Skip to main content

மறைந்த மக்கள் மருத்துவருக்கு சொந்த ஊரில் நடந்த மவுன ஊர்வலம்...

Published on 30/01/2023 | Edited on 30/01/2023

 

People pay silent tribute to Pudukottai doctor Bhaskar

 

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் பிறந்த மருத்துவர் பாஸ்கரன் தனது மருத்துவப் பணியை மக்களுக்கான சேவையாக மட்டுமே செய்து வந்தார். அரசு மருத்துவமனையிலும் தனது தனியார் கிளினிக் வரும் அத்தனை பேரிடமும் கனிவான பேச்சாலேயே நோயை குணமாக்கும் சிறப்பைப் பெற்றிருந்தார். இதனாலேயே நோயாளிகள் அவரை தேடிச் சென்றனர். தன்னை தேடி வருவோரை நோயாளியாக பார்க்காமல் உறவாக பார்த்தார்.

 

மறமடக்கி, பட்டுக்கோட்டை, பேராவூரணி என பல்வேறு அரசு மருத்துவமனைகளில் பணி. எந்த ஊர் போனாலும் தனது சொந்த ஊரை மறக்கவில்லை. அதனாலேயே கீரமங்கலம் பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் அவரை தேடிச் சென்றனர். சிகிச்சைக்கு வந்தால் சிகிச்சை மட்டும் கொடுக்காமல், ஊர் நடப்புகளையும் கேட்டு விசாரித்து விட்டு, மருந்து மாத்திரைகள் எழுதிக் கொடுத்துவிட்டு, “பஸ்க்கு பணம் இருக்கா.. இல்லைன்னா இந்தாங்க.. கொண்டுட்டு போங்க” என்று தன் பாக்கெட்டில் இருந்து பணம் எடுத்து கொடுத்து வழியனுப்பி வைத்த ஆயிரக்கணக்கான நிகழ்வுகளும் உண்டு..

 

“நம்ம ஊருக்காரங்க காலம்பூரா தோட்டத்திலேயே வேலை செஞ்சுட்டு, உடம்புக்கு முடியலன்னதும் நம்மள நம்பி வரும் போது அவங்ககிட்ட காசு பணத்தை பறிக்கலாமா? பாவமில்லயா.. அவங்க உயிரை காப்பாற்றும் வாய்ப்பு நமக்கு கிடைச்சிருக்கு. அதை சரியா செய்யணும்” என்று சொல்பவர், அவசரமாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றால் கூட தனியார் மருத்துவமனையில் சேர்த்து அறுவை சிகிச்சை செய்து, அதற்கான கட்டணத்தை வாங்காமல் தன் சொந்த காசில் சாப்பாடும் வாங்கி கொடுத்துவிட்டு செல்வார்.

 

இப்படி புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர் மாவட்டத்தில் நூறு கிராமங்களுக்கு மேல் உள்ள மக்களின் நன்மதிப்பை பெற்ற மனிதநேய மருத்துவர் பாஸ்கரனை வாழும் கடவுளாகவே மக்கள் பார்த்தனர். பாக்கெட்டில் பணமில்லை என்றாலும் பாஸ்கர் டாக்டரிடம் நம்பி போகலாம் என்ற எண்ணம் நூறு கிராம மக்களிடமும் இருந்தது.

 

இப்படியான மருத்துவருக்கு தான் உடல்நலமின்றி, பின்பு சிகிச்சை பலனின்றி 29ந் தேதி இயற்கை எய்தினார். இந்த தகவல் காட்டுத் தீயாக பரவி, அன்று இரவில் இருந்து அவரது உடலைக் காண மக்கள் கூட்டம் கூட்டமாக மாலையோடு வந்து கதறி அழுது அஞ்சலி செலுத்திவிட்டு, இனி யாரை நம்பி மருத்துவத்திற்கு வருவோம் என்று சொல்லும் போது, அனைவரின் கண்களும் கலங்கின. ஒருவர் இறந்தால் உறவினர்கள், நண்பர்கள் வருவார்கள். ஆனால், மருத்துவர் பாஸ்கரன் இறப்பில் ஆயிரக்கணக்கான ஏழை மக்கள் கலந்து கொண்டனர். அப்போது தான் தெரிந்தது இவர் தான் மக்களை சம்பாதித்த மக்கள் மருத்துவர் என்று. 

