தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஏற்று, நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி மே 17 இயக்கம் சார்பில் ஒன்றிய அரசு அலுவலகமான சாஸ்திரி பவனை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்பட்டது. இதற்கு அவ்வியக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தலைமையேற்று வழி நடத்தினார். இதில் மனிதநேய ஜனநாயக கட்சியினரும் திரளாக பங்கேற்றனர்.
அப்போது மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி, பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “தமிழகத்தில் மட்டும் தானே நீட் தேர்வுக்கு எதிராக போராடுகிறீர்கள்? என ஒன்றிய அரசு கேட்கிறது. தமிழகத்தில் தான் சிந்திக்கும் மக்கள் அதிகமாக வாழ்கிறார்கள். எனவே தான் இந்த அநீதிக்கு இங்கு போராட்டம் நடக்கிறது. இது இந்தியாவுக்கே வழிகாட்டும்” என்றார்.
இந்த போராட்டத்தில், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான பிரவீன், விடுதலைத் தமிழ்ப் புலிகள் கட்சித் தலைவர் குடந்தை அரசன், தமிழக மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் ஷெரிப், தமிழ் புலிகள் கட்சி பொதுச் செயலாளர் பேரறிவாளன் ஆகியோருடன், மஜக இளைஞரணி மாநில செயலாளர் அசாருதீன், மத்திய சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் பிஸ்மில்லா கான், உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட மஜக வினரும், மே 17 இயக்கத்தைச் சேர்ந்த இளைஞர்களும், மாணவ, மாணவிகளும் பெரும் திரளாக பங்கேற்று முழக்கங்களை எழுப்பி கைதாகினர்.