Skip to main content

10,300 புள்ளிகளை நோக்கி நிப்டி! காளையின் ஆதிக்கம் தொடர்வதால் முதலீட்டாளர்கள் உற்சாகம்!! இன்று இப்படித்தான்...

Published on 22/06/2020 | Edited on 22/06/2020

 

 stock market


தேசிய பங்குச்சந்தையான நிப்டி, தொடர்ந்து இரண்டாம் நாளாகக் கடந்த வெள்ளியன்றும் ஏற்றத்தில் இருந்தது, முதலீட்டாளர்களிடைய புதிய உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த வாரத்தின் கடைசி வர்த்தக தினத்தில் நிப்டி 10,244 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்திருந்தது. இந்த ஏற்றம், அடுத்து 10,338 முதல் 10,550 புள்ளிகள் வரையிலும் உயரவும் வாய்ப்புகள் உள்ளதாக சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர்.

 

''கடந்த சில வாரங்களில் இண்டெக்ஸில் ஏற்பட்ட இழப்புகளைக் காட்டிலும், இப்போது வர்த்தகம் படிப்படியாக எழுச்சி கண்டிருக்கிறது. தேசிய பங்குச்சந்தையான நிப்டியைப் பொருத்தவரை இண்டெக்ஸ் 10,100 முதல் 10,500 புள்ளிகள் வரை உயர்வு என்பது முதலீட்டாளர்களுக்கு ஓரளவு ஆதாயம் அளிக்கக் கூடியதாகவே இருக்கும்,'' என்கிறார் ஜிமீத் மோடி. இவர் சாம்கோ செக்யூரிட்டீஸ் நிறுவனத்தின் பங்குச்சந்தை ஆய்வாளர்.

 

ஷேர்கான் பங்குத்தரகு நிறுவனத்தின் சந்தை ஆய்வாளர் கவுரவ் ரத்னாபர்கி, ''வாராந்திர அட்டவணை கணிப்பின்படி, கடந்த ஒரு வாரமாகவே நிப்டியின் இண்டெக்ஸ் நன்றாகவே மீட்சி அடைந்துள்ளது. திங்களன்றே (ஜூன் 22) நிப்டியில் 10,328 புள்ளிகளைக் கடந்தும் வர்த்தகம் ஆனாலும் ஆச்சர்யம் இல்லை,'' என்கிறார். 

 

அமெரிக்காவில் தடுமாற்றம்:

 

கடந்த வாரம் வெள்ளியன்று, காலையில் அமெரிக்க பங்குச்சந்தைகள் எழுச்சியுடன் வர்த்தகத்தைத் தொடங்கினாலும், கரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் கட்ட அலை குறித்த செய்திகளால் அடுத்த ஓரிரு மணி நேரத்தில் பங்குச்சந்தைகள் பெரும் சரிவைச் சந்தித்தன. டவ் மற்றும் நாஸ்டாக் 0.5 முதல் 0.8 சதவீதம் வரை சரிந்தன.

 

ஐரோப்பிய சந்தைகள் எழுச்சி: 

 

அமெரிக்க சந்தைகள் வீழ்ச்சி கண்டபோதும், சற்றே முரணாக ஐரோப்பிய பங்குச்சந்தைகள் கடந்த வெள்ளியன்று ஓரளவு எழுச்சி கண்டிருந்தன. லண்டனின் எப்டிஎஸ்இ, பிரான்சின் சிஏசி, ஜெர்மனியின் டிஏஎக்ஸ் ஆகிய பங்குச்சந்தைகள் இண்டெக்ஸ் 1 முதல் 1.3 சதவீதம் வரை உயர்ந்தன.

 

10,300 புள்ளிகளைக் கடக்கும்!:

 

கரோனா ஊரடங்கு காலக்கட்டத்திலும், இந்தியாவில் பல நிறுவனங்களுக்கு ஜனவரி - மார்ச் வரையிலான காலாண்டு முடிவுகள் ஓரளவு நேர்மறை வளர்ச்சி அடைந்திருப்பதால் நிப்டியில் வரும் காலங்களில் பெரிய அளவில் வீழ்ச்சி இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

இன்று (ஜூன் 22) நிப்டி இண்டெக்ஸ் 10,338 புள்ளிகளைக் கடக்கலாம் என்கிறார்கள் சந்தை ஆய்வாளர்கள். சந்தையில் நிலையற்ற தன்மை காணப்பட்டாலும்கூட நிப்டி 9,900 புள்ளிகளுக்குக் கீழே செல்லாது என்கிறார்கள். ஒருவேளை, 10,500 புள்ளிகளைக் கடந்துவிட்டால், நிப்டியின் அடுத்த பாய்ச்சல் 11,000 புள்ளிகளாகத்தான் இருக்கும் எனவும் நிபுணர்கள் கணித்துள்ளனர்.

 

ஆதாயம் அளிக்கும் பங்குகள்:

 

கடந்த வாரத்தின் இறுதியில் சில குறிப்பிட்ட பங்குகள் முதலீட்டாளர்களுக்கு ஓரளவு ஆதாயம் அளித்தன. 52 வார உச்ச விலையைக் கடந்தும் வர்த்தகம் ஆனது. அதனால் அவை மேலும் விலை உயரக்கூடும் என்ற சென்டிமென்ட் முதலீட்டாளர்களிடம் உள்ளது.

