Skip to main content

புதிய ஆண் நண்பருடன் சேர்ந்து பழைய ஆண் நண்பருக்கு தீவைத்த பெண்! 

Published on 18/12/2021 | Edited on 18/12/2021

 

Namakkal police arrested two include woman

 

ராசிபுரம் அருகே, புதிய ஆண் நண்பருடனான தொடர்பைத் துண்டிக்கச் சொல்லி வற்புறுத்தியதால் பழைய ஆண் நண்பரை, புதிய நண்பருடன் சேர்ந்து பெட்ரோல் ஊற்றி உயிருடன் எரித்துக் கொல்ல முயன்ற பெண் உள்பட இருவரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.

 

நாமக்கல் மாவட்டம், வெண்ணந்தூர் அருகே தட்சன்காடு பகுதியைச் சேர்ந்தவர் குமார். இவர், அதே பகுதியில் உள்ள ஒரு சேகோ ஆலையில் வேலை செய்துவருகிறார். இவருடைய மனைவி காவியா (33) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக காவியா, கணவரைப் பிரிந்து தனியாக வசிக்கிறார். இந்நிலையில், அதே ஆலையில் பணியாற்றிவரும் கணேஷ் (25) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருடன் காவியாவுக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணம் செய்துகொள்ளாமல் ஒன்றாக குடும்பம் நடத்திவருகின்றனர். 

 

இது ஒருபுறம் இருக்க, ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடியைச் சேர்ந்த காவியாவின் உறவுக்காரரான குமார் (40) என்பவர் காவியா வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்றுள்ளார். இதில் அவர்கள் இருவரிடையே நெருக்கம் அதிகமானது. ஒரு கட்டத்தில், ஈரோட்டில் உள்ள வீட்டைக் காலி செய்துவிட்டு, காவியா வீட்டுக்கு அருகிலேயே வாடகைக்கு வீடு எடுத்து தங்கிவிட்டார். 

 

குமாருடன் நெருக்கம் ஏற்பட்டதை அடுத்து, கணேஷுடன் பழகுவதை காவியா தவிர்த்துவந்தார். இது தொடர்பாக கணேஷ் கேட்டபோது, குமாரை தனது உறவினர் என்றும், தொழில் தொடர்பாக இந்த ஊரில் தங்கியிருக்கிறார் என்றும், அவருக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று சத்தியம் செய்யாத குறையாக சொல்லியிருக்கிறார்.

 

இந்நிலையில், டிசம்பர் 15ஆம் தேதியன்று காவியாவை தேடிச்சென்ற கணேஷ், அங்கு அவரும் குமாரும் ஒன்றாக நெருக்கமாக இருந்ததைப் பார்த்துவிட்டார். ஆத்திரமடைந்த அவர், காவியாவிடம் தகராறு செய்தார். இதனால் அவர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. 

 

இனியும் கணேஷை விட்டுவைத்திருந்தால் நிம்மதியாக இருக்கவிட மாட்டார் என்று கருதிய காவியா, புதிய ஆண் நண்பரான குமாருடன் சேர்ந்து அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார். அதன்படி கடந்த 15ஆம் தேதியன்று வீட்டிற்கு வந்து தகராறில் ஈடுபட்டிருந்த கணேஷ் மீது குமாரும், காவியாவும் வீட்டில் இருந்த பெட்ரோலை எடுத்து அவர் மீது ஊற்றி தீ வைத்தனர். 

 

உடலில் தீப்பிடித்ததால் அலறித்துடித்த கணேஷ், அருகில் இருந்த தண்ணீர் தொட்டியில் இருந்து தண்ணீரை எடுத்து தன் மீது ஊற்றிக்கொண்டார். ஆனால் அதற்குள் அவருடைய உடல் முழுவதும் தீ பரவி, பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவருக்குத் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. 

