெறுகிறது. திறந்தவெளி வாகனத்தில் கை அசைத்தபடி வேட்பாளருடன் எடப்பாடி பழனிசாமி வாகன பேரணி நடத்தி வருகிறார். அஸ்தம்பட்டி ரவுண்டானாவில் இருந்து வின்சென்ட், திருவள்ளுவர் சிலை, முதல் அக்ரகாரம், சின்ன கடைவீதி, கடைவீதி உள்ளிட்ட பகுதிகள் வழியாகச் சென்று இறுதியாகக் கோட்டை மாரியம்மன் கோவில் பகுதியில் பிரச்சாரத்தை நிறைவு செய்ய இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.