Skip to main content

‘ஆமைகளின் எண்ணிக்கை உயர்வு’ - வனத்துறை சாதனை!

Published on 16/06/2024 | Edited on 16/06/2024
The number of turtles has increased a forest dept achievement

தமிழ்நாட்டின் 1076 கிலோமீட்டர் நீளமுள்ள கடற்கரையில் வரலாற்று ரீதியாக ஆமைகள் கூடு கட்டுவதற்காக வருகை தருகின்றன. ஆலிவ் ரிட்லி, பச்சை ஆமை, ஹாக்ஸ்பில் ஆமை, லாக்கர்ஹெட் ஆமை மற்றும் லெதர்பேக் ஆமை ஆகிய ஐந்து வகையான கடல் ஆமைகள் தமிழக கடற்கரைக்கு வருகை தருகின்றன. இவற்றில், முக்கியமாக ஆலிவ் - ரிட்லி ஆமைகள் அதிக எண்ணிக்கையில் வருகின்றன. அவை கூடு கட்டுவதற்கும் மற்றும் அவற்றின் தீவனமாகவும் தமிழ்நாட்டின் தென்பகுதியான கோரமண்டல் கடற்கரை அறியப்படுகின்றன, அதேசமயம் மற்ற வகை ஆமைகள் தற்போது கூடு கட்டுவது அரிதாக உள்ளன.

கடல் ஆமைகளுக்கான பருவம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதத்தில் தொடங்கும். இந்நிகழ்வின் போது வனத் துறையானது தற்காலிக குஞ்சு பொரிப்பகங்களை உருவாக்குதல், ஊழியர்களுக்கான வழிகாட்டுதல் திட்டம் மற்றும் துறைகளுக்கிடையேயான ஒருங்கிணைப்பு கூட்டங்களைத் தொடர்ந்து நடத்துதல், தினசரி இரவு ரோந்துப் பணிகளைத் தொடர்தல். மாணவர்கள் கடல் ஆமைகள் பாதுகாப்பு கூடு கட்டுதல் (SSCN) மற்றும் பிற தன்னார்வலர்களுடன் இணைந்து ஆயத்தப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. வனத் துறைப் பணியாளர்கள் மற்றும் கண்காணிப்பாளர்கள், இந்த நோக்கத்திற்காக நியமிக்கப்பட்டவர்கள் மூலம் கூடுகள் அடையாளம் காணப்பட்டு. வனத் துறையின் குஞ்சு பொரிப்பகங்களில் வைத்துப் பாதுகாக்கப்படுகின்றன. 

The number of turtles has increased a forest dept achievement

இந்த ஆண்டு ஆமைகள் கூடு கட்டும் பருவத்தில் 13 கடலோர மாவட்டங்களில் உள்ள 8 பிரிவுகளில் 53 குஞ்சு பொரிப்பகங்களை வனத்துறை அமைத்தது. 2363 கூடுகள் மூலம் மொத்தம் 2 லட்சத்து 58 ஆயிரத்து 775 முட்டைகள் சேகரிக்கப்பட்டு, அவை துறைசார் குஞ்சு பொரிப்பகங்களுக்கு மிக நுட்பமாக இடமாற்றம் செய்யப்பட்டன. இந்த அனைத்து குஞ்சு பொரிப்பகங்களிலும் ஒவ்வொரு குஞ்சும் வெளிவரும் வரை இடமாற்றம் செய்யப்பட்டதிலிருந்து 24 மணி நேரமும் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது. அவ்வாறு செய்யும் போது அனைத்து கூடுகளின் அளவீடுகள் மற்றும் வெப்பநிலை உட்பட அனைத்தும் பதிவு செய்யப்பட்டன. அதனையொட்டி இந்த ஆண்டு வனத்துறை, 2 லட்சத்து 15 ஆயிரத்து 778 ஆமைக் குஞ்சுகளைக் கடலுக்கு அனுப்பியுள்ளது. இதுவே. இதுவரை பதிவுசெய்யப்பட்ட எண்ணிக்கையில் அதிகபட்சமாகும்.

கடந்த ஆண்டு 1 லட்சத்து 82 ஆயிரத்து 917 குஞ்சுகள் அனுப்பப்பட்டன. கடலூர், நாகப்பட்டினம் மற்றும் சென்னை மாவட்டங்களில் முறையே கடலூர் 89 ஆயிரத்து648, நாகப்பட்டினம் 60 ஆயிரத்து 438 மற்றும் சென்னை 38 ஆயிரத்து 230 என அதிக அளவில் ஆமை குஞ்சுகளை அனுப்பியுள்ளன. இந்த ஆண்டு, வனத்துறையிலிருந்து 185 கள ஊழியர்களும் மற்றும் 264 தன்னார்வலர்களும் இந்த பாதுகாப்பு நடவடிக்கையில் தீவிரமாகப் பங்கேற்றனர். இத்துறையின் முயற்சிகளுக்கு வலு சேர்க்கும் வகையில், சென்னை மற்றும் நாகப்பட்டினத்தில் கடல் ஆமைகள் பாதுகாப்பு மையங்களை அமைப்பதாகத் தமிழ்நாடு அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது இந்த உயிரினங்களுக்கான பாதுகாப்பு முயற்சிகளுக்கு மேலும் உத்வேகம் அளிக்கும் எனத் தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்

 

Next Story

கள்ளக்குறிச்சி விவகாரம்; முக்கிய குற்றவாளி கைது!