 

பட்டுக்கோட்டையில் இறுதி அஞ்சலி ஊர்வலம் நடந்தாலும் கூட அவரது சொந்த ஊரான கீரமங்கலத்தில் மௌன அஞ்சலி ஊர்வலம் நடத்த வேண்டும் என்பது சுற்றுவட்டார மக்களின் கோரிக்கையாக இருந்தது. இதனால் கீரமங்கலம் கடைவீதியில் வர்த்தகர்கள் கடைகளை அடைத்து கருப்பு பட்டை அணிந்து ஆண்கள், பெண்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மௌன ஊர்வலத்தில் பங்கேற்றனர். கீரமங்கலம் பேருந்து நிலையத்தில் தொடங்கிய ஊர்வலம் கடைவீதி வழியாக 3 கி.மீ. சுற்றி மீண்டும் பேருந்துநிலையம் வந்தடைந்த பிறகு 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

 

இதுவரை யாருக்கும் இல்லாத அளவிற்கு சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து அவரால் பயனடைந்தவர்கள் கூட்டம் கூட்டமாக வந்து கலந்து கொண்டனர். அவர் படித்த பள்ளி ஆசிரியர்கள், பேரூராட்சி நிர்வாகத்தினர், அரசியல் கட்சி பிரமுகர்கள், அலுவலர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

 

மருத்துவர் பாஸ்கரன் இறப்பு மக்களுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

மம்தா பானர்ஜி உடல்நிலை குறித்து மருத்துவர் விளக்கம்!

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
Doctor explains Mamata Banerjee's health

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் கடந்த ஒரு மாத காலமாகத் தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வுகளை நடத்தி வருகிறது. விரைவில் தேர்தல் அறிவிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது. கூட்டணிக் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடுகள் பற்றிய பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது. ஒரு சில கட்சிகள் வேட்பாளர்களையும் அறிவித்து வருகின்றன.

அந்த வகையில் மேற்குவங்க மாநிலத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி சார்பில் 42 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை அம்மாநில முதலமைச்சரும், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி கடந்த 10 ஆம் தேதி (10.03.2024) வெளியிட்டு 42 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகம் செய்தார். இதனையடுத்து மம்தா பானர்ஜி தீவிர தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறார். இந்த சூழலில் மம்தா பானர்ஜிக்கு நெற்றியில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். நெற்றியில் இருந்து முகத்தின் வழியாக ரத்தம் வழியும் புகைப்படத்தை திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டது.

Doctor explains Mamata Banerjee's health

அந்த பதிவில், “மம்தா பானர்ஜிக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. தயவுசெய்து அவரை உங்களின் பிரார்த்தனை மூலம் நல்ல நிலைக்கு வர வையுங்கள்” எனப் பதிவிடப்பட்டிருந்தது. மம்தா பானர்ஜி கொல்கத்தா வூட்பர்ன் பிளாக்கில் உள்ள எஸ்.எஸ்.கே.எம். மருத்துவமனையின் விபத்து மற்றும் அவரச சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். மேலும் மம்தா பானர்ஜிக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ஆந்திர பிரதேச முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட பலவேறு தலைவர்களும் தங்களது ஆறுதலை தெரிவித்துள்ளனர்.

Doctor explains Mamata Banerjee's health!

இந்நிலையில் எஸ்.எஸ்.கே.எம். மருத்துவமனையின் இயக்குநரும், மருத்துவருமான மணிமோய் பந்தோபாத்யாய் கூறும்போது, “மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று (14.03.2024) இரவு 07:30 மணியளவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னால் இருந்து ஏற்பட்ட அதிர்வு காரணமாக வீட்டில் அவர் விழுந்த தடயம் உள்ளது. இதனால் அவரது பெருமூளை அதிர்ச்சி ஏற்பட்டு நெற்றியிலும் மூக்கிலும் கூர்மையான வெட்டு காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. ஆரம்பத்தில் முதலில் மூளை மற்றும் நரம்பியல், மருந்தவியல் மற்றும் இதயவியல் ஆகிய துறையின் தலைமை மருத்துவர்கள் குழுவினரை கொண்டு, உடல் நிலை குறித்து பரிசோதித்து உறுதிபடுத்தப்பட்டது.

Doctor explains Mamata Banerjee's health!
மருத்துவர் மணிமோய் பந்தோபாத்யாய்

நெற்றியில் மூன்று தையல்கள் போடப்பட்டன. ஈ.சி.ஜி., சி.டி. ஸ்கேன் போன்ற பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. மம்தா பானர்ஜி தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. ஆனால் அவர் வீட்டிற்கு செல்ல விரும்பினார். இதனால் அவரை தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணித்து வருவதுடன் மருத்துவர் குழுவின் ஆலோசனையின்படி தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படும். அவருக்கு நாளை (15.03.2024) மீண்டும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அதற்கேற்ப சிகிச்சை அளிப்பது குறித்து முடிவு செய்யப்படும்” எனத் தெரிவித்தார். 

