Skip to main content

மூதாட்டி கொலை... பள்ளி மாணவன் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைப்பு 

Published on 13/12/2019 | Edited on 13/12/2019

 

கடலூர் மாவட்டம் ராமநத்தம் அருகே உள்ளது மேலக்கல் பூண்டி. இந்த ஊரை சேர்ந்த ஐயாசாமி மனைவி பொன்னம்மாள். வயது 65. இவர் கடந்த மாதம் ஒன்றாம் தேதி தலையில் பலத்த காயத்துடன் ரத்தம் வழிந்த நிலையில் அவரது வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். தகவலறிந்த ராமநத்தம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி மற்றும் போலீசார் பொன்னம்மாளை உடனடியாக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். 

 

old lady



அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த 4ஆம் தேதி மூதாட்டி பொன்னம்மாள் இறந்துபோனார். உடனே போலீசார் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தினர். அந்த பகுதியை சேர்ந்த பலரையும் அழைத்து வந்து தீவிர விசாரணை செய்தனர்.
 

இந்த நிலையில் வடகரா பூண்டி கிராம நிர்வாக அலுவலர் சத்யராஜிடம், ''பாட்டியை கொலை செய்தது நான்தான்'' என்று ஒப்புக்கொண்டு ஒரு பள்ளி மாணவன் வாக்குமூலம் அளித்துள்ளார். உடனே கிராம நிர்வாக அலுவலர் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க, அவர்கள் அந்த பள்ளி மாணவனை கைது செய்து விசாரித்தபோது, அவன் அளித்த வாக்குமூலத்தில் பாட்டி பொன்னம்மாளின் வீட்டின் அருகில் கிழக்கில் பூண்டி அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. அந்தப் பள்ளி மாணவ மாணவிகளுக்கு பொன்னம்மாள் தன் தோட்டத்தில் விளையும் பலவிதமான பழங்களை விற்பனை செய்வது வழக்கம். அதனால் பொன்னம்மாள் வீட்டிருக்கு நிறைய பள்ளி மாணவ மாணவிகள் அவ்வப்போது சென்று வருவது உண்டு.
 

சில நாட்களுக்கு முன்பு அந்தப் பள்ளியில் படிக்கும் 15 வயது மாணவன் ஒருவன் அந்த பாட்டியிடம் பழம் வாங்கி கொண்டு அதற்குப் பதிலாக வெளிநாட்டு கரன்சி பணத்தைக் கொடுத்துள்ளான். விவரம் தெரியாமல் பணத்தை வாங்கிய பாட்டி பிறகு அதை மற்றவரிடம் காட்டியபோது அது வெளிநாட்டு பணம் இங்கு செல்லாது என சொன்னதும் கோபத்துடன் அதை எடுத்துக்கொண்டு பள்ளிக்கு சென்ற பாட்டி, சம்பந்தப்பட்ட மாணவனிடம் என்னை ஏமாற்ற பார்த்தாயா என அவனை பலர் முன்னிலையில் கேட்டுள்ளார். 
 

பாட்டி தன்னை திட்டியதை மாணவன் அவமானமாகக் கருதினான். பாட்டியிடம் பணப்புழக்கம் உள்ளதை பார்த்துள்ளான். தன் தாயிடம் செலவுக்கு பணம் தருமாறு கேட்டுள்ளான். அவர் தர மறுத்துள்ளார். இதனால் பாட்டி மீது உள்ள கோபத்திலும், தாய் செலவுக்கு பணம் தாராததாலும் பாட்டியிடம் உள்ள பணத்தை திருடுவது என  திட்டமிட்டு, அதன்படி ஒன்றாம் தேதி இரவு அந்த பாட்டி வீட்டருகே சென்றவன், நடு இரவில் வீட்டுக்குள் சென்று பாட்டி வைத்திருந்த பணத்தையும் செல்போனையும் திருடியுள்ளான். 


 

 

சத்தம் கேட்டு எழுந்த பாட்டி பொன்னம்மாள் அந்த மாணவனை கையும் களவுமாக பிடித்து விட்டார். சத்தம்போட்டு அக்கம் பக்கத்தினரை அழைக்க முயலும்போது கோபமுற்ற சிறுவன், பாட்டி தன்னை காட்டிகொடுத்து விடுவாரோ என அச்சமடைந்து, அருகில் கிடந்த டார்ச் லைட்டை எடுத்து பாட்டியின் தலையில் சரமாரியாக தாக்கியுள்ளான்.


 

 

பாட்டி ரத்தவெள்ளத்தில் மயங்கி சரிந்ததும் சிறுவன் பணத்தையும் பாட்டியின் செல்போனையும் எடுத்து கொண்டு சத்தமில்லாமல் சென்றுவிட்டான். இந்த நிலையில் போலீசார் பாட்டியோட செல்போன் பற்றி கண்டறிய டவரை வைத்து ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில் அந்த செல்போன் அந்த மாணவனின் தாயிடம் இருப்பதை கண்டறிந்தனர். அவரை 'அழைத்து கடுமையாக விசாரித்தனர் அப்போது வேறு வழியில்லாமல் மாணவன் தானே முன்வந்து பாட்டியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டான். அவனை கைது செய்த  போலீசார் நீதிமன்ற உத்தரவுப்படி  கடலூர் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் கொண்டு சென்று அந்த சிறுவனை அடைத்தனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘ஜெய் ஸ்ரீராம்’ முழக்கத்தோடு பள்ளி மீது தாக்குதல்; வெளியான அதிர்ச்சி வீடியோ!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Incident on school chanting Jai Sriram  Shocking video released in telangana

