Skip to main content

கண்ணாடி கடை அதிபரை கொன்றது ஏன்? பரபரப்பு தகவல்கள்!

Published on 05/07/2020 | Edited on 05/07/2020

 

namakkal district glass shop owner incident police investigation

நாமக்கல் அருகே, கண்ணாடி கடை உரிமையாளர் கொலை வழக்கில் நான்கு பேர் கைது செய்யப்பட்டு உள்ள நிலையில், கொலைக்கான காரணம் குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

 

நாமக்கல் அருகே உள்ள கூலிப்பட்டியைச் சேர்ந்தவர் பாலசுப்ரமணி. இவருடைய மகன் ஜெயக்குமார் (40). பட்டறைமேடு என்ற இடத்தில் கண்ணாடி கடை நடத்தி வந்தார்.  கடந்த ஜூன் 30- ஆம் தேதி இரவு 08.00 மணிக்கு கடையை பூட்டிய அவர், நீண்ட நேரமாகியும் வீட்டுக்குச் செல்லவில்லை. மறுநாள் (ஜூலை 1) காலையில் அவர், நாமக்கல் அருகே உள்ள பெருமாப்பட்டியில் சடலமாகக் கிடப்பது தெரிய வந்தது. உடலில் பல இடங்களில் கத்திக்குத்து, அரிவாள் வெட்டுக்காயங்கள் இருந்தன. மர்ம நபர்கள் அவரை கொலை செய்துவிட்டு, சடலத்தை வீசிச்சென்றிருப்பது தெரிய வந்தது.

 

இச்சம்பவம் குறித்து நாமக்கல் காவல்நிலைய ஆய்வாளர் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரித்தார். ஜெயக்குமாரின் செல்போன் அழைப்புகளை வைத்து விசாரணை நடந்தது. இந்நிலையில், கொலை வழக்கு தொடர்பாக கூலிப்பட்டியைச் சேர்ந்த சரவணன் என்கிற டான் சரவணன் (30), சஞ்சீவி (33), நிவாஷ் (24), சேலத்தைச் சேர்ந்த பாண்டியராஜன் (26) ஆகிய நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட பட்டாக்கத்தியையும் பறிமுதல் செய்தனர்.

namakkal district glass shop owner incident police investigation

இந்தக் கொலையில் சரவணன் என்கிற டான் சரவணன்தான் மூளையாக செயல்பட்டிருப்பது தெரிய வந்தது. அவர் காவல்துறையில் அளித்துள்ள வாக்குமூலம்: ஜெயக்குமாரிடம் கடந்த ஆண்டு, எனது நண்பர் சஞ்சீவி, தன்னுடைய மோட்டார் சைக்கிளை அடமானம் வைத்து 15 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியிருந்தார். ஓராண்டாகியும் மோட்டார் சைக்கிளை அவர் திருப்பிக் கொடுக்கவில்லை. அசல் தொகை கொடுத்த பிறகும், சஞ்சீவிடம் அதிக பணம் கேட்டு வந்தார் ஜெயக்குமார். மோட்டார் சைக்கிளின் ஆர்சி புத்தகத்தைக் கேட்டும் தொல்லை கொடுத்து வந்தார். 

 

மேலும், எனக்கும் ஜெயக்குமாருக்கும் வேறொரு விவகாரத்தில் முன்விரோதம் இருந்து வந்தது. அதனால் அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்தேன். ஜூன் 30- ஆம் தேதியன்று இரவு, பெருமாபட்டியில் ஜெயக்குமார் தனியாக அமர்ந்து மது குடித்துக்கொண்டிருப்பது தெரிய வந்தது. இதைப்பார்த்துவிட்ட நான், எனது நண்பர்கள் நிவாஷ், சஞ்சீவி, பாண்டியராஜன் ஆகியோரை வரவழைத்து திட்டம் போட்டோம். 

 

பின்னர் நான் மட்டும் தனியாக ஜெயக்குமாரை அழைத்துச்சென்று மது குடித்தோம். குடிபோதையில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது ஏற்கனவே திட்டமிட்டபடி நண்பர்கள் மூன்று பேரும் பட்டாக்கத்தி, உருட்டுக்கட்டைகளுடன் அங்கு வந்தார். நான் ஜெயக்குமாரை கத்தியால் வெட்டிக் கொன்றேன். அவரை தப்பிச்செல்லாமல் நண்பர்கள் பிடித்துக்கொண்டனர். இவ்வாறு டான் சரவணன் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

 

இதையடுத்து, கைதான நான்கு பேரையும் காவல்துறையினர் நாமக்கல் முதலாவது மாஜிஸ்ட்ரேட் தமயந்தி முன்னிலையில் ஆஜர்படுத்தினர். அவருடைய உத்தரவின்பேரில், நான்கு பேரையும் ராசிபுரம் கிளைச்சிறையில் அடைத்தனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

தனியார் கல்லூரி பேருந்து மோதி 6 வயது சிறுவன் உயிரிழப்பு

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
6-year-old boy lost their live in private college bus crash

நாமக்கல்லில் தனியார் கல்லூரி பேருந்து மோதி ஆறு வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஈரோடு சாலையில் உள்ள  தோட்ட வாடி கிராமத்தில் உள்ள பேருந்து நிலைய பகுதியில் கூட்டப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த சதீஷ் என்பவர் இருசக்கர வாகனத்தில் தன்னுடைய 6 வயது மகனுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்திற்குப் பின்புறம் வந்த தனியார் கல்லூரி பேருந்து எதிர்பாராத விதமாக மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே 6 வயது சிறுவன் தலை நசுங்கி உயிரிழந்தார். தந்தை சதீஷ்குமாரின் கை முறிந்து துண்டானது.

இந்தச் சம்பவம் அங்குப் பரபரப்பை ஏற்படுத்த, உடனடியாக அங்கு வந்த போலீசார் சிறுவனின் உடலைக் கைப்பற்றி  பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அந்தப் பகுதிகளில் காலை நேரத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதாகவும், அந்த நேரத்தில் தனியார் பேருந்துகள் மிகுந்த வேகத்துடன் செல்வதால் சாலைத் தடுப்பு, வேகத்தடை ஆகியவற்றை அமைத்துக் கொடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திருச்செங்கோடு காவல் நிலைய போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தனியார் கல்லூரி பேருந்து மோதி 6 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.