Skip to main content

திருமணமான 45 நாளில் இளம்பெண் மர்ம மரணம்! கணவர் கைது!

Published on 21/10/2020 | Edited on 21/10/2020

 

Mysterious death of a girl in 45 days of marriage! Husband arrested!

 

கடலூர் மாவட்டம் வேப்பூர் வட்டம் வரம்பனூர் கிராமத்தைச் சேர்ந்த கருப்பசாமி என்பவரின் மகன் பொறியியல் பட்டதாரியான சபரிநாதன்(30). இவருக்கும், விருத்தாசலம் நகரத்தைச் சேர்ந்த ஜெயந்தி என்பவரின் இரண்டாவது மகள் நிலா (22) என்பவருக்கும் கடந்த செப்டம்பர் 04ஆம் தேதி விருத்தாசலம் பகுதியில் திருமணம் நடைபெற்றது.  

 

திருமணமான பின் நிலா வரம்பனூரில் உள்ள தனது கணவர் வீட்டில் மாமனார், மாமியாருடன் வசித்து வந்துள்ளார்.  ஆனால் திருமணமானதிலிருந்து நிலாவிடம் அவரது கணவர் சபரிநாதன் சரிவர பேசவில்லை என்றும் இதனால் நிலா மனவருத்தத்துடன் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

 

இந்நிலையில் நேற்று முன்தினம் நிலாவின் மாமனார், மாமியார் வெளியூர் சென்றுவிட்டனர். அவரது கணவரும் விவசாய வேலைக்காக வெளியே சென்றிருந்த நிலையில் நிலா மட்டும் வீட்டில் தனிமையில் இருந்துள்ளார். காலை 11 மணி அளவில் கணவர் சபரிநாதன் வீட்டுக்குத் திரும்பி வந்து பார்த்தபோது நிலா வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டிருந்தார்.

 

இதுகுறித்து தகவல் அறிந்த நிலாவின் தாயார் ஜெயந்தி, சம்பவ இடத்திற்கு வந்து இறந்து கிடந்த பெண்ணின் உடலைப் பார்த்துக் கதறி அழுதார். அதையடுத்து வேப்பூர் போலீசார் வந்து சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

இதுகுறித்து நிலாவின் தாயார் ஜெயந்தி, விருத்தாசலம் கோட்டாட்சியரிடம் கொடுத்த புகாரில், “எனது மகளின் திருமணத்தின் போது எல்லா சீர் வரிசைகளையும் செய்து கொடுத்தோம். ஆனால் திருமணமான ஒரு வாரத்தில் மாப்பிள்ளை வீட்டார் எனது மகளிடம் 40 பவுன் நகை கேட்டுத் தொந்தரவு செய்துள்ளனர். மேலும், எனது மகளிடம் அவரது கணவர் சரிவர பேசாததால் மன வருத்தம் அடைந்துள்ளார். திருமணமான 45 நாட்களே ஆன நிலையில் எனது மகள் தற்கொலை செய்து கொண்டதில், எங்களுக்குச் சந்தேகம் உள்ளது. எனவே எனது மகளின் தற்கொலையில் சந்தேகம் உள்ளதால் அவரது கணவர் சபரிநாதன் மற்றும் அவரது உறவினர்களை விசாரிக்க வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.

 

Ad

 

இதையடுத்து திட்டக்குடி துணை காவல் கண்காணிப்பாளர் வெங்கடேசன் உத்தரவின்பேரில், வேப்பூர் இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையிலான போலீசார் தற்கொலைக்குத் தூண்டியதாக, சபரிநாதன் மீது வழக்குப் பதிவு செய்து, அவரை கைது செய்தனர். திருமணமாகி ஒன்றரை மாதத்தில் இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்கு இயந்திரத்தில் கோளாறு; இன்னும் தொடங்கப்படாத வாக்குப்பதிவு!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Voting machines malfunction in 10 polling stations in Cuddalore
கோப்புப்படம்

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடலூரில்  உள்ள 10  வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  அதனால் கடந்த ஒரு மணி நேரத்திக்கும் மேலாக அப்பகுதியில் வாக்குப் பதிவு  தொடங்கப்படாமல் இருக்கிறது. தேர்தல் அதிகாரிகள் மாற்று வாக்குப் பதிவு எந்திரம் மூலம் வாக்குப் பதிவு தொடங்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தாமதமாகும் வாக்குச்சாவடியில் மக்கள் தங்களது ஜனநாயக கடமையாற்ற நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். காலை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு தொடங்கப்படாமல் இருப்பதால் மாலை ஒரு மணி நேரம் கூடுதலாக ஒதுக்கப்படுமா என்பது குறித்து தேர்தல் தலைமை அதிகாரி தெரிவிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.