Skip to main content

திருமணம் முடிந்த கையோடு 50 மரக்கன்றுகளை நட்ட புதுமணத் தம்பதிகள்...

Published on 21/08/2020 | Edited on 21/08/2020

 

Newly married couples Planted saplings

 

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழக்காவட்டாங்குறிச்சி கிராமத்தில் இயற்கை ஆர்வலர் பட்டதாரி திருநாவுக்கரசு வசித்து வருகிறார். இவர் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக இயற்கை மீது ஆர்வம் கொண்டு மரம், பனை மரங்களை வளர்க்க வேண்டிய அவசியங்கள், இயற்கை உணவு மற்றும் மருந்தில்லாமல் வாழ்வது  குறித்து தொடர்ந்து பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்திவருகிறார். மேலும் இயற்கை ஆர்வலர்களோடு இணைந்து பல ஆயிரக்கணக்கான பனை விதைகளை விதைத்தும் மரக்கன்றுகளை நட்டும் வருகிறார்.

 

கிராம இளைஞர்கள் படித்து போட்டித்தேர்வுகளில் வெற்றிபெற்று, வேலைக்குச் செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில், மாவட்ட நூலகத்தோடு இணைந்து கீழக்காவட்டாங்குறிச்சி காலனித் தெருவில் புதிதாக நூலகத்தைக் கொண்டு வந்துள்ளார். 


கிராம இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொது மக்கள் பங்களிப்போடு நூலகம் அருகே குப்பை மேடாக கிடந்த இடத்தைச் சுத்தம் செய்து அதில் செம்மண் அடித்துச் சமமாக்கி, அதனைச் சுற்றி கம்பி வேலி அமைத்து அதில் திருக்குறள் பூங்கா ஒன்றை அமைத்தும் மூலிகைத் தோட்டங்களை அமைத்தும் பராமரித்து வருகிறார். 

 

இவர் தற்போது அரசு ஊழியராக அரியலூர் மாவட்ட வருவாய்த் துறையில் விகைகாட்டி அருகில் நாகமங்கலம் கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராகப் பணி புரிந்து வருகிறார். இன்று 21/08/2020 இயற்கை ஆர்வலர் பட்டதாரியான பிரன்னிதா என்ற இலந்தைக்கூடம் கிராமத்தில் பிறந்த தனது நெருங்கிய உறவினர் மகளை மணமகளாக ஏற்று திருப்பூட்டு விழா எனத் திருமண அழைப்பிதழில் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்து தனது தமிழ் ஆர்வத்தையும் வெளிப்படுத்தி உள்ளார். மேலும் திருமணம் முடிந்த உடனேயே மணக்கோலத்துடன் கீழக்காவட்டாங்குறிச்சி கிராமத்தில் உள்ள வண்ணான் குளம் என்ற நீர்நிலையின் கரையில் ஏராளமான கருவேல மரங்கள் இருந்தது அவற்றை அகற்றி சுத்தம் செய்து அந்த இடத்தில் 50 மரக்கன்றுகளை நட்டனர் புதுமணத்தம்பதிகள். 


இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை மரங்களின் நண்பர்கள் அமைப்பு ஒருங்கிணைப்பாளர் முத்துக்கிருஷ்ணன், இயற்கை ஆர்வலர் தங்க சண்முக சுந்தரம் மற்றும் கிராம இளைஞர்கள் செய்திருந்தனர். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலரும் மணக்கோலத்துடன் மரக்கன்றுகளை நடும் மணமக்களின் இயற்கைப் பற்றை வெகுவாகப் பாராட்டினர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'தொந்தரவு இல்லாமல் இருந்தவர்களை வெட்டி சாய்த்துள்ளனர்' - வைரலாகும் கண்ணீர் அஞ்சலி போஸ்டர்

