![nlc and coal india agreement sing 5000 megawatts power produce](http://image.nakkheeran.in/cdn/farfuture/ywspZAhyJXaZjh0vRVOgAMzegsE2Ai4jMgsiM1_3h6I/1593934324/sites/default/files/inline-images/nlc_8.jpg)
நாடு முழுவதும் இயங்கக்கூடிய 5000 மெகாவாட் திறனுள்ள புதிய அனல் மின் மற்றும் சூரிய ஒளி மின்சக்தி திட்டங்களை செயல்படுத்துவதற்கான கூட்டு முயற்சி நிறுவனம் அமைக்க ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
மத்திய அரசின் நிலக்கரித் துறை கட்டுப்பாட்டில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களான நவரத்னா அந்தஸ்துள்ள என்.எல்.சி இந்தியா நிறுவனமும், மகாரத்னா அந்தஸ்துள்ள கோல் இந்தியா நிறுவனமும் இணைந்து நாடு முழுவதும் இயங்கக்கூடிய 5000 மெகாவாட் திறனுள்ள புதிய அனல் மின் மற்றும் சூரிய ஒளி மின்சக்தி திட்டங்களை செயல்படுத்த உள்ளது.
![nlc and coal india agreement sing 5000 megawatts power produce](http://image.nakkheeran.in/cdn/farfuture/uxjPMEfKk4QHpH6wXBA5U3dV06PYGM4E9ov3x0gROfk/1593934339/sites/default/files/inline-images/nlc3333346.jpg)
இதற்கான கூட்டு முயற்சி நிறுவனம் அமைப்பதற்கான ஒப்பந்தம் காணொலி காட்சி மூலம் ஜூலை 3- ஆம் தேதி கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தில் என்.எல்.சி இந்தியா நிறுவனத்தின் திட்டம் மற்றும் செயலாக்கத்துறை இயக்குனர், கோல் இந்தியா நிறுவனத்தின் தொழில்நுட்ப இயக்குனர் ஆகியோர் கையொப்பமிட்டுள்ளனர்.
இரண்டு நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் மேலாண் இயக்குனர்கள், இயக்குனர்கள் மற்றும் உயரதிகாரிகள் இந்த ஒப்பந்த கலந்தாய்வு கூட்டத்தில் உடனிருந்தனர். இந்த புதிய நிறுவனத்தில் பங்கு விகிதம் இரண்டு நிறுவனங்களுக்கு இடையே 50: 50 என்ற அளவில் இருக்கும்.
மத்திய அரசின் நிலக்கரி துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் என்.எல்.சி இந்தியா நிறுவனம் மற்றும் கோல் இந்தியா நிறுவனம் ஆகிய இரண்டு நிறுவனங்களின் ஒன்றுபட்ட திறன் மற்றும் நிபுணத்துவத்தினால் செயல்படுமாறு அமைக்கப்பட்டுள்ள கூட்டு முயற்சி நிறுவனம் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.