Nellai old lady death case police arrested her granddaughters

நெல்லையின் பேட்டைப் பகுதியிலிருந்து பழைய பேட்டை செல்லும் ஆதம் நகர் சாலையில் கடந்த 3ம் தேதி பெண் சடலம் ஒன்று எரிந்து கொண்டிருந்ததையறிந்த பேட்டை இன்ஸ்பெக்டர் ஹரிஹரன் தீயை அணைத்து விட்டு சடலத்தை உடற்கூராய்விற்காக பாளை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தவர், விசாரணையை மேற்ண்டார். இது குறித்த செய்தியை ஏற்கனவே நக்கீரன் இணையதளம் வெளியிட்டிருந்தது.

Advertisment

இதையடுத்து இச்சம்பவம் தொடர்பாக இன்ஸ்பெக்டர் ஹரிஹரன் குற்றப் பிரிவு இன்ஸ்பெக்டர் உள்ளிட்டவர்கள் தலைமையில் மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிரமாக விசாரணை மேற் கொண்டனர். இந்த விசாரணையில் அதிரவைக்கும் தகவல்கள் கிடைத்துள்ளன.

Advertisment

Nellai old lady death case police arrested her granddaughters

தீ வைத்து எரித்துக் கொல்லப்பட்டவர் பழைய பேட்டையைச் சேர்ந்த சுப்பம்மாள் (90) வயதான இவரை இவரது மகள் சொர்ணம் வழிப் பேத்திகளான மாரியம்மாள், மேரி இருவரும் தங்களுக்குள் முறை வைத்துப் பராமரித்து வந்திருக்கிறார்கள். இதில் பேட்டை செக்கடி பகுதியில் வசித்து வந்த மேரி, தன்னால் பராமரிக்க இயலவில்லை என்று கூறி பழைய பேட்டையிலுள்ள தனது அக்காள் மாரியம்மாளின் வீட்டில் பாட்டி சுப்பம்மாளை விட்டுச் சென்றார். இதனிடையே உடல்நலம் குன்றிய சுப்பம்மாள் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சற்று குணமடைய சில வாரங்களுக்கு முன்பு டிஸ்சார்ஜ் ஆனார்.

Nellai old lady death case police arrested her granddaughters

ஆனாலும் வயோதிகம் காரணமாக அவதிப்பட்ட பாட்டி சுப்பம்மாளைப் பராமரிக்க முடியாத பேத்திகள் இருவரும் அவரைத் தீர்த்துக் கட்ட முடிவு செய்து சம்பவத்தன்று பாட்டியை ஆட்டோ ஒன்றில் ஏற்றிக் கொண்டு இருவரும் ஆதம் நகர் பக்க சாலையோரம் வந்தனர். பின்னர், ஆட்டோவை அனுப்பி வைத்தனர். அதன் பின் மூதாட்டியை அருகேயுள்ள பகுதிக்கு அழைத்துச் சென்ற மாரியம்மாள், தான் கொண்டு வந்திருந்த போர்வையை தலையணையாக வைத்து அதில் பாட்டியைப்படுக்க வைத்தவர், தான் தயாராக வாங்கிவைத்திருந்த பெட்ரோலை பாட்டியின் மீது ஊற்றி தீ வைத்து எரித்துள்ளார்.

அதையடுத்து ஆட்டோவை வரவழைத்து மாரியம்மாள் அதில் தனது வீட்டிற்குச் செல்ல, இதற்கு உடந்தையாக இருந்த மேரி, தன் செக்கடிப் பகுதி வீட்டுக்கு நடந்தே சென்றிருக்கிறார். பல்வேறு வகையான வழிகளில் நடத்தப்பட்ட விசாரணையின் மூலம் சிக்கிய இவர்கள், இச்செயலை நடத்தியது தெரிய வந்ததாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர். பின்னர் இருவரும் கைது செய்யப்பட்டனர்.