Skip to main content

முல்லைப்பெரியாறு அணையிலிருந்து முதல் போக பாசனத்திற்கு  தண்ணீர் திறப்பு!

Published on 14/08/2020 | Edited on 14/08/2020
Mullaperiyar Dam

 

 

முல்லைப்  பெரியாறு அணையிலிருந்து விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று முல்லைப்பெரியாறு அணையிலிருந்து முதல்போக பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது.

 

குமுளியில் உள்ள தேக்கடி சுரங்க வாய்க்கால் ஷட்டர் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விவசாயிகள் முன்னிலையில் தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் ஷட்டரை இயக்கி தண்ணீரை திறந்து வைத்தார்.

 

கம்பம் பள்ளத்தாக்கு உத்தமபாளையம் வட்டத்தில் 11,807 ஏக்கர், போடிவட்டத்தில் 488 ஏக்கர், தேனிவட்டத்தில் 2,412 ஏக்கர் என தேனிமாவட்டத்தில் 14,707 ஏக்கர் நிலங்களில் இருபோக நெல் சாகுபடி விவசாயம் நடைபெற்று வருகிறது முல்லை பெரியாற்று நீரை நம்பியிருக்கும் இவ்விளை நிலங்களுக்கு, ஆண்டு தோறும் முதல் போக சாகுபடி நாற்று நடவுக்காக ஜூன் முதல் வாரம் பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறப்பது வழக்கம்.

 

கடந்த சில ஆண்டுகளாக பருவமழை பொய்த்ததால் முதல் போகத்திற்கு ஜூன் மாதம் திறக்க வேண்டிய தண்ணீர் தாமதமாகவே திறக்கப்பட்டது. இந்த ஆண்டும் ஜூன் மாதம் முதல் பெரியாறு அணையிலிருந்து முதல்போக விவசாயத்திற்கு தண்ணீர் திறக்க விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். அணை நீர்மட்டம் குறைவாக இருந்தததால் தண்ணீர் திறக்கப்படவில்லை. இந்நிலையில் பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதியில் பருவமழை தாமதமாக பெய்ததால் தற்போது அணையின் நீர் மட்டம் 137 அடிவரை உயர்ந்துள்ளது. இந்நிலையில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று இன்று முதல் முல்லைப்பெரியாறு அணையிலிருந்து முதல் போக பாசனத்திற்காக தண்ணீர் திறக்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். 

 

அதை தொடர்ந்து முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 137 அடியாக இருந்த நிலையில் முல்லைப்பெரியாறு அணையிலிருந்து விவசாயத்திற்காக தண்ணீர் திறக்கும் நிகழ்ச்சி, தேக்கடியில் தமிழக பொதுப்பணித்துறை அலுவலகம் அருகே உள்ள சுரங்க வாய்க்கால் ஷட்டர் பகுதியில் நடை பெற்றது.

 

முன்னதாக விவசாய சங்கத்தின் சார்பாக விவசாயம் செழிக்க பிரார்த்தனை நடத்தப்பட்டது. தொடர்ந்து தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் ஷட்டரை இயக்கி வினாடிக்கு 300 கனஅடிவீதம் தண்ணீர் திறந்து விட்டார் இதில் கம்பம் சட்டமன்ற உறுப்பினர்  ஜக்கையன், அரசு அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் அனைவரும் தமிழகப்பகுதிக்கு வரும் தண்ணீரில் மலர்தூவி வரவேற்றனர் இதில் பெரியாறு வைகை நீர்வள ஆதார அமைப்பு செயற்பொறியாளர் சுகுமாரன் பெரியாறு அணை செயற்பொறியாளர் சாம் இர்வின், உதவி செயற்பொறியாளர் மொக்கமாயன், உதவி பொறியாளர்கள் கதிரேஷ்குமார், பிரேம் ராஜ்குமார், ராஜேஸ்வரன் மற்றும் விவசாயிகள் சங்கத்தினர், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

136 அடியை தொட்ட முல்லை பெரியாறு; முதல் கட்ட எச்சரிக்கை விடுப்பு

Published on 24/11/2023 | Edited on 24/11/2023

 

 Mullai Periyar who touched 136 feet; First stage warning leave

 

முல்லை பெரியாறு அணை 136 அடியை எட்டியதை அடுத்து முதல் கட்ட அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

 

வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வரும் நிலையில், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழைபொழிந்து வருகிறது. நீர் நிலைகளும் நிரம்பி வருகிறது. இந்நிலையில், முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் தொடர்ந்து மழை பொழிந்து வருகிறது. முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது. தற்போது அணையின் நீர்மட்டம் 136 அடியை எட்டியுள்ளது. இதனை அடுத்து கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் நிர்வாகத்திற்கு தமிழக நீர்வளத்துறை சார்பில் எச்சரிக்கை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

 

தொடர்ந்து அணை 138 அடியை எட்டியதும் இரண்டாம் கட்ட எச்சரிக்கையும், 140 அடியை எட்டியதும் மூன்றாம் கட்ட எச்சரிக்கையும் மற்றும் முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படும். தொடர்ந்து அணை நீர்மட்டம் உயர்ந்து வருவதால் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு முதல் கட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகப் பகுதிக்கு 1000 கன அடிக்கும் மேல் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. கரையோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி தமிழக பொதுப்பணித்துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

 

 

 

Next Story

முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் கார் பார்க்கிங் விவகாரம்; உச்ச நீதிமன்றம் அதிரடி

Published on 18/10/2023 | Edited on 18/10/2023

 

Car parking issue in Mullaip Periyar dam area; The Supreme Court is in action

 

முல்லைப் பெரியாறு அணை பகுதியில் கார் பார்க்கிங் அமைப்பது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

 

முல்லைப் பெரியாறு அணைப்பகுதியில் மிகப்பெரிய நான்கு சக்கர வாகன நிறுத்தம் அமைக்கும் பணியில் கடந்த 2013 ஆண்டு முதல் கேரள அரசு ஈடுபட்டு வருகிறது. இதையடுத்து முல்லைப் பெரியாறு அணையின் நீர்த்தேக்கப் பகுதிகள் தமிழகத்திற்கு குத்தகைக்கு விடப்பட்டிருப்பதால், அதில் கட்டுமானப் பணிகள் நடைபெறும் பகுதியில் கட்டுமான பணிகள் மேற்கொள்ள அனுமதி இல்லை என்று தெரிவித்தும், கேரளா அரசின் முடிவை எதிர்த்தும் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தது.

 

இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, “நில அளவை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்படும் மேற்பார்வைக் குழுவின் தலைமையில் கேரளா மற்றும் தமிழகத்தை உள்ளடக்கிய கூட்டு சர்வே நடத்த வேண்டும். இது குறித்து இரு மாநில அரசுகளும் பதிலளிக்க வேண்டும்” என தெரிவித்தார். இதையடுத்து இந்த வழக்கின் விசாரணையை நவம்பர் 28 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.