Skip to main content

விவசாயியைத் தாக்கிய காவல்துறை ஆய்வாளர், உதவி ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: பி.ஆர்.பண்டியன்

Published on 17/04/2020 | Edited on 17/04/2020

 

தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கம் அகரம் கண்டிகை கிராமத்தைச் சேர்ந்த க.கார்த்திக் என்ற விவசாயி கடந்த 13-ம் தேதி காலையில் தன் நிலத்தில் விளைந்த காய்கறிகளைச் சந்தையில் விற்பனை செய்வதற்காகத் தனது இரு சக்கரவாகனம் மூலம் கொண்டு செல்லும் போது திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் காவல் நிலைய ஆய்வாளர் ஜெயவேலு தாமரைப்பாக்கம் கூட்ரோடு அருகே கார்த்தியை வழிமறித்து காய்கறியுடன் வாகனத்தைக் கைப்பற்றி உடன் இருந்த உதவி ஆய்வாளர் சுரேஷிடம் ஒப்படைத்து விட்டு  வேறு பகுதிக்குச் சென்று விட்டார். 
 

ccc


 

வாகனத்தைக் கொடுக்காமல் 3 மணி நேரம் காக்க வைத்துள்ளனர். காய்கறிகள் பூ அனைத்தும் வீணாகிவிடும் எனக் கெஞ்சியும் மனமிறங்காத காவல்துறையினர் அராஜக செயலில் ஈடுபட்டுள்ளனர். 
 

இதனால் மனமுடைந்த விவசாயி கார்த்தி காய்கறிகளைச் சாலையில் வீசி தனது எதிர்ப்பை வெளிப்படுத்திய நேரத்தில் எதிர்பாராத விதமாக திருவள்ளூர் மாவட்ட சிறப்பு டிஎஸ்பி வளர்மதி சம்பவ இடத்திற்கு வந்து சம்பவத்தைக் கேட்டறிந்த விட்டு ஆய்வாளர் வந்து வாகனத்தை விடுவிப்பார் என்று சொல்லி தனது பொருப்பைத்  தட்டிக் கழித்துச் சென்று விட்டார். 
 

சிறிது நேரம் கழித்து மீண்டும் சம்பவ இடத்திற்கு வந்த ஆய்வாளர் ஜெயவேலு மற்றும் காவலர்கள் சிலரோடு விவசாயி கார்த்தியை அடித்து துன்புறுத்தி ஜீப்பில் ஏற்றி காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று பின்னர் விடுவித்துள்ளனர். 
 

இச்செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இது குறித்து இணையதளங்களில் பதிவிட்டதை அறிந்த மாவட்ட காவல் கண்கானிப்பாளர் அரவிந்தன் IPS அவர்கள் பாதிக்கப்பட்ட விவசாயி கார்த்தியைத் தனது அலுவலகத்திற்கு நேரில் அழைத்து வருத்தம் தெரிவித்ததோடு உரிய துறை நடவடிக்கை மேற்க்கொள்வதாக உறுதியளித்திருப்பது ஆறுதல் அளிக்கிறது. 
 

http://onelink.to/nknapp


உலகமே பேராபத்தில் தள்ளப்பட்டுள்ள நிலையில் மற்றவர்களுக்கு உணவளிக்க வேண்டும் என்ற உயரிய நோக்கோடு விவசாயிகள் தனது இரத்த வியர்வை சிந்தி உழைத்து வருகின்றனர். 
 

உயிர்க் கொல்லி தொற்று நோயான கரோனாவை எதிர்த்து மக்களைப் பாதுகாக்க தமிழக அரசோடு இணைந்து தனது உயிரைப் பணையம் வைத்து காவல்துறை மனித நேயத்தோடு செயல்பட்டு வரும் நிலையில் உயர் பொறுப்பு உள்ள வளர்மதி போன்ற ஒரு சிலரின் பொருப்பற்ற செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன். காவல் ஆய்வாளர் ஜெயவேலு, சுரேஷ் போன்றவர்களின் அநாகரிக நடவடிக்கையால் காவல் துறையில் கரும்புள்ளி ஏற்படுவது வருத்தமளிக்கிறது. எதிர்காலத்தில் இது போல் மனித நேயமற்ற செயல் நடைபெறா  வண்ணம் தமிழக அரசு உரிய துறை நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறேன். இவ்வாறு கூறியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

