Skip to main content

ஒரு லட்சம் ரேஷன் கார்டுகளுக்கு முன்னாள் அமைச்சர் நிவாரண உதவி! 

Published on 22/05/2020 | Edited on 22/05/2020

 

கரோனா வைரஸ் பீதியால் மக்கள் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கிறார்கள். அரசு, எதிர்க்கட்சிகள் உள்பட சமூக ஆர்வலர்களும் தங்களால் முடிந்த  நிவாரண உதவி பொருட்களை தமிழகம் முழுவதும் உள்ள பொது மக்களுக்கு வழங்கி வருகிறார்கள். 
 


அதுபோல் திண்டுக்கல் மாவட்ட முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனும் தனது தொகுதியில் உள்ள நத்தம் மற்றும் சாணார்பட்டி யூனியனில்  உள்ள 58 பஞ்சாயத்துகளில் இருக்கக் கூடிய  தூய்மைப் பணியாளர்களுக்கு கரோனா தடுப்பு உபகரணங்களான முகக்கவசம், கிருமிநாசினி, சோப்பு, கையுறை வழங்கியதுடன் மட்டும்மல்லாமல் 25 கிலோ  அரிசியுடன் மளிகைப் பொருட்களும் வழங்கினார். 
 

அதைத் தொடர்ந்து தொகுதி மக்களுக்காக ஒரு லட்சம் ரேஷன் கார்டுகளுக்கு தலா ஐந்து கிலோ அரிசி கொடுக்க முடிவு செய்தார். அதன் அடிப்படையில்  நத்தம், சாணார்பட்டி மற்றும் திண்டுக்கல் யூனியனில் உள்ள நான்கு பஞ்சாயத்து  உள்பட 58 பஞ்சாயத்துகளில் இருக்கக் கூடிய கட்சி பொறுப்பாளர்கள் மூலம் கணக்கு எடுக்கப்பட்டு ஒரு குடும்பத்திற்கு ரேசன் கார்டு வாரியாக முன் கூட்டியே அந்தந்த பகுதிகளில் டோக்கன் கொடுத்து இருந்தனர். அதன் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் விஸ்வநாதனும் ஒவ்வொரு ஊராட்சியாகச் சென்று அந்த ஊராட்சிக்குக் கட்டுப்பட்டுள்ள ஒரு பொது இடத்துக்கு மக்களை வரச்சொல்லி தலா ஐந்து கிலோ அரிசி வீதம் வழங்கினார். தொகுதி முழுவதும் உள்ள மக்களுக்கு கரோனா நிவாரண உதவியாக ஒரு லட்சம் ரேஷன் கார்டுகளுக்கு அரிசி வழங்கினார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முன்னாள் அமைச்சர்கள் முதல் எம்.எல்.ஏக்கள் வரை; தொடரும் ரெய்டு

Published on 28/02/2024 | Edited on 28/02/2024
From former ministers to MLAs; Raid on

அண்மையாக சில மாதங்களுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி இருந்தது. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் சொத்துக் குவிப்பு புகார் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கடந்த சில மாதங்களாக தொடர் சோதனையில் ஈடுபட்டனர். முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர். விஜயபாஸ்கர், சி. விஜயபாஸ்கர், எஸ்.பி. வேலுமணி, கே.சி. வீரமணி ஆகியோரது இல்லங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சார்பில் சோதனை நடைபெற்றது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இந்தநிலையில் அதிமுக கடலூர் மாவட்டம் பண்ருட்டி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. சத்யா பன்னீர் செல்வம் என்பவர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். கடந்த 2011-16 அதிமுக ஆட்சியில் நகராட்சி தலைவராக சத்யாவின் கணவர் பன்னீர் செல்வம் இருந்தபோது டெண்டர் விடுவதில் ரூ.20 லட்சம் பண மோசடியில் ஈடுபட்டதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

பன்னீர்செல்வம், அப்போதைய நகராட்சி கமிஷனர் பெருமாள் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்கு பதியப்பட்ட நிலையில், தற்போது இந்த சோதனை நடைபெற்று வருவதாக தெரிகிறது. பண்ருட்டி மற்றும் சென்னை உள்ளிட்ட 5 இடங்களில் அவருக்கு சொந்தமான இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் கண்காணிப்பாளர் தேவநாதன் தலைமையிலான போலீசார் இந்த அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

Next Story

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்களுக்கு எதிரான வழக்கு; நீதிபதி அதிரடி உத்தரவு

Published on 16/02/2024 | Edited on 16/02/2024
Judge action order Case against AIADMK ex-ministers

கடந்த 2023 ஆம் ஆண்டு ஜனவரி 2 ஆம் தேதி தமிழக அரசைக் கண்டித்து, கரூர் மாவட்டம், வேலுசாமிபுரம் பகுதியில் அதிமுக சார்பில் கண்டனக் கூட்டம் நடத்தப்பட்டது. இந்தக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள், கே.பி. முனுசாமி, தங்கமணி, எம்.ஆர். விஜயபாஸ்கர், நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட அதிமுகவினர் கலந்து கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும், போக்குவரத்துக்கு இடைஞ்சல் ஏற்படுத்தியதாகவும், கூட்டத்தில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட 11 பேருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கு கரூர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இதனையடுத்து, கரூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சர்கள் உள்பட 11 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த நிலையில், இந்த மனு மீதான விசாரணை இன்று (16-02-24) சென்னை உயர்நீதிமன்றத்தில் வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் கூறியதாவது, ‘ஜனநாயக முறையில் நடந்த கூட்டத்தை சட்ட விரோதமாக கூடிய கூட்டமாக கருத முடியாது. எனவே இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாகத்தான் இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது’ என்று வாதிடப்பட்டது. இதையடுத்து, வாதங்களைக் கேட்டறிந்த நீதிபதி ஆனந்தன் வெங்கடேஷ், முன்னாள் அமைச்சர்கள் கே.பி. முனுசாமி, தங்கமணி, எம்.ஆர். விஜயபாஸ்கர், நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன் உள்பட 11 பேருக்கு எதிரான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.