Skip to main content

"கருவை கலைச்சிட்டு வா கல்யாணம் பண்ணி வைக்கிறேன்!" - இளம்பெண்ணை ஏமாற்றிய குடும்பம்!

Published on 16/04/2021 | Edited on 16/04/2021

 

The one who got married and went home, came only twice a week ... cheating came to light

 

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள சிங்கிரிபாளையம், வடக்கு வீதியைச் சேர்ந்த 25 வயதான இளம்பெண் முத்துமாரி. அவர் இன்று 16ந் தேதி ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்து ஒரு புகார் மனுவைக் கொடுத்தார். பிறகு அவர் கூறும்போது, “சென்ற 2018 ஆம் ஆண்டு சமூக வலைதளமான ஃபேஸ்புக் மூலம் தீனதயாளன் என்பவருடன் எனக்கு நட்பு ஏற்பட்டது. இந்தப் பழக்கம் எங்களுக்குள் நாளடைவில் காதலாக மாறியது.

 

தீனதயாளன் எனக்கு திருப்பூரில் வேலை வாங்கித்தருவதாகக் கூறினார். நானும் திருப்பூருக்குச் சென்றேன். பெருமாநல்லூரில் உள்ள நேதாஜி அப்பேரல் பார்க் என்ற இடத்தில் உள்ள ஒரு கம்பெனியில் அவர் என்னை வேலைக்குச் சேர்த்துவிட்டார். நான் அந்த கம்பெனியின் மகளிர் விடுதியில் தங்கி வேலை பார்த்து வந்தேன். தீனதயாளனும் நானும் விடுமுறை நாட்களில் நேரில் சந்திப்பதும் பிறகு தொலைப்பேசியில் பேசுவதும் வாடிக்கையாக இருந்தது. ஏன் மகளிர் விடுதியில் தங்க வேண்டும் வெளியில் தனியாக வீடு பார்த்துள்ளேன், அதில் தங்கலாம் எனக் கூறினார்.

 

இதனால் நான் விடுதியை காலி செய்து அவருடன் ஒரே வீட்டில் தங்கி திருமணம் ஆகாமலேயே கணவன் மனைவியாய் வாழ்ந்து வந்தோம். உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் எனக் கூறி என்னோடு உறவு வைத்துக் கொண்டார். ஆறு மாதம் பொறுத்திரு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்வதாக உறுதி கொடுத்தார். நான் முழுமையாக அவரை நம்பினேன். பிறகு அவர் அவரது வீட்டுக்குப் போய் விட்டார். வாரத்துக்கு இரண்டு முறை மட்டுமே வந்து என்னோடு இருந்து செல்வார். இந்த நிலையில், நான் கர்ப்பம் ஆனேன். தீனதயாளனிடம் இதுபற்றி கூறி என்னை உடனடியாக திருமணம் செய்துகொள்ளுங்கள் என வேண்டினேன்.

 

அவர் என்னை திருமணம் செய்ய முடியாது என்று கூறினார். அதிர்ச்சியடைந்த நான் கோபி மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கச் சென்றேன். அப்போது தீனதயாளனின் பெற்றோர் வந்து என்னைத் தடுத்து நிறுத்தி நாங்கள் திருமணம் செய்து வைக்கிறோம் என உறுதி கூறினார்கள். அதே போல் உங்கள் திருமணம் நடைபெற வேண்டுமென்றால் நீ கர்ப்பத்தைக் கலைத்து விட்டு வர வேண்டும் என்றனர். பிறகு தீனதயாளனின் அம்மாவே என்னை ஒரு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று எனது வயிற்றில் இருந்த கருவைக் கலைக்க வைத்தார். பிறகு இப்போது நடந்த தேர்தலில் ஓட்டு போடுவதற்காக எனது ஊருக்கு என்னை அனுப்பி வைத்தார்.

 

தேர்தல் முடிந்து ஓட்டு போட்டப் பிறகு மீண்டும் அவங்க ஊருக்கு நான் சென்றபோது நீ இனிமேல் இங்கு வரக்கூடாது என தீனதயாளன், அவரது பெற்றோர்கள் என்னை மிரட்டினார்கள். என் மகன் உன்னுடன் சேர்ந்து வாழ மாட்டான் எனக் கூறி என்னை துரத்தி விட்டனர். இதனால், நான் மிகுந்த மன உளைச்சலுக்கும், வேதனைக்கும் உள்ளாகி உள்ளேன். என்னைத் திருமணம் செய்வதாகக் கூறி கட்டாயப்படுத்தி என்னோடு உறவுவைத்து அதன் மூலம் உருவான கருவைக் கலைக்க வைத்த எனது கணவர் மற்றும் அவரது பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நான் ஏமாற்றப்பட்டுள்ளேன், எனது நிலை போல் வேறு யாருக்கும் வரக்கூடாது என்றால் ஃபேஸ்புக்கை நம்பாதீங்க” என்றார் பரிதாபமாக.

