இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக மே மாதம் 3- ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
இந்த நிலையில் தமிழகத்தில் நாட்டுப்படகுகள், இயந்திரம் பொருத்திய நாட்டுப்படகுகள் மூலம் தொடர்ந்து மீன்பிடிக்கலாம் என்றும், படகு உரிமையாளர்கள் கரோனாவைத் தடுக்க முகக்கவசம் போன்ற பாதுகாப்பு உபகரணத்தை மீனவருக்குத் தர வேண்டும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மேலும் மீன்பிடி துறைமுகம், மீன்பிடி இறங்குதளம், கடற்கரை பகுதிகளில் மீன்களைப் பொது ஏலம் மூலம் விற்கக் கூடாது. மீன் இறக்குதல், சந்தைக்குக் கொண்டு செல்லுதல் போன்ற பணிகளுக்கு குறைந்த ஆட்களையே பயன்படுத்த வேண்டும். ஆட்சியர் தலைமையிலான குழு எந்த நாளில், எத்தனை படகுகளில் மீன்பிடிக்கச் செல்லலாம் என முடிவு செய்யும். தற்போதைய ஊரடங்கு காலம் மீன்பிடி தடைக்காலமாக கருதி விசைப்படகுகள் மீன்பிடியில் ஈடுபட அனுமதியில்லை என்று அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.