எல்.முருகன் மீது வழக்குப் பதிவு

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Case registered against L. Murugan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அரசியல் கட்சிகள் தீவிரமான தேர்தல் பரப்புரையில் இறங்கிய நிலையில், மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனைகளில் இறங்கியுள்ளனர். இந்நிலையில், தேர்தல் நடத்தை வழிமுறைகளை மீறியதாக நீலகிரி பாஜக வேட்பாளர் எல்.முருகன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 25 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய வந்த மத்திய இணை அமைச்சரும் நீலகிரி நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளருமான எல்.முருகன் பல்வேறு கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தியதுடன் உதகை அருகே உள்ள கிராமம் ஒன்றுக்குச் சென்று எந்த அனுமதியும் பெறாமல் 100க்கும் மேற்பட்டோர் ஆலோசனையில் ஈடுபட்டதாக கூறப்பட்டது. இதுகுறித்து தேர்தல் பறக்கும் படையின் தலைவராக உள்ள துணை வட்டாட்சியர் தனலட்சுமி தேனாடுகம்பை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் தேர்தல் நடத்தைகளை மீறியதாக எல்.முருகன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Next Story

பூச்சிக்கொல்லி மருந்தா? பயிர்க்கொல்லி மருந்தா? - போராடும் விவசாயிகள்! நடவடிக்கை எடுக்கத் தயங்கும் அதிகாரிகள்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Farmers struggle at Pudukkottai District Collectorate

திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் சேர்பட்டி அருகே மறவனூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி செந்தில்குமார் 10 ஏக்கரில் நெல் பயிர் நடவு செய்துள்ளார். கதிர் வரும் நிலையில் இலைசுருட்டுப்புழு காணப்பட்டதால் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உள்ள ஒரு தனியார் பூச்சிக்கொல்லி மருந்துக் கடையில் பூச்சிக்கொல்லி மருந்து வாங்கிச் சென்று 8.5 ஏக்கருக்கு தெளித்துள்ளார்.

பூச்சிக்கொல்லி மருந்து தெளித்து சில நாட்களில் பயிர்கள் கருகத் தொடங்கி ஒரு வாரத்தில் முழுமையாக கருகியது. சம்பந்தப்பட்ட மருந்துக் கடையில் கேட்டதற்கு சரியான பதில் இல்லாததால் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டார் விவசாயி செந்தில்குமார். இதனையடுத்து வயலுக்கே வந்து ஆய்வு செய்த வேளாண்துறை அதிகாரிகள் பூச்சிக்கொல்லி மருந்தால் தான் பயிர்கள் கருகிவிட்டதாக சான்றளித்தனர்.

இதனையடுத்து விராலிமலை பூச்சிக்கொல்லி மருந்துக்கடை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், வியாழக்கிழமை தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் துணைச் செயலாளர் சேகர் முன்னிலையில் ஏராளமான விவசாயிகள் கருகிய பயிர்களுடன் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி வந்தனர்.

கருகிய பயிர்களுடன் வந்த விவசாயிகளை ஆட்சியர் அலுவலகத்திற்குள் அனுமதிக்காததால் நுழைவாயிலிலேயே கருகிய பயிர்களை கொட்டியும் கையில் வைத்துக் கொண்டும் ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டம் செய்தனர். அங்கு வந்த போலீசாரும் வருவாய்த் துறை அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாகக் கூறிய பிறகு ஆட்சியர் அலுவலக நுழைவாயில் போராட்டத்தை விவசாயிகள் முடித்துக் கொண்டனர்.

ஆனால் வேளாண்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் பிச்சத்தான்பட்டியில் திருச்சி மாவட்ட விவசாயிகள் இருவர் செல்போன் கோபுரத்தில் ஏறிவிட்டனர். அதேபோல மற்றொரு குழு விவசாயிகள் விராலிமலை வேளாண் இணை இயக்குநர் அலுவலகத்திற்குச் சென்ற விவசாயிகள் அலுவலகத்திற்குள் நுழைந்து நடவடிக்கை எடுக்கும் வரை போகமாட்டோம்  என்று அங்கேயே படுத்துவிட்டனர்.

அதன் பிறகே சம்பந்தப்பட்ட விராலிமலை பூச்சிக்கொல்லி மருந்துக் கடையை அதிகாரிகள் மூடினர். பூச்சிக்கொல்லி மருந்து கேட்டால் பயிர்க்கொல்லி மருந்து கொடுத்து 8.5 ஏக்கர் நெல் பயிர்களைக் கொன்ற பூச்சி மருந்துக்கடை உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். கடையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு கீரமங்கலத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்பு காலாவதியான பூச்சிக்கொல்லி மருந்துகளை புதிய லேபிள் ஒட்டி புதிய மருந்தாக விற்பனைக்கு வைத்திருந்த சுமார் 1500 மருந்துப் பாட்டில்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் இப்போது நடவடிக்கை எடுக்க தயக்கம் ஏன் என்ற கேள்வி எழுப்புகின்றனர்.