Skip to main content

முல்லைப் பெரியாறு: “பாதுகாப்பு ஆய்வுக்கு முன் பேபி அணையை வலுப்படுத்த தடையாக உள்ள மரங்களை அகற்ற வேண்டும்” - ராமதாஸ் 

Published on 29/01/2022 | Edited on 29/01/2022

 

Mullaiperiyaru: "Trees should be allowed to be removed to strengthen Baby Dam before safety inspection" - Ramadoss

 

முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்து அறிவியல்பூர்வ ஆய்வு நடத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது என மத்திய நீர்வள ஆணையம் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், அந்த ஆய்வு முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்துவதற்கான அடித்தளமாக அமைய வேண்டும்” என பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

 

அதில் அவர், “முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு மனநிறைவு அளிக்கும் வகையில் இருப்பதாகவும், அதே நேரத்தில் அணையின் பாதுகாப்பு குறித்து அறிவியல்பூர்வ ஆய்வு நடத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றும் மத்திய நீர்வள ஆணையம் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்த ஆய்வு அவசியமானது என்பதை ஏற்றுக்கொள்ளும் அதே நேரத்தில், அந்த ஆய்வு முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்துவதற்கான அடித்தளமாக அமைய வேண்டும்.

 

முல்லைப் பெரியாறு அணையின் வலிமை குறித்து புதிதாக தொடரப்பட்ட வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் வரும் பிப்ரவரி 2-ஆம் நாள் இறுதி விசாரணைக்கு வருகின்றன. அதற்கு முன் மத்திய நீர்வள ஆணையத்தின் சார்பில் அதன் துணை இயக்குனர் ராகேஷ்குமார் கவுதம் தாக்கல் செய்துள்ள அறிக்கையில், ‘‘முல்லைப் பெரியாறு அணையை வலுப்படுத்தும் பணிகளை கண்காணிப்பதற்காக உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட கண்காணிப்புக் குழு, அடிக்கடி அணையை ஆய்வு செய்து அணை பாதுகாப்பாக இருப்பதாக அறிக்கை அளித்துள்ளது. ஆனாலும், 2010-12 காலத்திற்குப் பிறகு அணை அறிவியல்பூர்வமான ஆய்வுக்கு உட்படுத்தப்படவில்லை. அதனால் முல்லைப் பெரியாறு அணையில் அறிவியல்பூர்வமான ஆய்வு மேற்கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது’’ என்று குறிப்பிட்டிருக்கிறார். முல்லைப்பெரியாறு அணையின் பாதுகாப்பு பற்றி கேரள அரசு அடிக்கடி பரப்பும் வதந்திகளைத் தடுக்க அறிவியல்பூர்வ ஆய்வு நடத்த வேண்டியது அவசியமாகும்.

 

ஆனால், அதற்கு முன்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய சில முக்கியப் பணிகள் உள்ளன. அதுகுறித்தும் ராகேஷ்குமார் கவுதம் தாக்கல் செய்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. பேபி அணையை வலுப்படுத்த அந்த அணைக்கு கீழ் உள்ள 15 மரங்கள் தடையாக இருப்பதால் அவற்றை அகற்ற அனுமதிக்க வேண்டும் என்று தமிழக அரசால் பல ஆண்டுகளுக்கு முன் விடுக்கப்பட்ட கோரிக்கையை கேரள அரசு இன்னும் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதையும் மத்திய நீர்வள ஆணையம் அதன் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது. முல்லைப் பெரியாறு சிக்கல் இன்னும் தீராமல் நீடித்துக் கொண்டே செல்வதற்கும் இது தான் காரணமாகும்.

 

முல்லைப் பெரியாறு அணையின் ஓர் அங்கமான பேபி அணையை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தாமதப்படுத்தப்பட்டு வரும் நிலையில், அதை செய்து முடிப்பதற்கு முன்பாக அணையை அறிவியல்பூர்வமான ஆய்வுக்கு உட்படுத்துவது வீண் வேலையாகவும், முல்லைப் பெரியாறு அணை சிக்கலுக்கு சுமூகத் தீர்வு காணப்படுவதை தாமதப்படுத்தும் செயலாகவும் தான் இருக்கும். அதை தமிழக அரசு தடுக்க வேண்டும்.

