Skip to main content

என்எல்சி விபத்து: ரூ 50 லட்சம் இழப்பீடு, குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர வேலை- மார்க்சிஸ்ட் கட்சியின் கே.பாலகிருஷ்ணன் வலிறுத்தல்

Published on 01/07/2020 | Edited on 02/07/2020
 NLC accident; Rs 50 lakh compensation, permanent work for a family - K Balakrishnan

 

சிதம்பரத்தில் செய்தியாளர்களை சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசுகையில், நெய்வேலி அனல் மின்நிலையத்தில் ஜூலை 1-ந்தேதி புதன்கிழமை, 2-வது அனல் மின்நிலையத்தின் 5-வது யூனிட்டில் தீவிபத்து ஏற்பட்டு பாய்லர் வெடித்து 6 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலே இறந்துள்ளார்கள். 17-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்து சென்னைக்கு மேல் சிகிச்சைகாக அழைத்து சென்றுள்ளனர். அதேபோல் கடந்த 6 மாதத்திற்கு முன் இதே இடத்தில் 6-வது யூனிட்டில் விபத்து ஏற்பட்டு 5-பேர் இறந்தனர். பல தொழிலாளர்கள் காயம் அடைந்தனர். கடந்த 2019-ல் நடந்த விபத்தில் ஒருவர் இறந்தார். 5-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். மத்திய அரசின் நவரத்தின நிறுவனங்களில் ஒன்றான இந்த நெய்வேலி என்எல்சி நிறுவனம் வருடத்திற்கு ரூ1200கோடி அளவுக்கு லாபம் தரக்கூடியது. இதில் அடுத்தடுத்து நடைபெறும் விபத்துகள் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இது குறித்து நெய்வேலி நிறுவனம் ஆய்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.

இந்த விபத்து குறித்து விசாரணை செய்ததில் நெய்வேலி நிறுவனத்திற்கு பாய்லரை திருச்சியில் உள்ள பொதுதுறை நிறுவனமான பெல் நிறுவனம் வழங்கி வருகிறது. அந்த பாய்லர் பராமரிக்கும் பணியை அந்த நிறுவனத்திடம் கொடுப்பது இல்லை. இதற்கு மாறாக பாய்லர்களை பராமரிக்கும் பணியை தனியார் காண்ட்ராக்டர் வசம் ஒப்படைத்துள்ளனர். இது கையூட்டு வாங்கிகொண்டு, பணிகளை கொடுத்துள்ளதாக சந்தேகம் எழுகிறது.  அவர்கள் சரியான முறையில் பாய்லர்களை பராமரிக்காததால் இந்த விபத்து நடந்துள்ளது. இது எதேச்சையாக நடந்த விபத்து இல்லை. நிர்வாகத்தின் கோளாறு காரணமாகவும், நிறுவனத்தில் உள்ள அதிகாரிகளின் தவறான அணுகுமுறையால் தொடர்ந்து விபத்து நடைபெற்று உயிர் பலி ஏற்படுகிறது. ஆனால் தொடர்ந்து விபத்து நடைபெறுகிறது சம்பந்தபட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பது இல்லை.

இந்த விபத்தில் இறந்துபோன தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ50 லட்சம் இழப்பீடு மற்றும் ஒருவருக்கு நிரந்தர அரசு வேலை வழங்க வேண்டும். காயம் அடைந்தவர்களுக்கு ரூ10 லட்சம் அவர்களின் மருத்துவ செலவுகளை அரசே ஏற்க வேண்டும். இந்த விபத்து குறித்து ஒரு குழு உயர்மட்ட குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்று மத்திய அரசை கேட்டுக் கொண்டார். மேலும் இது விபத்து நடந்தது என்று இழப்பீடு கொடுத்துவிட்டு சென்று விடாமல் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிபடுத்த வேண்டும்.

காவல்துறை எந்த அளவுக்கு அத்துமீறி நடந்து கொள்கிறது என்பதற்கு சத்தான்குளம் சம்பவம் நடைமுறை உதாரணம். அந்த சம்பவத்தில் மதுரை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மார்க்சிஸ்ட் கட்சி வரவேற்கிறது. பொறுப்புணர்வோடு ஒரு நீதிபதி காவல்நிலையத்தில் விசாரணையில் இருக்கும்போதே அங்கே விரும்பத்தகாத சம்பவங்கள் அங்குள்ள காவலர்களால் நிகழும்போது அது என்ன காவல் நிலையமா அல்லது சமூக விரோத கூடமா? என கேள்வி எழுப்பினார்.