Published on 12/12/2023 | Edited on 12/12/2023
nn

ராமநாதபுரத்தில் சாலையோரத்தில் இருந்த மரங்களை வெட்டியதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள பசுமைப்படை அமைப்பினர் பல்வேறு இடங்களில் மரங்களுக்காக கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டியுள்ளனர். அந்த போஸ்டர்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சக மரங்கள் வெட்டப்பட்ட மரங்களுக்காக பேசுவது போன்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ள அந்த கண்ணீர் அஞ்சலி போஸ்டரில், 'காற்றில் உள்ள நச்சுகளை நீக்கி சுவாசிக்க பிராணவாயு கொடுக்கும் உயிருள்ள எங்களை சமூக விரோதிகள் எக்காரணமுமின்றி வெட்டி சாய்க்கிறார்கள்.

26/11/2023 ஆம் தேதி பாரதி நகர் ஹோட்டல் பீமாஸ் நளபாகம் எதிரே யாருக்கும் தொந்தரவு இல்லாமல் சாலையோரம் இருந்த எங்களின் சகோதரரை வெட்டி சாய்த்துள்ளார்கள். மரங்களை வெட்டக்கூடாது என நீதிமன்ற தடை ஆணையை மீறி மரங்களை வெட்டுபவர்கள் மீது நடவடிக்கை ஏதும் இல்லையா? மனிதர்களை வாழவைக்கும் எங்களை வாழ விடுங்கள். கண்ணீருடன் மரங்களும் செய்யது அம்மாள் பசுமை படையும்' என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது.

Next Story

''என் மரணமே கடைசியாக இருக்கட்டும்; கருணைக் கொலை செய்யுங்கள்'' - மேட்டுப்பட்டி 9 ம் நம்பர் புளிய மரம்

Published on 05/11/2023 | Edited on 05/11/2023

 

mettupatti number 9 tamarind tree

வணக்கம்,

 

நான் புளியமரம் பேசுறேன்.. என் இயற்கைக்கு மாறான மரண கதையை கொஞ்சம் கேட்டுட்டு போங்க..

 

புதுக்கோட்டை - அறந்தாங்கி சாலையில் மேட்டுப்பட்டி கேட் - ரைஸ் மில் இடைப்பட்ட இடத்தில் கடந்த 50, 60 ஆண்டுகளுக்கு முன்பு பாதசாரிகளுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் நிழல் தரவும் அப்பகுதி குடியிருப்பு வாசிகளுக்கு பழம் தரவும், சாலை ஓரமாக என்னை நட்ட நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர்கள், தண்ணீர் ஊற்றி வளர்த்தனர். அப்ப எனக்கு நம்பர் 9. அந்த பகுதியில் யார் வீட்ல நல்லது, கெட்டது நடந்தாலும் என் நிழலில்தான் நிற்பாங்க. இதுவரை லட்சம் பேருக்கு நிழல் கொடுத்திருப்பேன். குழம்பு ருசிக்க பழம் கொடுத்தேன். லட்சக்கணக்கான விதை கொடுத்தேன்.

 

நான் வளர்ந்தது போல சாலையும் விரிவடையத் தொடங்கியது. அந்தப் பக்கம் நடந்து போறவங்களும், வாகனங்களில் போறவங்களையும் கவர்ந்து இழுக்கிறது மாதிரி கிளைகளைப் பரப்பி பசுமையான பச்சை இலை போர்த்தி வனப்பாக இருந்தேன். அத்தனை பேரும் என்னை பார்க்காமல் போக மாட்டாங்க.. அவ்வளவு அழகா இருப்பேன். எல்லாரும் என்னையே பார்க்கிறதைப் பார்த்த பெரிய பெரிய கடைக்காரங்க, பயிற்சி மையகாரங்க அவங்க கடை விளம்பர பதாகைகளை என் மேல கட்டினாங்க. அது காற்றில் பறந்தது. அப்புறம் ஆணி வச்சு அடிச்சு பதாகை வச்சாங்க. என் மேல ஆணி அடிக்கும் போது எனக்கு வலிக்கும் என்பதை அவங்க மறந்துட்டாங்க. காரணம் அவங்களோட கவர்ச்சியான விளம்பர பதாகையை எல்லாரும் பார்க்கிற மாதிரி வனப்பான மரத்தில் அடிச்சாச்சுன்னு மகிழ்ச்சி. இப்படியே நூற்றுக்கணக்கான ஆணிகள் அடிச்சதுல எனக்கும் வலி தாங்கல.