தெலுங்கானா மாநிலம், மன்செரியல் மாவட்டம், கண்ணேபல்லி கிராமத்தில் அன்னை தெரசா உயர்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில், அந்தக் கிராமத்திலும், அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் இருந்தும் ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று(18-04-24) 50க்கும் மேற்பட்டவர்கள் காவி உடை அணிந்து, இந்தப் பள்ளிக்குள் நுழைந்து, அங்கிருந்த அன்னை தெரசா சிலை உள்ளிட்டவற்றின் மீது கல் வீசி பயங்கர தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும், அவர்கள் ஜெய்ஸ்ரீ ராம் என்று முழக்கமிட்டவாறு அந்தப் பள்ளி மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதத்ளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தத் தாக்குதல் தொடர்பான வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும், இந்தச் சம்பவம் குறித்து பள்ளியின் முதல்வரான கேரளாவைச் சேர்ந்த ஜெய்மன் ஜோசப்பிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு காவி நிற உடை அணிந்து சில மாணவர்கள் பள்ளிக்கு வந்துள்ளனர். இதனைக் கண்ட அப்பள்ளி முதல்வர், அந்த மாணவர்களை அழைத்து விசாரணை நடத்தியுள்ளார்.

அதற்கு அந்த மாணவர்கள், 21 நாள்கள் அனுமன் தீட்சை சம்பிரதாயத்தைக் கடைபிடிப்பதாக கூறியுள்ளனர். அதனால், பள்ளி முதல்வர், மாணவர்கள் தங்களுடைய பெற்றோர்களைப் பள்ளிக்கு அழைத்து வருமாறு கூறியுள்ளார். இதன் காரணமாக, இன்று காவி உடை அணிந்து வந்த கும்பல் பள்ளி மீது தாக்குதல் நடத்தியுள்ளனர் என்பது தெரியவந்தது.. .

மேலும், இந்தத் தாக்குதலில் பள்ளி முதல்வர் ஜோசப்பை சுற்றி வளைத்து அடித்து, அவரது நெற்றியில் வலுக்கட்டாயமாக திலகமிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து, மாணவர்களின் பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில், மத உணர்வுகளைத் தூண்டுதல், மதத்தின் அடிப்படையில் பகைமையை வளர்ப்பது தொடர்பான பிரிவுகளின் கீழ் பள்ளி முதல்வர் உட்பட இரண்டு ஊழியர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மயிலாடுதுறையில் 9 பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
Leopard movement Holiday for 9 schools

மயிலாடுதுறை நகரத்தின் ஒருபகுதியான கூறைநாடு செம்மங்குளம் அருகே கடந்த 2 ஆம் தேதி (02.04.2024) இரவு 11 மணியளவில் சிறுத்தை நடமாடியதைப் பார்த்ததாகச் சிலர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்திருந்தனர். இந்த தகவலின் பேரில், உடனடியாக அப்பகுதிக்கு விரைந்து வந்த காவல்துறையினரும், வனத்துறையினரும் சிறுத்தையின் கால் தடத்தை வைத்து சிறுத்தை நடமாட்டம் இருப்பதை உறுதி செய்தனர். பிறகு சி.சி.டி.வி. கேமராவில் சிறுத்தையை நாய்கள் விரட்டி சென்றதையும் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதனையடுத்து வனத்துறை சார்பில் பொதுமக்கள் பாதுகாப்பாக வீட்டில் இருக்கவேண்டும் என ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தி வருகின்றனர். மேலும், சீர்காழி வனச்சரக அலுவலர் டேனியல் ஜோசப் தலைமையில் வனத்துறையினர் சிறுத்தையை பிடிக்க தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர். சிறுத்தை பதுங்கிய பகுதியில் பன்றி ஒன்று குதறியநிலையில் இறந்து கிடந்ததைக் கண்ட வனத்துறையினர் அதிர்ச்சியடைந்து தேடுதல் வேட்டையை தீவிரமாக்கியுள்ளனர்.

அதே சமயம் சிறுத்தை நடமாடத்தை கண்காணிக்க 10 இடங்களில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. சிறுத்தையை பிடிக்க 10 குழுக்களை அமைத்து வனத்துறையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். அதோடு வனத்துறை சார்பில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் சிறுத்தையைப் பார்த்தால் 9994884357 என்ற தொலைபேசி எண்ணிற்கு தகவல் அளிக்க வனத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். சிறுத்தையைப் பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை என ஆட்சியர் மகாபாரதி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் ஆரோக்கியநாதபுரம் பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தால் 9 பள்ளிகளுக்கு இன்று (05.04.2024) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மயூரா மெட்ரிக் பள்ளி, புனித அந்தோனியார் உயர்நிலை பள்ளி, டாக்டர் அம்பேத்கர் நகராட்சி தொடக்கப்பள்ளி, கேம்பிரிட்ஸ் பள்ளி, சின்ன ஏரகலி நகராட்சி தொடக்கப்பள்ளி, அக்ளூர் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி, மறையூர் தூய அந்தோனியார் தொடக்க பள்ளி, ஊராட்சி ஒன்றிய  நடுநிலைப்பள்ளி, அழகுஜோதி நர்சரி பிரைமரி பள்ளி என 9 பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.