'சாட்டை துரைமுருகன்' யூடியூப், பேஸ்புக் பயன்படுத்துபவர்கள் இவரை அறிந்திருக்க வாய்ப்புக்கள் அதிகம். நாம் தமிழர் கட்சியில் இருந்த சாட்டை துரைமுருகன், கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட காரணத்தால் நாம் தமிழர் கட்சியில் இருந்து சீமான் அவரை நீக்கினார். கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பிறகும், அவர் யூடியூப் சேனலில் தொடர்ந்து அரசியல் பேசி வந்தார். நக்கல், நையாண்டிகளை கடந்து அரசியல் கட்சியினரைத் தொடர்ந்து அவமானப்படுத்தும் வகையில் அவதூறு கருத்துக்களை அவர் வெளியிட்டு வருவதாகப் பலர் அவர் மீது காவல்நிலையத்தில் புகார் கொடுத்திருந்தனர்.
இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டம், தக்கலையில் நேற்று நடைபெற்ற கண்டன போராட்டத்தில் சாட்டை துரைமுருகன் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அரசியல் கட்சிகளின் தலைவர்களை அவதூறாகப் பேசியதாக அவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் அவர் மீது வழக்குப் பதிவுசெய்த நாகர்கோவில் காவல்துறையினர் அவரை கைது செய்தனர். இந்நிலையில் தற்போது பந்தநல்லூரைச் சேர்ந்த முருகன் என்பவர் அளித்த புகாரின் பேரில் அவர் மீது மேலும் ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கிலும் அவர் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.