Negligence in scorpion stings; The village is plunged into grief due to the death of the boy

தேள் கடித்தும் அலட்சியமாக இருந்த பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் திருவள்ளூரில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னாங்குளம் பகுதியைச் சேர்ந்த சிறுவன் ஜோதி ராமன். அந்த பகுதியில் உள்ள பள்ளியில் ஆறாம் வகுப்பு பயின்று வந்தார். இந்நிலையில் வீட்டருகே நண்பர்களுடன் ஜோதி ராமன் விளையாடிக் கொண்டிருந்தாக கூறப்படுகிறது. அப்பொழுது கருந்தேள் ஒன்று ஜோதி ராமனை கடித்துள்ளது. ஆனால் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாத சிறுவன் அதைப் பொருட்படுத்தாமல் விளையாடிக் கொண்டிருந்ததாகச் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் திடீரென மயக்கம் வருவதாக தன்னுடைய பெற்றோர்களிடம் சிறுவன் சொல்லியுள்ளான். உடனடியாக சிறுவன் விளையாடிக் கொண்டிருந்த இடத்திற்கு சென்ற பெற்றோர் ஆய்வு செய்ததில் அங்கு கருந்தேள் ஒன்று இருந்தது. உடனடியாக சிறுவனை திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சிறுவன் ஜோதி ராமன் உயிரிழந்தான். தேள் கடித்து ஆறாம் வகுப்பு சிறுவன் உயிரிழந்த சம்பவம் பொன்னாங்குளம் பகுதியில் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.