 

அதன்படி, ஜிஎம்ஆர் இன்ப்ரா, டிஎல்எப், ஜெய் கார்ப், பவர் கிரிட் கார்ப்பரேஷன், பிரமல் என்டர்பிரைசஸ், ரெயில் விகாஸ் நிகாம், ஹெச்டிஎப்சி லைப் இன்சூரன்ஸ், ஜம்ப் நெட்வொர்க்ஸ், மாருதி சுசூகி இண்டியா, ஹிமாத்ரி ஸ்பெஷாலிட்டி, சுவான் பார்சூட்டிகல்ஸ், இன்பிபீம் அவென்யூஸ், சுவான் லைப் சயின்சஸ், ஏபிபி இண்டியா, கஜாரியா செராமிக்ஸ், ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ், பிலாடெக்ஸ் இண்டியா, எஸ்ஜேவிஎன், பிர்லா கார்ப்பரேஷன், யுபிளெக்ஸ், ஆர்த்தி இண்டஸ்ட்ரீஸ், ரைட்ஸ், டிரெண்ட், என்ஐஐடி, பில்டாலிகா லைப் ஸ்டைல்ஸ், எஸ்ஸால் புரோபேக் ஆகிய பங்குகள் இந்த வாரமும் ஏற்றம் காணும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

 

அதிக ஆர்வம் காட்டும் பங்குகள்:

 

முதலீட்டாளர்களிடையே பின்வரும் பங்குகளை வாங்கிக் குவிப்பதில் பெரும் ஆர்வம் நிலவுகிறது.

 

சுவான் பார்மா, ஈஐடி பார்ரி, ஆர்ஐஎல், லாரஸ் லேப்ஸ் மற்றும் ருச்சி சோயா இண்டஸ்ட்ரீஸ் ஆகிய பங்குகளை நீண்டகால முதலீட்டு அடிப்படையில் வாங்கிப் போடுவதில் முதலீட்டாளர்கள் அதிக ஆர்வம் செலுத்துகின்றனர். மேலும், இப்பங்குகள் கடந்த 52 வார உச்ச விலையைக் கடந்தும் வர்த்தகம் ஆகி வருகின்றன என்பதும் கவனத்தில் கொண்டுள்ளனர்.

 

அதேநேரம், கடந்த 52 வார காலத்தில் குறைந்தபட்ச விலையைத் தொட்டுள்ள ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ், கண்ட்வாலா செக்யூரிட்டீஸ், பி.சி. பவர் கன்ட்ரோல்ஸ் ஆகிய பங்குகள் பெரும் வீழ்ச்சி கண்டதால் முதலீட்டாளர்கள் அதிகளவில் விற்றுத் தள்ளுகின்றனர். 

 

காளையின் ஆதிக்கம்: 
 

http://onelink.to/nknapp


ஒட்டுமொத்த அளவில், நிப்டி நிலவரம் இந்த வாரமும் காளையின் ஆதிக்கத்தில்தான் இருக்கும் என்கிறார்கள் பங்குச்சந்தை ஆய்வாளர்கள். கடந்த வெள்ளியன்று, பிஎஸ்இ சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள 500 நிறுவனங்களில் 334 பங்குகள் கணிசமான ஆதாயம் அளித்தன. இதுவும் முதலீட்டாளர்களின் உற்சாகத்திற்குக் காரணம் என்கிறார்கள் நிபுணர்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தொழில் தொடங்குவதைக் கண்காணிக்க சிறப்பு குழு; தமிழக அரசு அறிவிப்பு

Published on 29/02/2024 | Edited on 29/02/2024
Tamil Nadu Government Notification Special Committee to Monitor Business Start-ups

தமிழ்நாடு தொழில் வளர்ச்சியில் பல்வேறு முன்னேற்றங்களை அடைந்து வருகிறது. இதற்காக முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பல்வேறு முன்னெடுப்புகளையும் எடுத்து வருகிறது.

அந்த வகையில், கடந்த ஜனவரி மாதம் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் சென்னையில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் சுமார் ரூ. 6.44 லட்சம் கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் மூலம் 27 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் எனக் கூறப்பட்டது. அதனைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஸ்பெயின் நாட்டிற்கு கடந்த ஜனவரி மாதம் 27 ஆம் தேதி (27.01.2024) அரசு முறை பயணம் மேற்கொண்டார். ஸ்பெயின் நாட்டில் உள்ள பல்வேறு முன்னணி நிறுவனங்களின் நிர்வாகிகளை நேரில் சந்தித்து தமிழ்நாட்டில் முதலீடுகளை மேற்கொள்ள வலியுறுத்தினார். இதனையடுத்து பல்வேறு முன்னணி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த நிலையில், உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஒப்பந்தம் செய்த நிறுவனங்கள் தொழில் தொடங்குவதைக் கண்காணிக்க குழு ஒன்றை தமிழக அரசு அமைத்துள்ளது. இது தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘கடந்த ஜனவரி மாதம் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஒப்பந்தம் செய்த நிறுவனங்கள் தொழில் தொடங்குவதைக் கண்காணிக்க 17 பேர் கொண்ட சிறப்புக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வணிகத்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தலைமையிலான இந்தக் குழுவில் தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா, தொழில்துறை செயலர் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Next Story