தந்தை, மகன் கொலை விவகாரத்தில் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்ய முகாந்திரம் இருப்பதாக நீதிமன்றம் கருத்து கூறியிருப்பதால் இதில் சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மற்றும் தொடர்புடைய அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்து அவர்கள் அனைவரையும் ஏன் கைது செய்யவில்லை,  கரோனா வைரஸ் ஊரடங்கு காலங்களில் சிறப்பாக பணிபுரிந்த காவலர்களை பார்த்திருக்கிறோம் அப்படி உள்ள காவல் துறையில்  இப்படி நடப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. சாத்தான்குளம் சம்பவத்தில்  காவல்துறை உயர் அதிகாரிகள் ஏன் நடவடிக்கை எடுக்காமல் மௌனம் சாதிக்கின்றனர். தமிழக முதல்வர், அமைச்சர் காப்பாற்றிவிடுவார்கள் என காவல்துறை அதிகாரிகள் நினைத்துள்ளனரா, இதற்கு தமிழக முதல்வர் சரியான பதிலை கூறவேண்டும்.

அதேபோல தமிழகத்தில் கடலூர் மாவட்டம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு காவல் நிலையங்களில் பணி செய்யும் அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டும் அவர்கள் தொடர்ந்து பணியில் உள்ளனர். அவர்கள் மீது பெரிய அளவில் குற்றம் சாட்டி வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்காமல் பணியாற்ற அனுமதிப்பதால் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுகிறது. எனவே தமிழக தலைமை காவல்துறை அதிகாரி அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தினார்.

இவருடன் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் மூசா, மாவட்டசெயற்குழு உறுப்பினர் ரமேஷ்பாபு, சிதம்பரம் நகர செயலாளர் ராஜா உடன் இருந்தனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

'அம்பேத்கர் பிறந்தநாளில் தேர்தல் அறிக்கை வெளியிடுவது பாஜகவின் ஏமாற்று வேலை'-கே.பாலகிருஷ்ணன் விமர்சனம்

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
'Issuing election manifesto on Ambedkar's birthday is a scam by BJP' K. Balakrishnan review



கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அம்பேத்கர் பிறந்தநாளில் அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிதம்பரம் நகர செயலாளர் ராஜா தலைமை தாங்கினார். இதில் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.  பின்னர் அம்பேத்கர் புகழ் ஓங்குக என கோஷங்களை எழுப்பினார்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் கே. பாலகிருஷ்ணன் பேசுகையில்,'' காலங்காலமாக இந்தியாவில் நிலவிய சாதிய ஏற்றத்தாழ்வுகளை ஒழித்து அனைவரும் சமம் என்கிற ஒரு நிலையை உருவாக்க தன் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்ட மகத்தான தலைவர் அம்பேத்கர். மனிதர்களுக்குள்ளே ஏற்றத்தாழ்வுகள் இருக்கக் கூடாது என்கிற உயர்ந்த லட்சியத்தை இந்தியாவில் நடைமுறைப்படுத்த எந்த லட்சியத்திற்காக பாடுபட்டாரோ அதனை நாம் அனைவரும் உறுதி ஏற்க வேண்டும்.

அரசியல் சாசனத்தையே அப்புறப்படுத்தி விட்டு வர்ணாசிரம தர்மத்தை அரியணை ஏற்றுவதற்கு துடிக்கும் ஆர்.எஸ்.எஸ் தலைமையிலான கூட்டணி இன்று பகிரங்கமாக வேலை செய்து வருகிறார்கள். அதை வீழ்த்துகிற மகத்தான கூட்டணியாக இந்தியா கூட்டணி அமைந்துள்ளது. தமிழகத்தில் உள்ள 40 தொகுதிகளிலும் வட இந்தியாவில் உள்ள தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி மகத்தான வெற்றி பெற்று மத்தியிலே ஒரு ஆட்சி மாற்றம் ஏற்படும் என உறுதியாகி உள்ளது.

தமிழ்நாட்டில்  பாட்டாளி மக்கள் கட்சி கையை முறுக்கி கடைசி நேரத்தில் கையெழுத்து வாங்கி உடன்பாட்டை ஏற்படுத்தி உள்ளனர். பாட்டாளி மக்கள் கட்சியினரை பார்த்து நான் கேட்பதெல்லாம் இட ஒதுக்கீடு என்ற கொள்கையே இந்த நாட்டில் இருக்கக் கூடாது. சாதி ஏற்றத்தாழ்வுகள் பிரம்மாவால் படைக்கப்பட்டது. வருணாசிர தத்துவம் தான் இந்த ஆட்சியினுடைய தத்துவம் என்று சொல்லக்கூடிய ஆர்.எஸ்.எஸ்,பா.ஜ.கவோடு இட ஒதுக்கீட்டிற்காக போராடும் நீங்கள் சமூக நீதியை வற்புறுத்துவதற்காக போராடும் நீங்கள் தேர்தல் உறவு கொண்டது இயற்கை நியதிகளுக்கே விரோதமானது இல்லையா?