 

முல்லைப் பெரியாறு அணையின் அதிகபட்ச நீர்மட்ட அளவு 152 அடியாகவே இருந்து வந்தது. 1979-ஆம் ஆண்டில் அணையின் வலிமை குறித்து கேரள அரசு ஐயங்களை எழுப்பியதால் அணையின் நீர்மட்டத்தை அப்போதைய தமிழக அரசு, முதலில் 142 அடியாகவும், பின்னர் 136 அடியாகவும் குறைத்தது. அதன் பின்னர் அணை வலுப்படுத்தப்பட்ட பிறகு தமிழக அரசு தொடர்ந்த வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றம், அணையின் நீர்மட்டத்தை முதலில் 142 அடியாகவும், பேபி அணை வலுப்படுத்தப்பட்ட பிறகு 152 அடியாகவும் உயர்த்தலாம் என்று 2006-ஆம் ஆண்டிலும், 2014-ஆம் ஆண்டிலும் உச்சநீதிமன்றம் ஆணையிட்டது. அணையை வலுப்படுத்தும் பணிகளை கண்காணிக்க கண்காணிப்பு குழுவையும் நீதிமன்றம் அமைத்தது.

 

கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டு 7 ஆண்டுகளுக்கு மேலாகி விட்ட நிலையில், பேபி அணையையும், மண் அணையையும் வலுப்படுத்தும் பணிகள் இன்னும் நிறைவடையவில்லை. கேரள அரசின் ஒத்துழைப்பு இல்லாதது தான் அதற்குக் காரணம். பேபி அணைக்கு அருகில் உள்ள 15 மரங்களை வெட்டினால் தான் அந்தப் பகுதியில் பேபி அணையை வலுப்படுத்த முடியும். அந்த மரங்களை வெட்ட அனுமதிக்கும்படி கேரள அளவுக்கு கண்காணிப்புக் குழு அறிவுறுத்தியும் அதை கேரள அரசு செய்யவில்லை. காரணம், முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 152 அடியாக உயர்த்தப்படுவதை கேரள அரசு விரும்பவில்லை.

 

இத்தகைய சூழலில் அணையின் பாதுகாப்பு குறித்து அறிவியல்பூர்வ ஆய்வு நடத்தப்பட்டால், அது முடிவடைய இரு ஆண்டுகள் ஆகலாம். அதுவரை பேபி அணையை வலுப்படுத்தும் பணிகளை மேற்கொள்ள முடியாது. அறிவியல்பூர்வ ஆய்வு முடிந்த பிறகு அணையை வலுப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டால் கூட, அதன்பிறகு அணை 152 அடி நீர்மட்டத்தை தாங்குமா? என்பதை உறுதி செய்ய மீண்டும் ஒருமுறை பாதுகாப்பு ஆய்வு மேற்கொள்ளப்பட்ட பிறகு தான் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த முடியும். இதற்கு குறைந்தது 10 ஆண்டுகளாவது ஆகிவிடும். முல்லைப் பெரியாறு சிக்கல் அவ்வளவு காலம் நீடிக்கக்கூடாது.

 

மாறாக, பேபி அணையை வலுப்படுத்த தடையாக இருக்கும் 15 மரங்களை வெட்ட அனுமதிக்கப்பட்டால், ஓராண்டிற்குள் அணையை வலுப்படுத்தும் பணிகளை தமிழக அரசு முடித்து விடும். அதன்பிறகு  அறிவியல் பூர்வ ஆய்வு மேற்கொள்ளப்பட்டால், அணை வலிமையாக உள்ளதா? அதன் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்தலாமா? என்ற இரு வினாக்களுக்கும் விடை கிடைத்து விடும். அதன் மூலம் அடுத்த சில ஆண்டுகளில் அணை நீர்மட்டம் 152 அடியாக உயர்த்தப்பட்டு விடும்; முல்லைப் பெரியாறு சிக்கலும் நிரந்தரமாக தீர்ந்து விடும்.