Published on 23/06/2024 | Edited on 23/06/2024
Forgery issue; The main culprit arrested

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 4 பெண்கள் உட்பட 55 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. சிகிச்சையில் இருப்பவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகின்றனர். இதனால் இறப்புகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதே சமயம் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு கள்ளக்குறிச்சி, சேலம் மற்றும் விழுப்புரம் அரசு மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விவகாரம் தொடர்பான வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் இந்தச் சம்பவம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் விசாரனையத் தொடங்கியுள்ளார். இதற்கிடையே கள்ளச் சாராயம் விற்பனை செய்த கோவிந்தராஜ், அவரது மனைவி விஜயா, சகோதரர் தாமோதரன் உள்ளிட்ட மூவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது. 

Forgery issue; The main culprit arrested

அதனைத் தொடர்ந்து மெத்தனால் விற்பனையாளர்களான சின்னதுரை, மதன், ஜோசப்ராஜ் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது. அதோடு  கள்ளச்சாராயத்தில் மெத்தனால் கலந்த விவகாரத்தில் ராமர், சின்னதுரை மற்றும் ஜோசப் ராஜா ஆகிய 3 பேர் மீது கொலை வழக்குப்பதிவு செய்து கச்சிராபாளையம் போலீசார் நடவடிக்கை எடுத்திருந்தனர்.

இந்நிலையில் கள்ளச்சாராய வழக்கில் தேடப்பட்டு வந்த சிவக்குமார் என்பவர் சென்னை எம்.ஜி.ஆர். நகரில் கைது செய்யப்பட்டுள்ளார். மதுரவாயலைச் சேர்ந்த சிவக்குமார் எம்.ஜி.ஆர். நகரில் உள்ள தனது உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த நிலையில் போலீசார் கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் இதுவரை பத்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 55 பேரின் உயிரிழப்பு காரணமான கள்ளச்சாராயத்திற்கு மெத்தனால் சப்ளை செய்தவர் சிவக்குமார் ஆவார். 

Next Story

மர்ம விலங்கு கடித்து ஆடுகள் உயிரிழப்பு; வனத்துறையினர் விசாரணை

Published on 22/06/2024 | Edited on 22/06/2024
Goats attacked by mysterious animal bites; Forest department investigation


ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் பத்து வனச்சரகங்கள் உள்ளன. இதில் டி என் பாளையம் வனச்சரகமும் அடங்கும். இந்த வனப்பகுதியில் யானை, புலி, சிறுத்தை வசித்து வருகின்றன. குறிப்பாக சிறுத்தை அவ்வப்போது வனப்பகுதியை விட்டு வெளியேறி கிராமத்துக்குள் புகுந்து கால்நடைகளை வேட்டையாடுவது தொடர்கதையாகி வருகிறது.

ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள வேமாண்டம் பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன். இவர் ஆடுகளை வளர்த்து வருகிறார். அவரது வீடு வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. நேற்று இரவு வழக்கம் போல் ஆடுகளை வீட்டு முன்பு உள்ள காலி இடத்தில் கட்டி விட்டு தூங்கச் சென்று விட்டார். இந்நிலையில் இன்று காலை சரவணன் வந்து பார்த்தபோது இரண்டு ஆடுகள் மர்ம விலங்கால் கடிக்கப்பட்டு உயிரிழந்திருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இந்த தகவல் காட்டுத்தீ போல் பரவியதால் அவரது வீட்டு முன்பு ஏராளமானோர் கூடிவிட்டனர்.

பின்னர் இது குறித்து நம்பியூர் போலீசாருக்கும், டி.என்.பாளையம் வனத்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து அங்கு ஏதேனும் விலங்குகள் கால் தடயம் பதிவாகியுள்ளதா என்று ஆய்வு செய்து வருகின்றனர். மர்ம விலங்கு கடித்து இரண்டு ஆடுகள் பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன்பும் இதேபோல் மர்ம விலங்கு கடித்து கால்நடைகள் உயிரிழந்துள்ளதாக அப்பகுதி மக்கள் கூட்டம் சாட்டியுள்ளனர். இதையடுத்து அந்த பகுதியில் சிசிடிவி கேமராக்களை பொருத்தி கண்காணிக்க வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.