Next Story

மருத்துவ சீட்டு தராத கவுன்சில்; சாதனை படைத்த உலகில் உயரம் குறைவான மருத்துவர்

Published on 07/03/2024 | Edited on 07/03/2024
The world's shortest man holds the record to become doctor

3 அடி 4 அங்குலம் உயரம் கொண்ட 23 வயது இளைஞர், பல தடைகளை தாண்டி உலகில் உயரம் குறைவான மருத்துவர் என்ற சாதனை படைத்திருக்கிறார். இவரது சாதனைக்கு பலதரப்பில் இருந்து பாராட்டுகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன. 

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர் கணேஷ் பாரய்யா (23). விவசாய குடும்பத்தைச் சேர்ந்த கணேஷ் பாராய்யாவுக்கு சிறு வயதில் இருந்தே மருத்துவராக ஆக வேண்டும் என்ற கனவு இருந்துள்ளது. அதற்காக பள்ளிப்படிப்பை முடித்த கணேஷ் பாராய்யா, மருத்துவ படிப்பை மேற்கொள்வதற்காக நீட் தேர்விற்கு தயாராகினார். அதன் பிறகு, நீட் தேர்வில் 233 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றார்.

அந்த மதிப்பெண் எடுத்தும் கூட, கணேஷின் உயரத்தை காரணமாக காட்டி இந்திய மருத்துவ கவுன்சில், அவர் மருத்துவராக தகுதி இல்லை என மருத்துவ சீட்டு கொடுக்க மறுத்துவிட்டது. அதன் பிறகு அவர், தான் படித்த பள்ளியின் முதல்வரின் உதவியோடு, மாவட்ட ஆட்சியர், மாநிலக் கல்வி அமைச்சரை அணுகியுள்ளார். அதன் பின்னர், அவர் குஜராத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். ஆனால், அந்த வழக்கு குஜராத் நீதிமன்றத்தில் தோல்வி அடைந்த பிறகும் கூட கணேஷ் நம்பிக்கை இழக்காமல் உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளார். 

The world's shortest man holds the record to become doctor

பல மாதங்களாக போராடிய கணேஷ், கடந்த 2018ஆம் ஆண்டில் வெற்றி பெற்று 2019ஆம் ஆண்டில் மருத்துவ சீட்டை பெற்றார். இப்போது அவர், மருத்துவ படிப்பை முடித்த பிறகு பாவ்நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் பயிற்சியாளராக பணிபுரிந்து வருகிறார். 

இது தொடர்பாக கணேஷ் பாராய்யா செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “எனது உயரம் 3 அடி என்றும், அவசரகால வழக்குகளை என்னால் கையாள முடியாது என்றும் இந்திய மருத்துவ கவுன்சில் குழு என்னை நிராகரித்துவிட்டது. பாவ்நகர் கலெக்டரின் வழிகாட்டுதலின் பேரில், நான் குஜராத் உயர்நீதிமன்றத்திற்கு சென்றேன். 2 மாதங்களுக்குப் பிறகு, நாங்கள் வழக்கில் தோல்வி அடைந்தோம். அதன் பிறகு, உச்ச நீதிமன்றத்திற்குச் சென்று வழக்கு தொடுத்தோம். நான் மருத்துவ சீட்டு பெறலாம் என்று கடந்த 2019ஆம் ஆண்டில், உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு வந்தது. 

The world's shortest man holds the record to become doctor

அதன் பின்னர், எனக்கு பாவ்நகரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் அட்மிஷன் கிடைத்தது. எனது மருத்துவ பயணமும் தொடங்கியது. நோயாளிகள் என்னைப் பார்க்கும் போதெல்லாம் முதலில் திடுக்கிட்டார்கள். சிறிது நேரத்தில், அவர்கள் என்னை ஏற்றுக்கொண்டார்கள். அவர்களின் ஆரம்ப நடத்தையையும் நானும் ஏற்றுக்கொண்டிருக்கிறேன். அவர்கள் என்னுடன் அன்பாகவும் நேர்மறையாகவும் நடந்து கொள்கிறார்கள்” என்று கூறினார்.