 

எனவே, பேபி அணைப் பகுதியில் உள்ள 15 மரங்களை வெட்ட முதலில் அனுமதிக்க வேண்டும்; பேபி அணை வலுப்படுத்தப்பட்ட பிறகு தான், முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்த அறிவியல்பூர்வ ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் தமிழகம் வலியுறுத்த வேண்டும். அதன்மூலம் முல்லைப் பெரியாறு நீர்மட்டம் 152 அடியாக முன்கூட்டியே உயர்த்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முல்லைப் பெரியாறு அணை விவகாரம்; தமிழக அரசு அதிரடி முடிவு!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Mullai Periyar Dam Issue TN govt decision

முல்லைப் பெரியாறு அணைப்பகுதியில் மிகப்பெரிய நான்கு சக்கர வாகன நிறுத்தம் அமைக்கும் பணியில் கடந்த 2013 ஆண்டு முதல் கேரள அரசு ஈடுபட்டு வருகிறது. இதையடுத்து முல்லைப் பெரியாறு அணையின் நீர்த்தேக்கப் பகுதிகள் தமிழகத்திற்கு குத்தகைக்கு விடப்பட்டிருப்பதால், அதில் கட்டுமானப் பணிகள் நடைபெறும் பகுதியில் கட்டுமான பணிகள் மேற்கொள்ள அனுமதி இல்லை என்று தெரிவித்தும், கேரளா அரசின் முடிவை எதிர்த்தும் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தது.

இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது நீதிபதி, “நில அளவை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்படும் மேற்பார்வைக் குழுவின் தலைமையில் கேரளா மற்றும் தமிழகத்தை உள்ளடக்கிய கூட்டு சர்வே நடத்த வேண்டும்” என தெரிவித்திருந்தார். இதனையடுத்து இது தொடர்பான அய்வு குழுவினரால் ஆய்வு மேற்கொண்டு உச்ச நீதிமன்றத்தில் ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அந்த ஆய்வறிக்கையில், ‘கேரள அரசு கட்டிவரும் வாகன நிறுத்துமிடம் குத்தகை பகுதிக்குள் இல்லை. நீர்பிடிப்பு மற்றும் நீர் பரவல் பகுதியின் எல்லைகள் பெரியாறு, குமுளி கிராமத்தில் உள்ளன’ என வரைபடத்தின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Mullai Periyar Dam Issue TN govt decision

இந்நிலையில் முல்லைப் பெரியாறு அணை பகுதியில் வாகன நிறுத்துமிடம் கட்டுவது தொடர்பாக இந்திய நில அளவைத் துறை அளித்த ஆய்வறிக்கையை ஏற்க முடியாது என உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், “கடந்த 1924 ஆம் ஆண்டு நீர்வளத்துறையால் தயாரிக்கப்பட்ட வரைபடத்தை தற்போதைய ஆய்வு குழு கணக்கில் கொள்ளவில்லை. கேரளா கட்டிவரும் மிகப்பெரிய வாகன நிறுத்துமிடத்தின் மூலப்பகுதி, தரைத்தளம் எங்கு உள்ளது என்பதை ஆய்வு குழு ஆய்வு செய்யவில்லை. வாகன நிறுத்துமிடத்தின் எல்லை நிர்ணயிக்கப்பட்ட போது தமிழ்நாடு அரசின் கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை.

மெகா வாகனம் நிறுத்துமிடம் என்பது உணவகம், வாகன பேட்டரி சார்ஜ் செய்யும் இடம், கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை உள்ளடக்கியது ஆகும். எனவே வாகன நிறுத்துமிடத்தை அளவிடும் போது அதன் சார்பு வசதிகளை கணக்கில் எடுக்க நில அளவைத் துறை தவறிவிட்டது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

குடியைக் கெடுக்கும் குடிக்கு முடிவு கட்டப்படுவது எப்போது? - ராமதாஸ்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Ramdoss has questioned when liquor will be abolished in Tamil Nadu