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

ஓய்ந்தது பிரச்சாரம்; முடிவுக்கு வரும் தொழிலாளர் தட்டுப்பாடு

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
nn

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்தது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்கள் சூடு பறக்க நடத்தினர்.

இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கிய நிலையில் இன்று மாலை 6 மணியோடு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024 மக்களவை தேர்தலுக்கான அனல் பறந்த பிரச்சாரம் ஓய்ந்தது. நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்நிலையில், ஈரோடு மாவட்டம் பவானிசாகர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் வாழை மஞ்சள் மற்றும் மல்லி, முல்லை, சம்பங்கி உள்ளிட்ட பூ வகைகள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதனால் விவசாயக் கூலி வேலைக்கு மக்கள் அதிகம் சென்று வருகின்றனர். முன்னதாக பாராளுமன்றத் தேர்தல் பிரச்சாரம் களைகட்டிய நிலையில் கட்சினர் தங்கள் பலத்தைக் காட்ட கூட்டத்தைத் திரட்டினர். இதனால் பவானிசாகர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கூலி ஆட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. விவசாயக் கூலி வேலைக்கு செல்வோருக்கு தினக்கூலியாக ரூ.200 முதல் ரூ.350 வரை சம்பளம் வழங்கப்படுகிறது.

காலையில் சென்று மாலை வரை வேலை செய்ய வேண்டும். ஆனால் தேர்தல் பிரசாரத்துக்கு காலையில் இரண்டு மணி நேரம் மாலையில் 2 மணி நேரம் சென்றால் போதுமானது. தினக்கூலியாக 300 ரூபாய் வரை கிடைக்கிறது. இதுபோக சிக்கன், மட்டன் பிரியாணி கிடைக்கிறது. குடிமகன்களுக்கு மதுவும் வாங்கி தரப்படுகிறது. இதனால் விவசாய கூலி தொழிலாளர் தேர்தல் பிரசாரத்திற்கு செல்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதன் காரணமாக பவானிசாகர் கிராமப் பகுதிகளில் கூலித் தொழிலாளர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. இன்றுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவு பெற்றதால் வரும் நாட்களில் தொழிலாளர் தட்டுப்பாடு முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

வாக்குப்பதிவு நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை; மறுக்கப்பட்டால் புகார் தெரிவிக்கலாம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Holiday with pay on polling day; Complaint can be filed if denied

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்கள் சூடு பறக்க நடத்தினர்.

இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியது. திமுக சார்பில் மு.க.ஸ்டாலின்  பெசன்ட் நகரிலும், அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி சேலத்திலும், நாம் தமிழர் கட்சியின் சீமான் சென்னயிலும், விசிகவின் தொல்.திருமாவளவன் சிதம்பரத்திலும், பாமகவின் அன்புமணி ராமதாஸ் தர்மபுரியில் இறுதிக்கட்ட பிரச்சாரம் செய்த நிலையில் தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024 மக்களவைத் தேர்தலுக்கான அனல் பறந்த பிரச்சாரம் ஓய்ந்தது. நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்நிலையில் ஈரோடு தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர்கள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, 'தமிழ்நாட்டில் வரும் 19ஆம் தேதி பாராளுமன்ற பொதுத்தேர்தல் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. எனவே தேர்தல் நாளன்று தொழிற்சாலைகள், செங்கல் சூளைகள், கட்டுமான பணியிடங்கள் மற்றும் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தினக்கூலி தொழிலாளர்கள், தற்காலிக தொழிலாளர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து தொழிலாளர்களும் தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றும் பொருட்டு தேர்தலில் வாக்களிக்க ஏதுவாக மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி ஒரு நாள் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்பட வேண்டும். மேலும் வெளிமாநில தொழிலாளர்களைப் பொறுத்தவரை அவரவர் சொந்த மாநிலங்களில் தேர்தல் நடக்கும் நாளன்று தேர்தலில் வாக்களிக்க ஏதுவாக அந்தந்த மாநிலங்களுக்கு முன்கூட்டியே செல்ல தொழிற்சாலை நிர்வாகம், செங்கல் சூளை நிர்வாகம் மற்றும் கட்டுமான நிறுவனங்களில் வேலை அளிப்பவர்கள் முழுமையான வாக்குப்பதிவை உறுதி செய்யும் வகையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு தேர்தல் நாளன்று ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்காத நிர்வாகங்கள் தொடர்பான புகார்களைத் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர், ஈரோடு வினோத்குமார் செல் - 9994380605, 0424 - 22195 21, மற்றும் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் ஈரோடு இணை இயக்குநர் சிவகார்த்திகேயன் செல்- 9865072749, 0424-2211780 ஆகிய எண்களில் புகார் தெரிவிக்கலாம்' இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.