விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் அருகில் உள்ள கொடுக்கன்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தியா(21). இவர், கடந்த மே மாதம் 26ஆம் தேதி ஆன்லைன் மூலம் துணி உட்பட சில பொருட்களை வாங்கியுள்ளார். பிறகு ஒரு ஆன்லைன் நிறுவனத்தின் மொபைல் ஆப் மூலம் அப்ளிகேஷன் ஒன்றை பூர்த்தி செய்து தனது மொபைல் போனுக்கான கவர் ஒன்றை ஆர்டர் செய்து வாங்கியுள்ளார்.
அதன் பிறகு அதே மே 30ஆம் தேதி சந்தியாவின் செல்போனுக்கு தொடர்பு கொண்ட ஒரு நபர் தான் அந்த ஆன்லைன் மொபைல் ஆப் நிறுவனத்திலிருந்து போன் செய்வதாக கூறி அறிமுகமாகியுள்ளார். மேலும், தங்கள் கம்பெனியின் பத்தாம் ஆண்டு விழாவை முன்னிட்டு குலுக்கல் மூலம் பரிசு தருவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த குலுக்கலில் ரூ. 12 லட்சத்து 80 ஆயிரம் மதிப்புள்ள கார் பரிசாக தங்களுக்கு விழுந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.
அதன்பிறகு, பரிசாக குலுக்கலில் விழுந்த அந்த காரை பெறுவதற்கான நிபந்தனைகளை அந்த நபர் சந்தியாவுக்கு அனுப்பி, அதற்கான முன்பணம் மற்றும் ஜிஎஸ்டி வரி, கமிஷன் உட்பட குறிப்பிட்டு அளவு தொகையை கட்ட வேண்டும் என்று கூறியுள்ளார். அவரது பேச்சை முழுவதும் நம்பிய சந்தியா, அந்த மர்ம நபர் கூறிய வங்கிக் கணக்கிற்கு அதே நாள் மே 30ஆம் தேதி முதல் ஜூன் 11ஆம் தேதி வரை கூகுள் பே மூலம் ஒரு லட்சத்து 63 ஆயிரம் ரூபாயை 15 தவணையாக செலுத்தியுள்ளார்.
அவர் கூறிய தொகையை அனுப்பிய பிறகும், அந்த நபர் மேலும் பணம் அனுப்புமாறு கூறியுள்ளார். ஆனால், வெகுநாட்களாகியும் கார் வரவில்லை. அதன்பிறகே தான் ஏமாற்றப்பட்டதை சந்தியா உணர்ந்தார். அதனைத் தொடர்ந்து விழுப்புரம் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அவரது புகாரின் பெயரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, பணம் பறித்த அந்த நபர் குறித்து தீவிரமாக விசாரணை நடத்திவருகின்றனர்.