Skip to main content

இந்த 4 பேரில் யாரோ ஒருவர்தான் அவரை கடத்தியிருக்க வேண்டும்: முகிலன் மனைவி...

Published on 20/02/2019 | Edited on 20/02/2019

 

ஈரோடு மாவட்டம், சென்னிமலையைச் சேர்ந்தவர் முகிலன். ஆரம்ப காலக்கட்டத்தில் புரட்சிகர இயக்கங்களில் தன்னை இணைத்துக்கொண்டு பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டவர் முகிலன். பிறகு சில வருடங்களுக்கு முன்பு கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு போராட்டம் துவங்கப்பட்ட காலத்தில் இருந்து கூடங்குளம் சென்ற முகிலன், அணுஉலைக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய நிர்வாகியாக பங்கு பெற்று வந்தார்.
 

இவர் மீது ஏராளமான வழக்குகளை காவல்துறை போட்டுள்ளதோடு, ஒரு வருட காலம் சிறையில் இருந்துள்ளார். இந்த நிலையில்தான் முகிலன் கடந்த வெள்ளிக்கிழமை இரவில் இருந்து காணாமல் போயுள்ளார்.
 

கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு போராட்டத்திலும், பிறகு ஜல்லிக்கட்டு போராட்டம், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம், மணல் கடத்தலுக்கு எதிரான போராட்டம் என பல்வேறு போராட்ட இயக்கங்களில் முன்னணியில் இருந்து செயல்பட்டவர் முகிலன். 

 

mukilan


 

சென்ற வாரம் தனது வீட்டுக்கு வந்த முகிலன், அங்கிருந்து கிளம்பும்போது சென்னை சென்றுவிட்டு அங்கு ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்களை காவல்துறை திட்டமிட்டே கொலை செய்துள்ளதை ஆதாரத்துடன் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அம்பலப்படத்துகிறேன் என்று கூறியவர், பிறகு சென்னையில் இருந்து மதுரை செல்வதாகவும் சொல்லிவிட்டு சென்றுள்ளார்.
 

அந்த அடிப்படையில்தான் கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான அவரது டாக்குமெண்டரியை சென்னை பத்திரிகையாளர்கள் சந்திப்பில் வெளியிட்டார். 13 பேர் கொலை திட்டமிட்டு செய்யப்பட்டது எனவும் ஆதாரத்துடன் குறிப்பிட்டார். பேட்டி முடித்துவிட்டு பத்திரிகையாளர்களிடம் இப்போது நான், அரசும், காவல்துறையும், ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகமும் போராடிய மக்கள் மீது திட்டமிட்டு செய்த படுகொலையை அம்பலப்படுத்திவிட்டேன். இனி எனக்கு எதுவும் நடக்கலாம் என கூறிவிட்டுத்தான் சென்றுள்ளார்.
 

அதன் பிறகு எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து மதுரை செல்லும் ரயிலில் சென்றுள்ளார். ஆனால் அடுத்த நாள் முகிலன் மதுரை செல்லவில்லை. திடீரென முகிலன் கடத்தப்பட்டாரா? அப்படியென்றால் அவரை யார் கடத்தினார்கள் என பெரும் பரபரப்பு தமிழகம் முழுக்க சூழலியல் ஆதரவாளர்களிடம் எழுந்தது. 
 

இந்த நிலையில்தான் முகிலனின் மனைவி திருமதி பூங்கொடியை அவரது சொந்த ஊரில் சந்தித்தோம். அப்போது அவர், என் கணவர் இந்த வாரம் வீட்டுக்கு வந்திருந்தார். சிறிது உடல்நிலை சரியில்லாமலும் இருந்தார். நான் அவரிடம் இப்படியே தொடர்ந்து அங்கும் இங்கும் ஏன் ஓடிக்கொண்டே இருக்கிறீர்கள்? கொஞ்சம் ஓய்வெடுங்கள் என கூறினேன். அதற்கு அவர், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக என்னிடம் உள்ள ஆதாரத்தை சென்னை சென்று பத்திரிகையாளர்கள் சந்திப்பில் வெளியிட்டுவிட்டு அடுத்து ஒரே ஒரு வேலை பாக்கியிருக்கிறது. அது சிறையில் உள்ள  ஏழு பேர் விடுதலைதான். அதற்கு பேரறிவாளன் தாயார் உள்பட சிறையில் உள்ளவர்களின் குடும்பத்தினரை ஒன்றிணைத்து அவர்களை மக்கள் முன்பு பேச வைப்பதுதான். அதற்கான வேலைக்குத்தான் மதுரைக்கு செல்கிறேன். ஏழு பேர் விடுதலையான பிறகு அதிக நாள் வீட்டில் இருப்பேன் என்று கூறினார். அதன் பிறகு சென்ற அவர் மதுரைக்கும் போகவில்லை.
 

மதுரையில் இருந்து தோழர்கள் தொலைபேசியில் கூறியபோதுதான் தெரியும். அதன்பிறகு சென்னையில் தோழர்கள் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளனர். அதற்கு நீதிமன்றம் 22ஆம் தேதிக்குள் எனது கணவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தச் சொல்லி காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. எனது கணவருக்கு தனிப்பட்ட எந்த பகையும் இல்லை. அவருக்கு எதிரி என்றால் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம், மணல் மாபியாக்கள், இந்த அரசாங்கம், அடுத்து போலீஸ்தான். இந்த நான்கு பேரில் யாரோ ஒருவர்தான் அவரை கடத்தியிருக்க வேண்டும். அவரது உயிருக்கு இந்த நான்கு பேர்தான் உத்திரவாதம். மற்றப்படி தனிப்பட்ட எந்த பிரச்சனையும் அவருக்கு இருந்ததாக எனக்கு முழுமையாக தெரியவில்லை. அதேபோல் அவர் நிச்சயம் தலைமறைவாக எந்தக் காரணத்திற்காகவும் இருக்க மாட்டார். 
 

நீதிமன்றத்தில் போலீசார் அவரை ஆஜர்படுத்தவில்லை என்றால், எதாவது விபரீதம் நிகழ்ந்துவிடுமோ என்ற அச்சம் எங்களுக்குள் எழுந்துள்ளது என கூறினார்  பூங்கொடி.
 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.