 

இதுகுறித்த புகாரின்பேரில் வழக்குப் பதிவுசெய்த வெண்ணந்தூர் காவல் நிலைய காவல்துறையினர், காவியா, குமார் ஆகிய இருவரையும் கைது செய்தனர். இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடந்துவருகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கல்லூரி மாணவி மரணம்; நீடிக்கும் மர்மம் - போலீஸ் விசாரணை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
College student mysterious passed away in Thiruvarangam

திருவரங்கம் ராஜகோபால நகர் 2-வது தெருவைச் சேர்ந்தவர் கோபி என்கிற கோவிந்தராஜன் (வயது 60). இவர் திருவரங்கம் கோவிலில் சுவாமிக்கு வரக்கூடிய துணிகளை ஏலம் எடுத்து விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவரது மகள் ஜெய்ஸ்ரீ(வயது 18). திருச்சியில் உள்ள கல்லூரியில் பி.ஏ ஆங்கில பட்டப்படிப்பு முதலாமாண்டு படித்து வந்தார். இதற்கிடையில், இவர் திருவரங்கத்தைச் சேர்ந்த கிரோஷ் என்ற வாலிபரைக் காதலித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கீழ சித்திர வீதியில் உள்ள காதலனின் நண்பர் வீட்டு மாடியிலிருந்து குதித்து ஜெயஸ்ரீ தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது தந்தை கோவிந்தராஜன் கொடுத்த புகாரின் அடிப்படையில் திருவரங்கம் போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வழக்கு பதிந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெண்ணிலா மற்றும் போலீசார்  காதலன்  மற்றும் காதலனின் நண்பர்கள் உள்பட ஐந்து பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் இரண்டு பேர் சரித்திர பதிவேடு குற்றவாளி எனவும் தெரிய வந்துள்ளது.அதனால் இது திட்டமிட்ட கொலையா? அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா? என்பது குறித்தும் போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. அதன் அடிப்படையில் பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் காதலனின் வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். காதலனின் நண்பர் வீட்டு மாடியிலிருந்து கல்லூரி மாணவி குதித்து தற்கொலைச் செய்து கொண்ட சம்பவம் திருவரங்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story

திமுக பிரமுகரின் வீடு சூறை; மோட்டார் சைக்கிள் எரிப்பு - திருச்சியில் பரபரப்பு

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
beaten on DMK executive house in Trichy

திருச்சி சின்னக்கடை வீதி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(45). இவரது வீட்டில் நேற்று இரவு மர்ம நபர்கள் ஐந்துக்கும் மேற்பட்டோர் நுழைந்து அவரது வீட்டை அடித்து நொறுக்கியதுடன் வெளியில் நின்று இருந்த இவரது மோட்டார் சைக்கிளை தீயிட்டு கொளுத்தினர். நள்ளிரவில் திடீரென   அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததை கண்டதும் மர்ம நபர்கள்  அங்கிருந்து தப்பி சென்றனர். பிறகு அக்கம் பக்கத்தினர்  தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து  எரிந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளின் தீயை அணைத்தனர்.

இருப்பினும் மோட்டார் சைக்கிள் முழுவதும் எரிந்து எலும்பு கூடானது. பின்னர் இது குறித்து சுரேஷ்குமார் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில் அவருக்கும் தாராநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஒரு சில நபர்களுக்கும் கோவில் சம்பந்தமாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. எனவே அவர்கள் தான் செய்திருக்கலாம் என புகாரில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். நள்ளிரவில் மர்ம நபர்கள் வீடு புகுந்து, வீட்டை  அடித்து நொறுக்கி மோட்டார் சைக்கிளை எரித்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியது. சுரேஷ்குமாருக்கும் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் பழக்கடை நடத்தி வரும் நபர் ஒருவருக்கும் கோவில் திருவிழா சம்பந்தமான பிரச்சனை ஒன்று ஏற்கெனவே உள்ளது. அதுமட்டுமின்றி தேர்தல் வேலைகளில் சுரேஷ்குமார் தீவிரமாக ஈடுபட்டதும், சுரேஷ்குமார் திமுக பிரமுகர் என்பதும் குறிப்பிடத்தக்கது