Skip to main content

 பெற்றோருடன் சென்ற காதல் மனைவி; விரட்டியடிக்கப்பட்ட இளைஞர் 

Published on 15/06/2024 | Edited on 15/06/2024
parents of the girl who took away her love wife

வேலூர், சத்துவாச்சாரிக்கு அருகேயுள்ள அலமேலுமங்காபுரம் அழகிரி நகரைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவரது மகன் மணிகண்டன்(21). இவரும், காட்பாடி அருகேயுள்ள குப்பத்தாமோட்டூர் கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண்ணும் காதலித்துவந்தனர். இது தெரியவர இளம்பெண்ணின் பெற்றோர் கண்டித்து வந்திருக்கின்றனர். 

இந்த நிலையில், எதிர்ப்பைமீறி கடந்த 3-ஆம் தேதி இளம்பெண்ணை தனது வீட்டுக்கு அழைத்து வந்து திருமணம் செய்துகொண்டார் மணிகண்டன். இரண்டு நாள்கள் தேடி அலைந்த பிறகே மகள் தங்கியுள்ள வீட்டை பெற்றோர் கண்டுபிடித்தனர். கடந்த 5-ஆம் தேதி, உறவினர்களுடன் அங்குவந்த இளம்பெண்ணின் பெற்றோர் சமாதானம் செய்து மகளை மட்டும் தங்களுடன் அழைத்துச் சென்றுவிட்டனர். 

இதையடுத்து, காதல் மனைவியைத் தேடி கடந்த 9-ஆம் தேதி அவரது வீட்டுக்கு மணிகண்டன் சென்றுள்ளார். அங்கு காதல் மனைவி இல்லை. வீட்டில் இருந்த பெண்ணின் பெற்றோர் ஆத்திரப்பட்டு மணிகண்டனை துரத்தியடித்திருக்கின்றனர். இந்த நிலையில், தனது காதல் மனைவியை அவரது பெற்றோர் மறைத்துவைத்திருப்பதாகவும், அவரை மீட்டு தன்னுடன் சேர்த்து வைக்கக் கோரியும் மணிகண்டன் அளித்துள்ள புகார் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில், திடீரென வேலூரில் இருந்து 250 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பெங்களூரில் இருந்து கைப்பேசி அழைப்பு ஒன்று மணிகண்டனுக்கு வந்துள்ளது. அதில், “நான் பெங்களூரில் இருக்கிறேன். என்னை வந்து அழைத்துச் செல்” என அவரின் காதல் மனைவி கூறியுள்ளார். உடனடியாக பெங்களூர் விரைந்து சென்ற மணிகண்டன் பெண்ணை நேரில் சந்தித்து அழைத்து வந்து வேலூர் சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் நேற்று (14.06.2024) தன்னையும் தன் மனைவியும் காப்பாற்றுங்கள் எனத் தஞ்சம் அடைந்துள்ளனர்.

சார்ந்த செய்திகள்

 

Next Story

ஆடிட்டர் வீட்டில் 235 பவுன் நகை திருட்டு; போலீசார் விசாரணை

Published on 18/06/2024 | Edited on 18/06/2024
jewelery theft from auditor's home; Police investigation

ஈரோட்டில் ஆடிட்டர் வீட்டில் 235 பவுன் நகை திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு சூரம்பட்டி என். ஜி. ஜி. ஓ காலனி 7-வது வீதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (69). ஆடிட்டராக பணியாற்றி வருகிறார். கடந்த 8-ந் தேதி காலை மனைவி சாதனாவுடன் தேனிக்கு சென்றார். மறுநாள் காலை அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. மர்ம நபர் ஒருவர் அவரது வீட்டின் பூட்டை உடைத்து 235 பவுன் நகைகள், ரூ.48 லட்சம் ரொக்க பணத்தையும் திருடிச் சென்றார்.

சுப்பிரமணியின் புகாரைத் தொடர்ந்து சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையனை தேடி வருகின்றனர். சிசிடிவி கேமரா காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு கொள்ளையனை தேடி கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு சென்ற கிரைம் போலீசார் 9 பேர் முகாமிட்டு கொள்ளையனை பிடிக்க தீவிர முயற்சி மேற்கொண்டனர். ஆடிட்டருக்கு நெருக்கமானவர்கள் மூலம் தகவல் கசிந்து மர்ம நபர் கைவரிசை காட்டியிருக்கலாம் என தெரியவந்துள்ளது.

இது குறித்து போலீசார் கூறியதாவது, 'வீட்டை பூட்டிவிட்டு ஆடிட்டர் குடும்பத்துடன் வெளியூர் செல்வதை முன்கூட்டியே அறிந்து மர்ம நபர் காரில் வந்து திருட்டில் ஈடுபட்டுள்ளனர். மொபைல் போன் டவர் அடிப்படையாகக் கொண்டு மர்ம நபரை கண்டறிய தீவிரமாக முயற்சி செய்து வருகிறோம். பெங்களூரைச் சேர்ந்த பழைய குற்றவாளிகள் கைரேகைகளுடன் மர்ம நபரின் கைரேகை ஒப்பிடப்பட்டு வருகிறது. 400 -க்கும் மேற்பட்ட சி.சி.டி.வி கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்து வருகிறோம்' என தெரிவித்துள்ளனர்.

Next Story

பகலில் அர்ச்சகர், இரவில் திருடன்; கோவில் நகை முதல் இருசக்கர வாகனம் வரை  திருட்டு!

Published on 18/06/2024 | Edited on 18/06/2024
priest stole everything from temple jewels to two-wheelers

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் நகர பகுதியில் கடந்த சில நாட்களாக இருசக்கர வாகன திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சங்கராபுரம் காவல் நிலைய போலீசார் சங்கராபுரம் நகரப்பகுதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ரோந்து பணிகளை தீவிரப்படுத்தி இருசக்கர வாகன கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளியை கைது நடவடிக்கைகளை மேற்கொண்டனர். 

அந்த வகையில் சங்கராபுரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கொளத்தூர் சங்கராபுரம் - திருக்கோவிலூர் சாலையில் சங்கராபுரம் காவல் நிலைய போலீசார் மேற்கொண்ட வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த கணியாமூர் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர் மீது சந்தேகம் அடைந்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். 

இதனைத் தொடர்ந்து ராஜேஷ் மீது சந்தேகம் அடைந்த போலீசார் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டதில் ராஜேஷ் கனியாமூர் பகுதியில் உள்ள சிவன் கோயிலில் அர்ச்சகராக பணியாற்றி வருவதும் வயிற்று பிழைப்பிற்காக சங்கராபுரம் கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் இருசக்கர வாகன திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததையும் ஒப்புக்கொண்டார். தொடர்ந்து போலீசார் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், பாசார் கிராமத்தில் உள்ள சிவன் கோயிலில் சிவன் கழுத்தில் இருந்த ஒன்றரைப் பவுன் தாலியை திருடியதையும் ஒப்புக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருசக்கர வாகன திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட கோயில் அர்ச்சகரான ராஜேஷ் என்பவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து சுமார் 4 லட்சம் மதிப்பிலான ஆறு இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து கைது செய்யப்பட்ட ராஜேஷ் சங்கராபுரம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

கள்ளக்குறிச்சி மற்றும் சங்கராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருசக்கர வாகன திருட்டு சம்பவம் தொடர்பாக பதிவான சிசிடிவி காட்சிகளின் அடிப்படையிலும் போலீசாரின் தீவிர வாகனத்தை அணியின் காரணமாகவும் இருசக்கர வாகன திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட கோயில் அர்ச்சகரை போலீசார் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.