Skip to main content

பொய் வழக்கைக் கைவிட வேண்டும்! - பெ.மணியரசன் முதலமைச்சருக்கு கோரிக்கை!

Published on 09/10/2020 | Edited on 09/10/2020

 

 P. Maniyarasan's request to the Chief Minister

 

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ஒரு கோரிக்கை வைத்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறக்கையில்..

புதுக்கோட்டை மாவட்டம் கல்லாக்கோட்டையில் உள்ள கால்ஸ் என்ற தனியார் சாராய உற்பத்தி ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தித் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் மகளிர் அமைப்பான மகளிர் ஆயத்தில் உள்ள பெண்கள் 14.05.2019 அன்று அந்த ஆலை முன் மறியல் போராட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தார்கள்.

 

1. தமிழ்நாட்டில் முழு மது விலக்கைச் செயல்படுத்த வேண்டும்; 

 

2. கால்ஸ் டிஸ்ட்டிலரீஸ் (KALS Distileries Pvt. Ltd.) என்ற சாராய உற்பத்தி ஆலை கல்லாக்கோட்டையில் நிறுவப்பட்ட பின் அது அன்றாடம் மிகமிக அதிகமாக நிலத்தடி நீரை உறிஞ்சி, சாராய உற்பத்திக்குப் பயன்படுத்துவதால், கல்லாக்கோட்டையிலும் அதைச் சுற்றியுள்ள 10 கிராமங்களிலும் நிலத்தடி நீர் மிக மிக ஆழத்திற்குப் போய்விட்டது. இதனால் ஆழ்குழாய் மூலம் நிலத்தடி நீரைப் பயன்படுத்தி சாகுபடி செய்து வந்த உழவர்களுக்கு நிலத்தடி நீர் வற்றி, நிலங்களைத் தரிசாகப் போட்டுள்ளார்கள்.  

 

3. நிலத்தடி நீர் வற்றியதால் – அவ்வூரில் செயல்பட்டு வந்த தமிழ்நாடு அரசு வேளாண் பண்ணையை மூடி விட்டார்கள்.



இக்காரணங்களை முன்வைத்து கால்ஸ் சாராய ஆலையை மூட வலியுறுத்தி மகளிர் ஆயம் பெண்கள் 14.05.2019 அன்று காலை 10.30 மணி அளவில் கல்லாக்கோட்டை கடைத்தெருவிலிருந்து மகளிர் ஆயம் தலைவர் ம.இலட்சுமி அம்மாள் தலைமையில் ஊர்வலமாகச் சாலை ஓரத்தில் சென்றார்கள். மேற்படி சாராய ஆலை ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு அப்பால் உள்ள நிலையில், கந்தர்வகோட்டைக் காவல்துறையினர் வழிமறித்து அனைத்துப் பெண்களையும் கைது செய்துள்ளதாக அறிவித்து, காவல் ஊர்திகளில் ஏற்றிச் சென்று கந்தர்வகோட்டையில் தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தார்கள். அன்று மாலை 6 மணிக்கு அனைவரையும் விடுதலை செய்தார்கள்.

முன்தடுப்புச் சட்டப் பிரிவு 151 Cr.P.C இன் கீழ், அனைவரையும் கைது செய்து – மாலையில் விடுவித்துவிட்டார்கள். ஆனால், இப்போது ஓர் ஆண்டு ஐந்து மாதங்களுக்குப் பின் அப்பெண்கள் மீது கந்தர்வகோட்டை உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதி மன்றத்தில் இந்தியத் தண்டனைச் சட்டப் பிரிவுகள் 143, 341 ஆகியவற்றின் கீழ் வழக்கு இருப்பதாகவும், அனைவரும் 14.10.2020 அன்று நீதி மன்றத்தில் நேர்நிற்க வேண்டும் என்றும் நீதிமன்ற அழைப்பாணை (Summons) 13 பெண்களுக்கும் இரு ஆண்களுக்கும் வந்துள்ளது.

முன்தடுப்பு நடவடிக்கையாகத் தடுத்து மண்டபத்தில் வைத்த பின், அப்பெண்கள் மேற்படி ஆலை வாயிலில் சட்ட விரோதமாகக் கூடினார்கள் என்றும், சட்டவிரோதமாக மறியலில் ஈடுபட்டார்கள் என்றும் காவல்துறை கூறுவது உண்மைக்கு மாறானது. நான் சொல்வது சரியானதுதானா என்று அறிய தாங்கள் தனி விசாரணை செய்து உண்மையை அறியலாம்.

