Skip to main content

இயற்கை வாழ்வியல் அறிஞர் கோ.நம்மாழ்வார் நினைவேந்தல் மற்றும் அறுவடைத் திருவிழா!!

Published on 17/01/2021 | Edited on 18/01/2021

 

nammazhvar Remembrance program in cuddalore

 

தமிழர்களின் திருநாளான  காணும் பொங்கலையொட்டி, கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த குமாரமங்கலம் கிராமத்தில் செந்தமிழ் மரபுவழி வேளாண் நடுவம் மற்றும் தமிழ்க்காடு இயற்கை வேளாண்மை இயக்கம் சார்பில் மரபு விதைகளுக்காகவும்,  மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் தனது வாழ்நாளை அர்ப்பணித்த இயற்கை வாழ்வியல் அறிஞர் கோ.நம்மாழ்வார் அவர்களின் 7 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு மற்றும் அறுவடைத் திருவிழா இயற்கை விவசாயிகள் முன்னிலையில் நடைபெற்றது.

 

மேலும் அறுவடைக்காலத்தில் மழையின் குறுக்கீடுகளால் உழவர்கள் பல சிரமத்திற்கு ஆளாகி உள்ள சூழலில், விவசாயிகளுக்கு  புத்துணர்வு அளிக்கும் விதமாகவும், சூழ்நிலைகளைச்  செம்மைப்படுத்தவும், சுயச்சார்போடு வாழவைக்கவும்,  ஆர்வமாக உள்ளவர்கள் நெல் அறுவடையில் பங்குபெற்று அறுவடை திருவிழாவைச் சிறப்பிக்கும் நோக்கில் இத்திருவிழா நடைபெற்றது.

 

இவ்விழாவில் பாரம்பரிய நெல் ரகங்களான மாப்பிள்ளை  சம்பா, கருப்பு கவுனி, ஆத்தூர் கிச்சலி சம்பா, இலுப்பைப்பூ சம்பா, காட்டுயானம், தூயமல்லி, சீரகச் சம்பா உள்ளிட்ட நெற்பயிர்கள், முக்கனிகள், இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட தோட்டப்பயிர்கள் உள்ளிட்டவை கண்காட்சிக்காக வைக்கப்பட்டன.

 

நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் கோட்டேரி சிவக்குமார் வரவேற்புரை வழங்கினார். செந்தமிழ் மரபுவழி வேளாண் நடுவம் ஒருங்கிணைப்பாளர் முருகன்குடி கரும்பு கண்ணதாசன் தலைமை தாங்கினார்.

 

மரக்கன்று வளர்ப்பை ஊக்குவிக்கும் விதமாக, தானாக முளைத்த 1000 புங்கன் கன்றுகளைப் பைகளில் வளர்க்கும் நிகழ்வை கவிஞர் அறிவுமதி கன்று நட்டு துவக்கி வைத்தார்.

 

தமிழக உழவர் முன்னணி முருகன்குடி முருகன், இயற்கை வேளாண் ஆர்வலரும் ஏ.கே  அறக்கட்டளை நிறுவனருமான வழக்கறிஞர் அகிலன் ஆகியோர் இயற்கை வேளாண்மையின் அவசியம் குறித்தும், இயற்கை  உணவுகளின் பயன்கள் குறித்தும் விளக்கிப் பேசினர்.

 

ஏராளமான இயற்கை விவசாயிகள்  கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில் அனைவருக்கும் மாப்பிள்ளை சம்பா அரிசியில் செய்த மூலிகை கஞ்சியும், அவல் பொங்கலும் பரிமாறப்பட்டது.

 

நிகழ்வில் பங்குபெற்ற அனைவருக்கும் தமிழ்க்காடு துணிப்பை இயக்கம் சார்பாக துணிப்பை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஸ்ரீமுஷ்ணம் பெண் கொலை சம்பவம்; காவல்துறை விளக்கம்

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 Police description on Srimushnam Woman Incident

கடந்த 19ஆம் தேதி முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அந்த வகையில், கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் வாக்களிக்க சென்ற போது பெண் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதற்கு பா.ஜ.க தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், பெண் கொலை வழக்கு தொடர்பாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. 

