Skip to main content

5 வது நாளாக நளினி உண்ணாவிரதம்... செல்போன் வழக்கில் முருகன் நீதிமன்றத்தில் ஆஜர்...

Published on 02/12/2019 | Edited on 02/12/2019

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் நளினி, முருகன் உட்பட 7 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 29 ஆண்டுகளாக சிறையில் உள்ளோம், எனவே தங்களை விடுவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

 

nurugan appeared before court

 

 

இந்நிலையில் கடந்த 27 ஆம் தேதி, தங்களை விடுதலை செய்ய வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தி வேலூர் மத்திய சிறையில் உள்ள நளினி, பிரதமர் மோடிக்கு, என்னை கருணை கொலை செய்துவிடுங்கள் என கடிதம் அனுப்பிவிட்டு சாகும் வரை உண்ணாவிரதத்தை தொடங்கியுள்ளார். கடந்த 28ந்தேதி முதல் உண்ணாவிரதம் இருப்பதை சிறைத்துறை அனுமதித்துள்ளது. தினமும் அவரது உடல்நிலை குறித்து உயர் அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்பிவருகிறது. டிசம்பர் 2ந்தேதியோடு ஐந்தாவது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

இதற்கிடையே, டிசம்பர் 2ந்தேதி இன்று வேலூர் மத்திய ஆண்கள் சிறையில் உள்ள முருகனை, வேலூர் நீதிமன்றத்துக்கு அழைத்துவந்து ஆஜர்படுத்தியது காவல்துறை. முருகன் சிறையில் விதிகளை மீறி செல்போன் வைத்திருந்ததை கடந்த அக்டோபர் மாதம் கைப்பற்றிய சிறைத்துறை அதிகாரிகள், அதுதொடர்பாக பாகாயம் காவல்நிலையத்தில் புகார் தந்தனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டதால் 15 தினங்களுக்கு ஒருமுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சாந்தன் மரணம்; கலங்கி கண்ணீர் சிந்திய நளினி

Published on 28/02/2024 | Edited on 28/02/2024

 

 

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் சாந்தன். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டிருந்த நிலையில், சாந்தனும் விடுதலை பெற்றிருந்தார். தொடர்ந்து அவர் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று (28-02-24) அதிகாலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து, அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பிறகு,  மருத்துவமனை வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு பலரும் அஞ்சலி செலுத்தி வந்த நிலையில், சீமான், நளினி, பேரறிவாளன், ரவிச்சந்திரன் உள்ளிட்டவர்கள்  அஞ்சலி செலுத்தினார்கள்.
 

Next Story

முருகன் உள்ளிட்ட நால்வரை இலங்கை அனுப்ப ஏற்பாடு? - மத்திய அரசு பதில்

Published on 14/09/2023 | Edited on 14/09/2023

 

 Arrangement to send four persons including Murugan to Sri Lanka - Central Government's response

 

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர்களில் முருகன் உள்ளிட்ட நான்கு பேர் திருச்சி சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், நான்கு பேரையும் இலங்கைக்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

 

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 7 பேரும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் விடுதலை செய்யப்பட்டனர். இந்த நிலையில் இலங்கையைச் சேர்ந்த முருகன் அகதிகள் முகாமில் வைக்கப்பட்டுள்ளார். தன்னுடைய கணவரை அகதிகள் முகாமில் இருந்து விடுதலை செய்து தன்னுடன் சேர்ந்து வாழ அனுமதிக்குமாறு அவருடைய மனைவி நளினி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

 

இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, லண்டனில் வசிக்கும் மகளுடன் சேர்ந்து வாழ கணவர் முருகன் விரும்புவதாகவும் அவருக்கு பாஸ்போர்ட் பெறுவது தொடர்பாக இலங்கை தூதரகத்தை தொடர்பு கொள்ள வேண்டி உள்ளதாகவும் நளினி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அகதிகள் முகாமில் உள்ள அவரால் அங்கிருந்து வெளியே வர முடியவில்லை. அவரை அகதிகள் முகாமில் இருந்து விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டது.

 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ‘மத்திய - மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும்’ என உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் இன்று இந்த வழக்கில் மத்திய அரசின் அயல் நாட்டினர் பதிவு மண்டல அலுவலக அதிகாரி சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த பதில் மனுவில், விதிகளின்படி இந்திய சிறையிலிருந்து விடுதலை ஆகும் வெளிநாட்டவர்களுக்கு பாஸ்போர்ட் உள்ளிட்ட பயண ஆவணங்கள் இருக்கும் பட்சத்தில் அவர்கள் சொந்த நாட்டுக்கு அனுப்பப்படுவார்கள். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட முருகன், ஜெயக்குமார், சாந்தன், ராபர்ட் பயஸ் உள்ளிட்ட நான்கு பேரும் இலங்கைத் தமிழர்கள். பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்கள் இல்லாததால் கள்ளத்தோணி மூலம் இந்தியாவிற்குள் நுழைந்துள்ளனர். இதன் காரணமாகத் தற்போது அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டிருக்கின்றனர். அவர்களுக்கு பாஸ்போர்ட் உள்ளிட்ட பயண ஆவணங்கள் கேட்டு கடந்த டிசம்பர் மாதம் இலங்கை தூதரகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. அதற்கான ஆவணங்கள் கிடைத்தவுடன் நான்கு பேரும் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்படுவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.