publive-image

தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி விளையாட்டின் காரணமாக தற்கொலைகள் அதிகமாகிவருகின்றன. இந்நிலையில், எதிர்க்கட்சியான அதிமுக உட்பட பல்வேறு கட்சிகள் ஆன்லைன் ரம்மி விளையாட்டை தமிழ்நாட்டில் தடை செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். இந்நிலையில், இன்று தமிழ்நாடு முதலமைச்சர் சென்னை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் ஆன்லைன் ரம்மிக்கு எதிராக அவசரச் சட்டம் இயற்றுவது தொடர்பாக குழு அமைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்தக் குழு இரண்டு வாரங்களில் அதன் அறிக்கை சமர்ப்பிக்கும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும், இந்தக் குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் இச்சமூகப் பிரச்சனைக்கு உடனடித் தீர்வு காண வேண்டிய அவசியம் கருதி, அவசரச் சட்டம் விரைவில் இயற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

இந்நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ், “இது பாமகவின் போராட்டத்திற்கும், ஆக்கப்பூர்வ அரசியலுக்கும் கிடைத்த வெற்றி ஆகும்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

Advertisment

மேலும் இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டம் குறித்து அரசுக்கு பரிந்துரைக்க வல்லுனர் குழு அமைக்கப்பட்டிருப்பதும், அக்குழுவின் அறிக்கையை இரு வாரங்களில் பெற்று அவசர சட்டம் பிறப்பிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருப்பதும் வரவேற்கத்தக்கவை ஆகும். தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிராக பா.ம.க. கடந்த 6 ஆண்டுகளாக தீவிரமாக போராடி வருகிறது. கடந்த ஆட்சியில் ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்பட பா.ம.க தான் காரணம். இப்போதும் ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்படுவதற்கும் பா.ம.க. தான் காரணம்.

ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிராக பாமக அறிவித்த போராட்டம் தொடங்குவதற்கு சில நிமிடங்கள் முன்பாக தமிழக அரசின் அறிவிப்பு வந்திருப்பது பாட்டாளி மக்கள் கட்சியின் போராட்டத்திற்கும், ஆக்கப்பூர்வ அரசியலுக்கும் கிடைத்த வெற்றி ஆகும். இதில் பாமக பெருமிதமடைகிறது. வல்லுனர் குழுவின் பணிகள் உடனடியாக தொடங்கப்பட்டு, இரு வாரங்களில் அறிக்கை பெறப்பட வேண்டும். அதன் பின்னர் எந்த தாமதத்திற்கும் இடம் கொடுக்காமல் உடனடியாக ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டம் பிறப்பிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.