இது குறித்து காவல்துறை வெளியிட்டுள்ளதாவது, ‘கடந்த 19.042024 தேர்தல் நாளன்று மாலை 06.00 மணியளவில் ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட பக்கிரிமானியம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயகுமார் (47) என்பவரின் தம்பி ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியா ஆகியோர் ஓட்டு போட்டு விட்டு பக்கிரிமானியம் வாட்டர் டேங்க் அருகே வந்துகொண்டிருந்த போது, அதே ஊரைச் சேர்ந்த கலைமணி, ரவி, பாண்டியன், அறிவுமணி ஆகியோர் ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியாவை ஆபாச வார்த்தைகளால் கேலி கிண்டல் செய்துள்ளனர்.

மேற்படி இரு தரப்பிரனருக்கும் இடையே 2021 ஆம் ஆண்டில் பக்கிரமானியம் கிராமத்திலுள்ள மாரியம்மன் கோயில் திருவிழாவின் போது தகராறு ஏற்பட்டு கலைமணி. ஜெயகுமாரை தாக்கியது தொடர்பாக ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கலைமணி கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சூழலில் அன்றைய தினம் ஜெயபிரியாவை கேலி செய்ததை தொடர்ந்து ஜெயசங்கர், அவரது மூத்த சகோதரர் ஜெயக்குமார், ஜெயக்குமாரின் மனைவி கோமதி மற்றும் அவர்களது மகன்கள் சதீஷ்குமார், ஜெயபிரகாஷ் ஆகியோர் ஒருபுறமும் கலைமணி, அவரது மனைவி தீபா மற்றும் அவரது உறவினர்கள் ரவி, பாண்டியன், அறிவுமணி, அருள்செழியன், தர்மராஜ், மேகநாதன், ராஜா, விக்னேஷ் ஆகியோர் கலைமணி மீது ஏற்கெனவே போடப்பட்ட வழக்கை வாபஸ் பெறுவதான கலைமணியின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்க மறுத்ததற்காக வாக்கு வாதத்தில் ஈடுபட்டு ஒருவரையொருவர் தக்கிக்கொண்டுள்ளனர்.

இந்த விவகாரத்தில் கோமதி தலையிட்டு பிரச்னையைத் தடுக்க முயலும் போது, கீழே விழுந்து உள்காயம் ஏற்பட்டுள்ளது. கோமதியை முதலுதவி மற்றும் சிகிச்சைக்காக ஆண்டிமடம் அரசு மருத்துவமணைக்கு அழைத்துச் சென்றபோது, அவர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் ஜெயக்குமார் அவரது மகன்கள் ஜெயபிரகாஷ் மற்றும் சதீஷ் குமார் காயம் அடைந்தது காரணமாக மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக ஜெயக்குமார் என்பவரிடம் வாக்குமூலம் பதிவு செய்து பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

மேற்படி வழக்கின் புலன் விசாரணையிலிருந்து இச்சம்பவத்திற்கு ஜெயசங்கரின் மகளைக் கேலி கிண்டல் செய்ததும் கலைமணிக்கும், ஜெயக்குமார் மற்றும் ஜெயசங்கருக்கும் இருந்த முன்விரோதமே காரணம் என்பது இதுவரையில் விசாரித்த சாட்சிகளின் வாக்குமூலங்களில் இருந்தும் முதல் தகவல் அறிக்கை புகாரின் மூலமும் தெள்ளத்தெளிவாக தெரியவருகிறது. இது தவிர வேறு எந்தக் காரணமும் இதுவரை மேற்கொண்ட விசாரணையில் புலப்படவில்லை. மேலும் இவ்வழக்கில் இதுவரையில் ஐந்து எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.