அம்பேத்கருடைய கொள்கைகளுக்கு சாவுமணி அடிக்கிறவர்கள், சாதிய ஏற்றத்தாழ்வுகளை தூக்கி பிடிக்கிறவர்கள், வர்ணாசிரம தர்மம் தான் எங்கள் லட்சியம் என்பவர்கள், வர்ணாசிரம தர்மம் தான் இந்தியாவின் அரசியல் சாசனமாக மாற்ற வேண்டும் என அறிவித்துள்ள ஆர்.எஸ்.எஸ் தலைமை தாங்கக் கூடிய பா.ஜ.க அம்பேத்கர் பிறந்த தினத்தில் தேர்தல் அறிக்கை வெளியிடுவதாக கூறுவது நாட்டு மக்களை ஏமாற்றுவதற்கான கபட நாடகம். சிதம்பரத்தில் திருமாவளவன் மகத்தான வெற்றி பெறுவார்'' எனக் கூறினார்.

இவருடன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருப்போரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ். பாலாஜி, தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழுவின் மாநில துணைத்லைவர் மூசா, மாவட்டக் குழு உறுப்பினர் ஜெயச்சித்ரா, நகர்மன்ற துணைத்தலைவர் முத்துக்குமரன், ஒன்றிய செயலாளர்கள் மனோகர்,செல்லையா, விசிக முன்னாள் மாவட்டச் செயலாளர் பால.அறவாழி உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் உடன் இருந்தனர்.

Next Story

“எடப்பாடிக்கு எட்டப்பன் வரலாறு தான் பொருந்தும்” - கே.பாலகிருஷ்ணன்

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
 history of Eddyappan is suitable for Edappadi palaniswami says K. Balakrishnan

புவனகிரி பேரூந்து நிலையம் அருகே இந்தியா கூட்டணியின் திமுக தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில்  பானை சின்னத்தில் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவு திரட்டி பானைச்சின்னத்திற்கு வாக்கு கேட்கும் வகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். புவனகிரி ஒன்றியச்செயலாளர் பி.ஜெ.ஸ்டாலின் வரவேற்றார்.

இதில் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கலந்துகொண்டு பேசுகையில், “கடந்த 2019 ஆம் ஆண்டு தேர்தலில் திருமாவளவன் குறைந்த வாக்கில் வெற்றி பெற்றார். இந்த முறை வெற்றி பெறமாட்டார் எனக் கூறிவருகின்றனர்.  எதிரணியில் இருக்கிற கட்சிகள் எல்லாம் ஒன்றாக சேர்ந்தபோது கூட உங்களால் திருமாவளவனை தோற்கடிக்க முடியவில்லை.   இன்றைக்கு  ஒண்ணா இருந்த கூட்டணி உங்களுக்குள்ளேயே உடைந்து போய் கிடக்கிறது. அதிமுகவை பல்வேறு கூறுகளாக உடைத்த பெருமை தமிழக வரலாற்றில் எடப்பாடி பழனிசாமிக்கு சேரும். அதேபோல இந்த தேர்தலிலே, தேர்தலுக்குப் பிறகு அதிமுக என்கிற கட்சியினுடைய முடிவுரையை எழுதுகிற காரியத்தையும் அதே எடப்பாடி பழனிசாமி தான் செய்து கொண்டிருக்கிறார்.