குடிப்பழக்கம் உள்ள பெற்றோரின் பிள்ளைகளுக்கு சுயமரியாதை குறைவு என ஆய்வில் வெளியாகியுள்ளது; குடியைக் கெடுக்கும் குடிக்கு முடிவு கட்டப்படுவது எப்போது? என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான  பெற்றோர்களின் பிள்ளைகள் சுயமரியாதைக் குறைவு, தாழ்வு மனப்பான்மை உள்ளிட்ட மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்படுகின்றனர் என்று சென்னை மருத்துவக் கல்லூரியின் சமூக மருத்துவ நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. குடிக்கும் பெற்றோரின் பிள்ளைகள் இளம் வயதிலேயே மதுப்பழக்கம் மற்றும் புகையிலைப் பழக்கத்திற்கு அடிமையாகுதல், தீய செயல்களில் அடிக்கடி ஈடுபடுதல் உள்ளிட்ட பாதிப்புகளுக்கும் ஆளாவதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.  இந்த ஆய்வு முடிவுகள் சிறிதும் அதிர்ச்சியோ, ஆச்சரியமோ அளிக்கவில்லை. மாறாக, மதுப்பழக்கத்தின் தீமைகள் குறித்து பல பத்தாண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி கூறி வரும் குற்றச்சாட்டுகளை உறுதி செய்திருக்கிறது.

அனைத்து சமூகக் கேடுகளுக்கும் ஆணிவேர் மதுப்பழக்கம் தான்.  தினமும் குடித்து விட்டு வந்து வீட்டில் உள்ளவர்களை கொடுமைப் படுத்தும் தந்தை உள்ள வீட்டில், அவர்களின் பிள்ளைகளால் நிம்மதியாக படிக்க முடியாது; சமூகத்தில் தலை நிமிர்ந்து நடக்க முடியாது என்பது நடைமுறையில் நாம் கண்டு வரும் உண்மை ஆகும். தந்தை குடிப்பதைப் பார்க்கும் பிள்ளைகளும் மது எளிதாக கிடைக்கும் போது அந்தப் பழக்கத்திற்கு அடிமையாவது வழக்கம் தான். 

இந்த உண்மைகளைத் தான்  சென்னை மருத்துவக் கல்லூரியின் ஆய்வு உறுதி செய்திருக்கிறது. அதனால் தான் குடி குடியைக் கெடுக்கும், குடிப்பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும் என்ற எச்சரிக்கை வாசகங்கள் மதுப்புட்டிகள் மீது எழுதப்பட்டன. மதுவே முற்றிலுமாக ஒழிக்கப்பட  வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், தமிழ்நாட்டை மாறி மாறி ஆட்சி செய்து வரும் திமுகவும், அதிமுகவும் மதுவின் தீமைகளை கருத்தில் கொள்ளாமல் சட்டப்படியாக அரசுக்கு கிடைக்கும் வருமானத்தையும், சட்டவிரோதமாக தங்களுக்கு கிடைக்கும் லாபத்தையும் மட்டுமே கருத்தில் கொண்டு  தமிழகத்தின் அனைத்து வீதிகளிலும் மதுவை வெள்ளம் போல ஓட விடுகின்றன.

அதுமட்டுமின்றி, மதுப்புட்டிகளில் மதுவின் தீமைகளை குறிக்கும் வகையிலான, 'குடி, குடியை கெடுக்கும்; குடிப்பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும்; மது நாட்டுக்கு, வீட்டுக்கு, உயிருக்குக் கேடு' என்ற, விழிப்புணர்வு வாசகங்களை நீக்கி விட்டு, 'மது அருந்துதல் உடல் நலத்திற்கு கேடு; பாதுகாப்பாக இருப்பீர். மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டாதீர்' என்ற மென்மையான வாசகங்களை அச்சிட்டது தான் திமுக, அதிமுக அரசின் சாதனைகள் ஆகும்.

எந்த வகையில் பார்த்தாலும் மது மிகப்பெரிய சமூகக் கேடு என்பதில் மாற்றமில்லை.  மது இல்லாத தமிழகத்தில் குடும்பங்கள் மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள்; குழந்தைகள் சுயமரியாதையுடன் நல்லவர்களாக வளர்வார்கள். எனவே, குடியைக் கெடுக்கும் குடிப்பழக்கத்திற்கு முடிவு கட்டும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள மதுக்கடைகளை மூடிவிட்டு முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.