 

mettupatti number 9 tamarind tree


 

ஆணிகள் அடிச்சதுல உடலெங்கும் காயம்பட்டு கொஞ்சம் கொஞ்சமாக சாகத் தொடங்கிட்டேன். இப்ப முழுமையாக இல்லன்னாலும் 99% செத்துட்டேன். இப்ப அந்த வழியாக போறவங்க இந்த 9 ம் நம்பர் மரம் பட்டுப் போச்சுன்னு சொல்லிட்டு, என் கிட்டக்கூட ஒதுங்க பயந்து ஓடிப் போறாங்க. நீங்களே சொல்லுங்க நானாக தற்கொலை செய்து கொண்டேனா? இல்லை என்னை கொஞ்சம் கொஞ்சமா ஆணி அடிச்சு கொன்றார்களா? ஆனால், என்னை வச்சு வளர்த்த தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்களுக்கு மட்டும் உண்மை தெரிஞ்சிருக்கு. அதனால தான் இளமையா இருக்கும் போது 9 ம் நம்பர்ல இருந்த என் மீது, இயற்கைக்கு மாறான சந்தேக மரணத்திற்கான ஐபிசி பிரிவு 174 போட்டு, என் மரணம் எப்படி நிகழ்ந்தது என்று விசாரிக்க சொல்லி இருக்காங்க.

 

மரணத்தின் கடைசி தறுவாயில் ஒரு கோரிக்கை நான் 99% உயிரிழந்துட்டேன். அதனால் என் நிழலில் நின்றவர்கள் கூட இப்ப என்னைப் பார்த்து பயந்து தூரமா போறாங்க. எனக்கே என் மீது சந்தேகம் வந்துடுச்சு. இதுவரை யாருக்கும் சிறு தீங்கும் செய்யாத நான், எந்த நேரத்திலும் என் கிளைகள் உடைஞ்சு விழுந்து சாலையில் போற யாருக்கும் பாதிப்பை ஏற்படுத்திவிடுவேனோ என்ற அச்சம் எனக்குள்ளும் உள்ளது. அதனால என்னை வளர்த்த தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளே என்னை கருணை கொலை செய்து மற்றவர்களை காப்பாற்றுங்கள். என்னை கருணைக் கொலை செய்வதோடு விட்டுவிடாமல் என்னோட இயற்கைக்கு மாறான மரணத்தை (ஐபிசி 174) முன்மாதிரியாக எடுத்துக் கொண்டு நன்றாக விசாரித்து, என்னைப் போன்ற மரக்குழந்தைகளின் மேல் ஆணி அடிப்பதையும், அடியில் குப்பை கொட்டி எரிப்பதையும் தவிர்க்க நடவடிக்கை எடுத்தால் மட்டுமே சாலையோர மரக்குழந்தைகளின் உயிர்களை காப்பாற்ற முடியும். என் மரணமே கடைசியாக இருக்கட்டும், நடவடிக்கை எடுங்கள். என்னை கருணைக் கொலை செய்து அந்த இடத்திலிருந்து அகற்றிய பிறகு, என் நினைவாக என்னைப் போல ஒரு புளிய மரக்குழந்தையை நட்டு வளருங்கள். அந்த மரக்குழந்தை வடிவில் மீண்டும் உங்களுக்கு நிழல் தருகிறேன்.

 

இதுவரை என் சோகக் கதை கேட்ட உங்க எல்லாருக்கும் நன்றிகள்.
அன்புடன்.. மேட்டுப்பட்டி 9 ம் நம்பர் புளிய மரம்.