Skip to main content

பயன்பாடு இல்லாத ஓ.என்.ஜி.சி கிணற்றை மூட வல்லுநர்கள் குழு ஆய்வு!

Published on 07/12/2021 | Edited on 07/12/2021

 

 Panel of experts to close unused ONGC well

 

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகாவில் கடந்த 20 வருடங்களுக்கு முன்பு நல்லாண்டார்கொல்லை, கருக்காகுறிச்சி, வானக்கண்காடு, கோட்டைக்காடு, புதுப்பட்டி உள்பட 8 இடங்களில் எண்ணெய் எடுப்பதற்காக ஓ.என்.ஜி.சி நிறுவனம் சுமார் 10 ஆயிரம் அடி ஆழம் வரை ஆழ்குழாய் கிணறு அமைத்து சோதனை செய்தனர். ஆனால் வருமானத்தை விட செலவு அதிகமாகும் என்பதால் இந்த ஆழ்குழாய் கிணறுகளிலிருந்து எண்ணெய் எடுக்கும் திட்டத்தை நிறுத்தி வைத்திருந்தனர். ஆனால் நில உரிமையாளர்களுக்கு குத்தகை வழங்கி வந்தனர்.

 

கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போட்ட நிலையில் விவசாயிகள் இந்த திட்டத்திற்கு எதிராக போராட்டங்களை நடத்தினார்கள். நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டம் அறிவிக்கப்பட்ட நிலையில் பெரிய அளவில் வெடித்த போராட்டம் தொடர்ந்து 196 நாட்கள் நடந்தது. அப்போது தமிழகத்தில் விளை நிலங்களை அழித்து ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதிக்க கூடாது, ஏற்கனவே எண்ணெய் எடுக்க அமைக்கப்பட்ட ஆழ்குழாய் கிணறுகளைப் பாதுகாப்பாக மூடி விவசாயிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக இருந்தது. அப்போதைய ஆட்சியாளர்களும் மாவட்ட நிர்வாகமும் கோரிக்கையை ஏற்பதாக உறுதியளித்த பிறகு பல கிராமங்களில் நடந்த போராட்டம் நிறுத்தப்பட்டது.

 

பயன்படுத்தப்படாமல் உள்ள ஆழ்துளைக் கிணறுகளை பாதுகாப்பாக மூட ஓ.என்.ஜி.சி நிறுவனம் முன்வந்து சில மாதங்களாக வல்லுநர்கள் குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். புதுப்பட்டியில் மூடப்படும் ஆழ்குழாய் கிணறு மற்றும் கட்டுமானங்களிலிருந்து சேகரிக்கப்படும் மண், ஜல்லியை மாவட்ட வளர்ச்சிப் பணிகளுக்கு வழங்க ஓ.என்.ஜி.சி அதிகாரிகள் மாவட்ட ஆட்சியரிடம் ஒப்புதல் கடிதம் கொடுத்திருந்தனர்.

 

இந்தநிலையில் வானக்கண்காடு கிராமத்தில் உள்ள தரைமட்ட எண்ணெய் ஆழ்குழாய் கிணற்றை மூட 2 வது முறையாக வல்லுநர் குழுவினர் வந்து ஆய்வு செய்துள்ளனர். இந்த குழுவில் ஓ.என்.ஜி.சி  புவியியல் ஆய்வு பொறியாளர் அருண்குமார், கட்டுமானப் பொறியாளர் எழில்வாணன், கனரக வாகன தலைமை கட்டுப்பாட்டு அதிகாரி மதிவாணன், பாதுகாப்பு அதிகாரி லோகநாதன், நிலமெடுப்பு வட்டாட்சியர் சந்திரசேகரன் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இவர்களின் அறிக்கையைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுச்சூழல்துறை அனுமதிபெற்று வானக்கண்காடு எண்ணெய் ஆழ்குழாய் கிணறு மூடப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வேங்கைவயல் விவகாரம்; நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
The vengaivayal Affair Court action order

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற 20 நாளில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

அதன்படி கடந்த ஆண்டு ஜனவரி 14 ஆம் தேதி முதல் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் இந்த வழக்கை விசாரணை செய்து வருகின்றனர். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக குற்றவாளிகளைக் கண்டறிய உண்மை கண்டறியும் சோதனையும், வேங்கைவயல், இறையூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட 31 பேரிடமும் டி.என்.ஏ. பரிசோதனைகளையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொண்டனர். ஒரு காவலர் உட்பட 2 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் வேங்கைவயல் விவகாரத்தில் மேலும் 3 பேருக்கு குரல் மாதிரி பரிசோதனை மேற்கொள்ள புதுகோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் சிபிசிஐடி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் 3 பேருக்கு குரல் மாதிரி பரிசோதனை மேற்கொள்ள அனுமதி வழங்கியுள்ளது. 