 history of Eddyappan is suitable for Edappadi palaniswami says K. Balakrishnan

எடப்பாடி பழனிசாமி மோடியிடம் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை என பேசுகிறார். 5 ஆண்டு  ஆட்சியில்  மோடி செய்யக்கூடிய எல்லா பாவத்துக்கும்  பக்க பலமா இருந்தது நீங்கதானே. அந்தக் கொலைகார கூட்டத்திற்கு காவடி தூக்குனது நீங்க தான். இதையெல்லாம் செய்துவிட்டு நான் ஒரு விவசாயி எனக் கூறுகிறீர்கள்.  வெள்ளையனை எதிர்த்து போராடி தூக்கு மேடைக்கு சென்ற கட்டபொம்மனுக்கு ஒரு வரலாறு இருக்கும் என்று சொன்னால், அதனை காட்டிக் கொடுத்த எட்டப்பனுக்கும் ஒரு வரலாறு இருக்கத்தான் செய்கிறது.  உங்களுக்கு எட்டப்பன் வரலாறு தானே பொருந்தும். விவசாயிகளுக்கு எதிராக 3 வேளாண் சட்டங்களுக்கு  ஆதரவு அளித்தீர்கள். டெல்லியில் லட்சக்கணக்கான விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சட்டத்தை நியாயப்படுத்தி அப்போது பேசினீர்கள். தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன் சட்டமன்றத்தில் இந்த 3 சட்டங்களையும் கிழித்து எறிய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றினார். அதே சட்டமன்றத்தில் தான் நீங்களும் இருந்தீர்கள். ஏன் தீர்மானம் நிறைவேற்றவில்லை. சட்டத்தை நிறைவேற்றியது மோடி கூட்டம் என்றால்,  ஆதரித்த துரோகி கூட்டம் அதிமுக என்பதை மறந்துவிடக்கூடாது.

தமிழகத்தில் மோடி பாய் போட்டு படுத்தால் கூட ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாது. சிதம்பரம் தொகுதியில் பாஜகவால் டெபாசிட் பெற முடியுமா? தமிழகத்தில் எந்த தொகுதியில் அவர்களால் டெபாசிட் பெற முடியும்?. முகவரியே இல்லாத கட்சியை வைத்துக் கொண்டு எப்படி ஜெயிக்க முடியும். நாட்டு மக்கள் கட்டிய வரிப்பணத்தை அம்பானிக்கும், அதானிக்கும் ரூ.16 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்துள்ளீர்கள். இது தமிழகத்தில்  4 முறை பட்ஜெட் போடலாம். ஆனால் விவசாயிகள், தொழிலாளர்கள், மாணவர்கள் வாங்கிய கடனை  தள்ளுபடி செய்யவில்லை. ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை என கூறினீர்கள். செய்தீர்களா? ரயில்வே துறையில் 30 லட்சம் வேலை காலியிடம் உள்ளது. அதனைப் பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை. மக்களுக்கும், தொழிலாளிகளுக்கும் விரோதமான மோடி ஆட்சி முடிவுக்கு வரப்போகிறது.

குடியுரிமைச் சட்டம் குடியைக் கெடுக்கும் சட்டம் என அதிமுக, பாமக உள்ளிட்ட 12  எம்பி களிடம் ஆதரவு அளிக்கவேண்டாம் என வாதாடினோம் போராடினோம், கேட்கவில்லை. ஆதரவளித்து சட்டத்தை நிறைவேற்றி கொலைக் கருவியை பாஜக கையில் கொடுத்துள்ளனர். சட்டத்தை நிறைவேற்றிய கொலைகார கூட்டம் பிஜேபி என்றால் அந்தக் கொலைகாரக் கூட்டத்திற்கு துணையாக இருந்த துரோகிகள் அதிமுக, பாமக கூட்டம். இதனை யாராவது மன்னிப்பார்களா? அம்பேத்கர் இயற்றிய சட்டத்தை அகற்றிவிட்டு  மனுநீதி சட்டத்தை  அமல்படுத்தப்  பார்க்கிறார்கள்.

சிதம்பரம் தொகுதியில் பாஜக அதிமுகவை டெபாசிட்டை இழக்க செய்ய வேண்டும். அதுதான் திருமாவளவனின் வெற்றி. பிரதமர் வேட்பாளரைத் தேர்ந்தெடுக்கும் குழுவில் ஆலோசனை வழங்கக்கூடிய திருமாவளவனை இந்த தொகுதியில் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுங்கள்” என்று பேசினார்.  

இந்நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் மாதவன், பரங்கிப்பேட்டை ஒன்றிய செயலாளர்கள் விஜய், ஆழ்வார், கீரப்பாளையம் ஒன்றியம் செல்லையா, நகர செயலாளர் மணவாளன், திமுக ஒன்றிய செயலாளர் மனோகர், மதியழகன், பேரூராட்சி தலைவர் கந்தன், காங்கிரஸ் மாவட்ட தலைவர் செந்தில்நாதன், கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொகுதி பொறுப்பாளர் பாவணன், திராவிடர் கழக மாவட்டத் தலைவர் பூசி.இளங்கோவன், செயலாளர் சித்தார்த்தன், உள்ளிட்ட கூட்டணிக் கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.