Skip to main content

யானைப் பாகன் உயிரிழப்பில் மர்மம்; கண்ணீருடன் முதல்வரின் தனிப்பிரிவில் மனு

Published on 21/02/2024 | Edited on 21/02/2024
Mystery in elephant Bagan ; Petitioner's wife in a separate division of the Chief

பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் யானைகள் முகாமில் பணிபுரிந்த தன்னுடைய கணவர் உயிரிழப்பில் மர்மம் இருப்பதாகத் தமிழக முதல்வரின் தனிப்பிரிவில் மனு அளித்துள்ளார்.

அந்த மனுவில், 'பொள்ளாச்சி தாலுகா டாப்ஸ்லிப் கோழிகமுத்தி செட்டில்மெண்ட் யானைகள் முகாமில் 15 வருடங்களாக யானை பாகனாகப் பணியாற்றி வந்த (R. மஞ்சு) எனது கணவர் S. ராஜ்குமாரை கடந்த டிசம்பர் மாதம் 2ம் தேதி அன்று, அவருடன் பணியாற்றி வந்த மற்றொரு யானை பாகன் சந்திரன் என்பவர் 'வனத்துறை அதிகாரி வர சொன்னார்' என  காலை 10 மணி அளவில், வீட்டிலிருந்து அழைத்துச் சென்றார்.

சந்திரன் என்பவருடன் சென்ற எனது கணவர் ராஜ்குமார், மூன்று நாட்களாக வீடு திரும்பவில்லை. டிசம்பர் மாதம் 5ம் தேதி மாயத்துரை என்ற வனத்துறை அதிகாரி, எனது மாமியார் தங்கம் அவர்களுக்கு தொலைபேசி மூலம், உங்களது மகன் ராஜ்குமார் சேத்துமடை செக்போஸ்டில் இருக்கிறார். வாருங்கள் என்று தொலைபேசி மூலம் தகவல் கொடுத்ததின் பேரில் நாங்கள் அங்கு விரைந்து சென்றோம். நாங்கள் அங்கு சென்று பார்த்தபோது, சேத்துமடை செக் போஸ்ட்டிற்கு அரை கிலோ மீட்டர் தூரத்தில், ஆர்.டி.ஓ. மற்றும் வனத்துறை அதிகாரிகள், ஆம்புலன்ஸ், திரளான பொதுமக்கள் அங்கு திரண்டு இருந்தனர். இவர்களை எல்லாம் பார்த்தபொழுது எங்களுக்கு மிகவும் பயம் வந்துவிட்டது. அதன் பிறகு என்னுடைய கணவர் ராஜ்குமார் மர்மமான முறையில், அழுகிய நிலையில் அங்கு பிணமாக கிடந்தார்.

பிறகு உடலை அங்கிருந்து போஸ்ட்மார்ட்டம் செய்வதற்கு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். எங்களுக்கு தெரிந்த சிலரிடம் விசாரித்தபோது, டாப் ஸ்லிப்பில் இருந்து, வேனில் சந்திரன், விஜயன், அருண், வெங்கடேசன் ஆகிய நால்வரும் தான் உன் கணவர் ராஜ்குமாரை அழைத்துச் சென்றனர் என்று கூறினர். ஆனால் காவல்துறை அவர்களை விசாரணை செய்ததாக தெரியவில்லை.

எனவே நாங்கள் ஆனைமலை காவல் நிலையத்தில் என் கணவர் ராஜ்குமார் மரணத்தில் சந்தேகம் இருக்கிறது என்று புகார் தெரிவித்தோம். புகாரின் அடிப்படையில் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே சென்னையில் உள்ள முதலமைச்சர் தனிப்பிரிவில், எங்களுக்கு நியாயமான முறையில், விசாரணை செய்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது தகுந்த சட்ட ரீதியான நடவடிக்கை எடுத்து நீதியை நிலை நிறுத்த வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்' எனத் தெரிவித்துள்ளார்.

சார்ந்த செய்திகள்