Skip to main content

மனைவியுடன் முறையற்ற தொடர்பு; வடமாநில வாலிபர் ஓசூரில் கொடூர கொலை!

Published on 04/10/2022 | Edited on 04/10/2022

 

north indian youth passed away in hosur

 

ஓசூர் அருகே, அண்ணியுடன் முறையற்ற தொடர்பு வைத்திருந்த வடமாநில வாலிபர், கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் - பாகலூர் செல்லும் சாலையில் உள்ள உலியாளம் கிராமத்தில் தனியார் லேஅவுட்டில் கட்டுமானத் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இங்கு பீஹார் மாநிலம் மொஜப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிவிஜிகுமார் (22), பங்காஜூ பஸ்வான் (25) ஆகியோர் வேலை செய்து வந்தனர். இவர்கள் இருவரையும் ஒப்பந்த பணியாளராக தேன்கனிக்கோட்டை அருகே உள்ள தொளுவபெட்டாவைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் ஜெயக்குமார் (27) என்பவர் பணியமர்த்தி உள்ளார். 

 

சிவிஜிகுமார், பங்காஜூ பஸ்வான் ஆகிய இருவரும் உலியாளம் பகுதியில் ஒரே அறையை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தனர். திங்கள்கிழமை (செப். 4) அதிகாலை 2.30 மணியளவில் சிவிஜிகுமார் திடீரென்று ஜெயக்குமாரை செல்போனில் தொடர்பு கொண்டு, தனது அறையில் இருந்த பங்காஜூ பஸ்வானை காணவில்லை என்று கூறியுள்ளார். 

 

இதையடுத்து ஜெயக்குமார் அங்கு சென்றார். இருவரும் சேர்ந்து பங்காஜூ பஸ்வானை பல இடங்களில் தேடினர். அப்போது, காணாமல் போனதாகச் சொல்லப்பட்ட பங்காஜூ பஸ்வான், அவர் தங்கியிருந்த அறையின் அருகே உள்ள முள்புதரில் சடலமாகக் கிடந்தது தெரிய வந்தது. தகவல் அறிந்த பாகலூர் காவல்நிலைய காவல்துறையினர் நிகழ்விடம் விரைந்தனர். சடலத்தைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக ஒசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

 

முதல்கட்ட விசாரணையில், பங்காஜூ பஸ்வானை மர்ம நபர்கள் கழுத்தை நெரித்துக் கெலை செய்திருப்பது தெரிய வந்துள்ளது. சந்தேகத்தின்பேரில்,  அவருடன் ஒரே அறையில் தங்கியிருந்த சிவிஜிகுமாரை பிடித்து விசாரித்தபோது, அவர்தான் பங்காஜூவை கொலை செய்திருப்பது தெரிய வந்தது. மேலும், தொடர் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 

 

பீஹாரில் உள்ள சிவிஜிகுமாரின் அண்ணியுடன் பங்காஜூ பஸ்வானுக்கு முறையற்ற தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதையறிந்த சிவிஜிகுமார் அவரை கண்டித்துள்ளார். இது தொடர்பாக அவர்களுக்குள் முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் சிவிஜிகுமார், கடந்த நான்கு நாள்களுக்கு முன்பு, ஓசூரில் ஒரு கட்டுமான நிறுவனத்தில் கட்டட வேலை இருப்பதாகக்கூறி, அழைத்து வந்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை (அக். 2) இரவு, ஓசூரில் வைத்து அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.  


இதில் ஆத்திரம் அடைந்த சிவிஜிகுமார், பங்காஜூ பஸ்வானின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு, முள்புதருக்குள் சடலத்தை தூக்கி வீசிவிட்டுச் சென்றிருப்பதும், தான் கொலை செய்தது தெரியாமல் இருக்க, அவரும் ஜெயக்குமாருடன் சேர்ந்து கொலையுண்ட நபரை தேடி வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து, சிவிஜிகுமாரை காவல்துறையினர் கைது செய்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.