Next Story

பணிமனையிலிருந்து கடத்தப்பட்ட அரசு பேருந்து; அதிர்ச்சியளிக்கும் பின்னணி

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
government bus hijacked from the workshop met with an accident

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் இருந்து ஏராளமான பேருந்துகள் இயக்கப்படுகிறது. இரவு நேரங்களில் பணிமனைக்கு வரும் பேருந்துகளில் பழுதுபார்க்க வேண்டிய பேருந்துகளை பணிமனைக்குள்ளும் மற்ற பேருந்துகளை சாலை ஓரத்தில் நீண்ட வரிசையாகவும் நிறுத்திவிட்டு ஓட்டுநர் நடத்துநர்கள் ஓய்வுக்கு செல்வது வழக்கம்.

நேற்று இரவும் இதே போல சாலை ஓரம் 12 பேருந்துகள் நிறுத்தப்பட்டிருந்தது. ஊழியர்கள் ஓய்வு அறைக்கு ஓய்வெடுக்கச் சென்றுவிட்டனர். இன்று சனிக்கிழமை அதிகாலையில் ஓரியூர் அருகே வண்டாத்தூர் கிராமத்தில் அரசு பேருந்து ஒன்று கண்டெய்னர் லாரியில் மோதி விபத்து என்று தகவல் வர போக்குவரத்து கழக அதிகாரிகள் வெளியே சென்று பார்த்த போது அறந்தாங்கியில் இருந்து திருவாடனை செல்லும் TN 55 N 0690 பேருந்தை காணவில்லை. அந்த பேருந்து தான் விபத்திலும் சிக்கியிருந்தது தெரிய வந்தது. சத்தம் கேட்டு கிராம மக்கள் ஓடிவந்து பார்த்த போது கண்டெய்னர் ஓட்டுநர் காலில் பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்தார். அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து நடந்த இடத்தில் இருந்து சற்று தூரத்தில் ஒரு நபர் நான் தான் பஸ் ஓட்டி வந்தேன் என்று சொல்லிக்கொண்டிருக்க அவரைப் பார்த்த பலரும் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று அவரை கண்டுகொள்ளவில்லை.

government bus hijacked from the workshop met with an accident

ஆனால் அந்த நபரோ நான் தான் பஸ் ஓட்டுனேன் லாரியில மோதிடுச்சு. அதுல எனக்கு கால்ல சின்ன காயம் பாருங்க என்று காலில் உள்ள சிறிய ரத்த காயத்தை காட்டியுள்ளார். அதன் பிறகு அந்த நபர் அறந்தாங்கி அழைத்துவரப்பட்டு விசாரிக்கும் போது ஒரே பதில் தான், ‘நான் தான் பஸ் எடுத்துடு போனேன். லாரியில மோதிடுச்சு கால்ல காயம்...’ என்ற ஒன்றைத் தவிர வேறு எதுவும் சொல்லத் தெரியவில்லை. அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

போலீசார் தலைசுற்றி நிற்க அந்த நபரின் படத்தைப் பார்த்ததும் நமக்கு கடந்த 13 ந் தேதி அறந்தாங்கி அருகே ஆவணத்தான்கோட்டையில் இருந்து ஒரு டாடா ஏஜ் வாகனத்தை எடுத்துக் கொண்டு 15 கி மீ தூரம் சென்றதும் கீரமங்கலம் கடந்து ஆவணத்தில் வைத்து பிடிக்கப்பட்டதும் தெரிந்ததால் 13 ந் தேதி எடுக்கப்பட்ட அந்த மனநலம் பாதிக்கப்பட்ட நபரின் படத்தை தேடிப் பார்த்த போது இரண்டும்ஒரே நபர் தான். கடந்த வாரம் டாடா ஏஸ் வாகனம் ஓட்டிய அன்று அணிந்திருந்த அதே சட்டை தான் இன்று பஸ் எடுத்துச் சென்ற போதும் போட்டிருந்தார்.

நன்றாக வாகனம் ஓட்டத் தெரிந்த இந்த நபர் ஏதோ காரணங்களால் மனநலம் பாதிக்கப்பட்டு ஊர் ஊராக சுற்றிதிரிந்தாலும் வாய்ப்புக் கிடைக்கும் போது வாகனங்களை ஓட்டிச் சென்றுவிடுகிறார் என்பது தெளிவாகிறது. நேற்று இரவு இந்த நபர் தான் பணிமனை அருகே சுற்றிவந்தார் என்கிறார்கள் போக்குவரத்துக்கழக ஊழியர்கள். மனநலம் பாதிக்கப்பட்ட இந்த நபரால் இதுவரை 2 சம்பவங்கள் நடந்துள்ளது. இவரை மனநல சிகிச்சை மையத்தில் சேர்த்து சிகிச்சை அளிக்காமல் வெளியில் விட்டால் இன்னும் எத்தனை வாகனங்களை ஓட்டிச் சென்று விபத்து ஏற்படுத்துவாரோ? என்று கவலை தெரிவிகின்றனர் அப்பகுதியினர்.