தனியார் ஆலை நிர்வாகத்திற்குச் சாதகமாக நடக்க வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் கந்தர்வகோட்டை காவல்துறையினர், உயரிய காந்திய இலட்சியத்துடன் மதுவிலக்கு கோரிய பெண்கள் மீது இந்தியத் தண்டனைச் சட்டத்தின் கீழ் பொய்வழக்குப் பதிந்துள்ளார்கள்.

 

Ad


இந்தக் கொடிய கரோனா காலத்தில் பெண்களை நீதிமன்றத்தில் நேர்நிற்க அழைப்பாணை அனுப்புவது அறமா என்று அவர்கள் சிந்திக்க வேண்டும். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இதில் தலையிட்டு மேற்படி வழக்கைக் கைவிடச் செய்வதுடன், கரோனா காலத்தில் தஞ்சை மாவட்டத்திலிருந்து புதுக்கோட்டை மாவட்டத்திற்குப் பெண்களை அலையவிடாமல் காக்குமாறு கனிவுடன்  கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

குடித்துவிட்டு அடிக்கடி தகராறு; தந்தையைக் கொன்ற 15 வயது சிறுவன்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
incident in thoothukudi; police investigation

கன்னியாகுமரியில் பேரனின் மதுப்பழக்கத்தைத் தட்டிக்கேட்ட பாட்டி, தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், அதேபோல் மது போதையில் தாயை அடித்து துன்புறுத்தி வந்த தந்தையை 15 வயது மகனே கொலை செய்த சம்பவம் தூத்துக்குடியில் மேலும் பரபரப்பை கிளப்பி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் செல்சீனி காலனி பகுதியில் வசித்து வருபவர்கள் சக்தி-அனுசியா தம்பதியினர். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். கணவர் சக்தி சமையல் செய்யும் வேலை செய்து வருகிறார்.  குடிப்பழக்கத்திற்கு அடிமையான சக்தி மது அருந்திவிட்டு அடிக்கடி மனைவி அனுசியாவை துன்புறுத்தி வந்துள்ளார். இந்நிலையில்  நேற்று இரவு வணக்கம் போல மது அருந்திவிட்டு வந்த சக்தி, மனைவி அனுசியாவை அடித்து காயப்படுத்தியுள்ளார்.

தந்தையின் இந்தச் செயலால் மன உளைச்சலில் இருந்த மூத்த மகனான 15 வயது சிறுவன், ஆத்திரத்தில் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து தந்தை சக்தி மீது சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே சக்தி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய போலீசார் சிறுவனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

குடிப்பழக்கத்தை தட்டிக்கேட்ட பாட்டியை கொன்ற பேரன்

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
Grandson attack grandmother for drunkenness

குடிப்பழக்கத்தை கண்டித்த பாட்டியை பேரனே கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கன்னியாகுமரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே உள்ளது சாரூர். இந்த பகுதியில் வசித்து வந்தவர் தாசம்மாள் (80). இவருடைய மகன் புஷ்பராஜ் என்பவருக்கு அஜித் மகன் இருக்கிறார். அவருக்கு வயது 23.

குடும்ப பிரச்சனை காரணமாக புஷ்பராஜின் மனைவியை பிரிந்து சென்று விட்டார். இதனால் புஷ்பராஜூம் அவருடைய மகன் அஜித்தும் தாசம்மாளுடன் வசித்து வந்தனர். அண்மையில் உடல்நிலை சரியில்லாமல் புஷ்பரஜ் இறந்து விட்டார் .

அதன் பிறகு பாட்டியுடன் அஜித் மட்டும் வசித்து வந்தார். அந்த பகுதியில் பெயிண்டிங் வேலைகளுக்கு சென்று வந்த அஜித் குடிப்பழக்கத்திற்கு நாளடைவில் அடிமையாகி விட்டார். இந்நிலையில் பாட்டி  தாசம்மாள் பெயரில் உள்ள 15 சென்ட் நிலத்தை தன்னுடைய பெயருக்கு எழுதி வைக்கும்படி அஜித் மது அருந்திவிட்டு ரகளை செய்து வந்துள்ளார்.

வழக்கம்போல் நேற்று இரவு 11 மணிக்கு மது குடித்துவிட்டு வந்த அஜித் பாட்டி தாசதாசம்மாளிடம் இது தொடர்பாக சண்டை போட்டுள்ளார். அப்பொழுது பாட்டி தட்டி கேட்டுள்ளார். மதுபோதையில் இருந்த அஜித் தாசம்மாளை கீழே தள்ள, சுவரில் தலை மோதி சம்பவ இடத்திலேயே தாசம்மாள் உயிரிழந்தார். தான் தாக்கியதால் பாட்டி இறந்ததை அறிந்துகொண்ட அஜித் பயத்தில் அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் கன்னியாகுமரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.