Skip to main content

"இது நாள்வரை நடவடிக்கை இல்லை” - வெளிநடப்பு செய்த கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலர்!

Published on 24/08/2021 | Edited on 24/08/2021

 

"This is not an action to date, as repeatedly stated at the meeting" - Communist Party councilor who left the meeting

 

திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியக் குழுவின் சாதாரணக் கூட்டம், கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழு பெருந்தலைவர் ஹேமலதா முத்துச்செல்வன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் கலைச்செல்வி சிலையழகன், ஆணையர் சரவணக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய மேலாளர் சண்முகம் வரவேற்றார். கூட்டத்தில் தளுகை ஊராட்சி ஒன்றிய கம்யூனிஸ்ட் கவுன்சிலர் முத்துக்குமார் பேசுகையில், “தளுகை ஊராட்சியில் கழிப்பறை கட்டுவதற்கு இடவசதி அற்றவர்களுக்கு, அரசு பொது இடங்களில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் கட்டித் தரப்பட்டுள்ள 40 கழிப்பறைகள் எவ்வித பராமரிப்பும் இன்றி சீரழிந்துவருகிறது.

 

அதில் பஞ்சாயத்து நிர்வாகம் உட்பட அனைவரும் குப்பையைக் கொட்டி, குப்பைக்கிடங்காக மாற்றிவருகின்றனர். இவற்றை சீரமைத்து பயன்பாட்டில் கொண்டுவந்து பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ள பொது கிணறுகளுக்கு அருகிலும், நீர் நிலையிலும் குப்பைகள் கொட்டும் அவல நிலையை மாற்ற வேண்டும். மேலும் பிறப்பு - இறப்பு, வாரிசு சான்றிதழ், வருமான வரி சான்றிதழ் உள்ளிட்டவற்றை பொதுமக்கள் எளிதில் பெற, 2014ஆம் ஆண்டு தேசிய ஊரக வளர்ச்சி திட்டத்தின் கீழ், சுமார் ரூ. 40 லட்சம் செலவில் கட்டப்பட்ட கிராம சேவை மைய கட்டடம் இதுநாள்வரை மக்கள் பயன்பாட்டில் இல்லாததால், குடிகாரர்களின் கூடாரமாக மாறியுள்ளது. இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். நீண்டநாள் கோரிக்கையான, முருங்கப்பட்டியில் உள்ள தனியார் வெடிமருந்து தொழிற்சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளைப் பலமுறை கூட்டத்தில் எடுத்துக் கூறியும் இதுநாள்வரை நடவடிக்கை இல்லை” எனக் கூறி வெளிநடப்பு செய்தார்.

 

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதற்குப் பதில் அளித்த ஆணையர் விரைவில் தங்களது குறைகளை சரி செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி கூறினார். கூட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் அத்தியப்பன் ஜெகநாதன், ராமச்சந்திரன், தனலட்சுமி, சந்திரா, மணிகண்டன், ராஜசேகரன், கண்ணதாசன், ரேணுகாதேவி M. சந்திரா, திட்ட மேலாளர் பால்ராஜ், ஒன்றிய மேற்பார்வையாளர் ராஜசேகர், ஒன்றிய பொறியாளர் செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கூட்ட மன்றத்தில் வைக்கப்பட்ட 18 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் ஒன்றிய மேலாளர் கிருஷ்ணகுமார் நன்றி கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கடத்தலைத் தடுக்க தீவிர கண்காணிப்பு; அரிசி ஆலைகளில் எஸ்.பி திடீர் ஆய்வு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Sp conducts surprise inspection of rice mills to prevent smuggling in Trichy

அத்தியாவசிய பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் ஆகிய குற்றங்களை தடுக்கும் பொருட்டு தீவிரமான கண்காணிப்பு நடவடிக்கையில் தொடர்ந்து பல இடங்களில் ரோந்து சென்று தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை காவல்துறை தலைவர் ஜோஷி நிர்மல்குமார் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, திருச்சி மண்டல குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை காவல் கண்காணிப்பாளர் சுஜாதா உத்தரவின் படி  திருச்சி மாவட்டத்தில்  காவல்  ஆய்வாளர்  செந்தில்குமார் , உதவி ஆய்வாளர்  கண்ணதாசன் மற்றும் காவலர்கள் அடங்கிய குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திருச்சி மண்டல காவல் கண்காணிப்பாளர் சுஜாதா மணப்பாறையில் உள்ள தனியார் நவீன அரிசி ஆலைகள் மற்றும் ரேஷன் அரிசி அரவை முகவர் அரிசி ஆலைகளில் ஏதேனும் முறைகேடு நடைபெறுகிறதா? என திடீர் சோதனையில் ஈடுபட்டார். ஆய்வின் போது திருச்சி காவல் ஆய்வாளர் ,உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் இருந்தனர். மேலும் திருச்சி மாவட்ட எல்லையோர பகுதிகளில் பல இடங்களில் இக்குழு திடீர் வாகன சோதனைகளில் ஈடுபட்டு ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

ஓடும் பேருந்தில் இருக்கை கழன்று வெளியே தூக்கி வீசப்பட்ட நடத்துநர்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
conductor was thrown out of the running government bus

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து ஸ்ரீரங்கம் நோக்கி ஒரு அரசு டவுன் பேருந்து புறப்பட்டது. இதில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்த பேருந்து, பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு கலையரங்கம் தாண்டி வளைவில் திரும்பியது. அப்போது எதிர்பாராத விதமாக அந்த பஸ்ஸின் நடத்துநர் இருக்கை நெட்டு போல்டு கழன்று, அதில் அமர்ந்திருந்த நடத்துநர் பஸ்சுக்கு வெளியே தூக்கி வீசப்பட்டார்.

இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைப் பார்த்து பயணிகள் கூச்சலிட உடனே டிரைவர் பேருந்தை நிறுத்தினார். பின்னர் காயத்துடன் கிடந்த நடத்துநரை மீட்டு அருகாமையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அந்த பேருந்தில் வந்த பயணிகளை பின்னால் வந்த வேறொரு பேருந்தில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து ஓட்டுநர் சாலையில்  கிடந்த இருக்கையை எடுத்து பஸ்சில் போட்டுவிட்டு பணிமனைக்கு சென்றார். அதிர்ஷ்டவசமாக  நடத்துநர் தூக்கி வீசப்பட்ட நேரத்தில் அந்த வழியாக வேறு வாகனங்கள் வரவில்லை. அவ்வாறு வந்திருந்தால் நிலைமை மோசமாகி இருக்கும் என பயணிகள் அச்சம் தெரிவித்தனர். ஓடும்பேருந்தில் இருக்கை கழன்று நடத்துநர் வெளியே தூக்கி வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.