பைஜூஸ் நிறுவனரை நீக்க பங்குதாரர்களின் வாக்குப்பதிவு; நிராகரித்த நிர்வாகம்

Published on 24/02/2024 | Edited on 24/02/2024
Shareholders vote to remove ByJu's founder but Rejected administration

இந்தியாவின் புகழ்பெற்ற நிறுவனம் பைஜூஸ். கேரளாவைச் சேர்ந்த பொறியாளரான ரவீந்திரன் (44) என்பவரால் தொடங்கப்பட்ட இந்த செயலியில் இணையதளம் வழியாக கல்வி மற்றும் போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி பெறலாம். கொரோனா காலத்தில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் அனைவரும் வீட்டில் இருந்து இணையதள வழியாக கல்வி கற்பதற்கு இந்த பைஜூஸ் பெரும் உதவியாக இருந்தது. இதன் மூலம், பைஜூஸ் பெரும் வருவாய் ஈட்டியது. மேலும், இதன் காரணமாக போர்ப்ஸ் பணக்கார பட்டியலில் பைஜூஸ் நிறுவனர் ரவீந்திரன் இடம்பிடித்தார்.

கொரோனா பெருந்தொற்று காலகட்டத்திற்கு பிறகு, பள்ளிகளும், கல்லூரிகளும் திறக்கப்பட்டதால், இணைய வழிமுறையில் கல்வி கற்க பலர் ஆர்வம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது. அதனால், பைஜூஸுக்கு போதிய வருவாய் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக கடன் சுமை, ஊழியர்களின் பணி நீக்கம், வருவாய் இழப்பு, அடுத்தடுத்த நிர்வாகக் குழு உறுப்பினர்கள் என கடும் பின்னடைவை பைஜூஸ் சந்தித்தது. 

இதனால், பைஜூஸில் கோடிக்கணக்கில் முதலீடு செய்திருந்த முதலீட்டாளர்கள் நம்பிக்கையிழந்து, தங்கள் பணத்தை திரும்ப பெற்று வந்தனர். இதன் காரணமாக, இந்த நிறுவனம் பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்தது. இதற்கிடையே, பைஜூஸ் நிறுவனம் அந்நியச் செலவாணி விதிமுறைகளை மீறி செயல்படுவதாக புகார்கள் தெரிவிக்கப்பட்டதை அடுத்து ரவீந்திரன் வீடு உட்பட அந்த நிறுவனத்துக்கு தொடர்புடைய இடங்களில் கடந்த ஆண்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. மேலும், அந்நிய செலவாணி மேம்பாட்டு சட்டத்தின்படி, சுமார் ரூ.9,362 கோடி அளவிற்கு முறைகேடுகளில் ஈடுபட்டதாக ரவீந்திரன் மீது குற்றம்சாட்டியது.

அடுத்தடுத்து சிக்கல்களை சந்தித்து வருவதை அடுத்து, ரவீந்திரன் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்வதை தடுக்க அவருக்கு எதிராக அமலாக்கத்துறை லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்தது. இதற்கிடையே, பைஜூஸ் நிறுவனர் ரவீந்திரன் மற்றும் அவருடைய குடும்ப உறுப்பினர்களை உயர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று பைஜூஸ் பங்குதாரர்கள் கடந்த சில வாரங்களாக கோரிக்கை வைத்து வந்தனர்.

இந்த நிலையில், EGM எனப்படும் பைஜூஸ் நிர்வாகக் குழு கூட்டம் நேற்று (23-02-24) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ரவீந்திரன் மற்றும் அவரது குடும்பத்தினர் ஆகியோர் யாரும் கலந்துகொள்ளவில்லை. இதற்கிடையே இந்த கூட்டத்தில், நிறுவனத்தில் ரவீந்திரன் மற்றும் அவரது குடும்பத்தினர் செய்த முறைகேடுகள், பொறுப்பற்ற நிர்வாகம் போன்ற அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து, ரவீந்திரன் மற்றும் அவரது குடும்பத்தினரை பதவியில் நீக்குவதற்கு ஆதரவாக வாக்களித்தனர். 

இதே வேளையில், EGM கூட்டத்தின் போது நிறைவேற்றப்பட்ட எந்த தீர்மானங்களையும்ம் அடுத்த கூட்டம் வரை செயல்படுத்தக் கூடாது என்று பைஜூஸ் நிர்வாகம், கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. அதனை விசாரித்த நீதிமன்றம், EGM கூட்டத்தை நடத்தலாம், ஆனால் அதில் எடுக்கப்படும் முடிவுகள் மார்ச் 13ஆம் தேதி வரை அமலுக்கு வராது என தெரிவித்துள்ளது.