
மத்தியப்பிரதேசத்தை சேர்ந்த முதுகலை பட்டதாரி பெண் ஒருவர் பாதுகாப்பு கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார்.
ஷாலினி ஷர்மா மத்தியப்பிரதேசத்தை சேர்ந்த முதுகலை பட்டதாரி. இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், சுதா ஷர்மா என்பவர் தனது வளர்ப்புத் தாய். இவர் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மாணவர் பிரிவான ஏபிவிபி அமைப்பை சேர்ந்தவர். தனது வளர்ப்புத் தாயான சுதா ஷர்மா மாந்திரீகங்கள், மூட நம்பிக்கைகள் மீது நம்பிக்கை கொண்டவர். அவர் தன்னை நரபலி கொடுக்க முடிவு செய்துள்ளதாகவும், ஏற்கனவே தனது 10 வயது சகோதரர் மற்றும் இன்னும் 2 பேரை நரபலி கொடுத்துள்ளார் எனவும் அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.
மேலும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பினைச் சேர்ந்தவர் என்பதால் அவர் மீது காவல்துறையில் புகாரளிக்க எவரும் தயாராக இல்லை என அந்த மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார். வளர்ப்புத் தாயிடம் இருந்து தப்பிப்பதற்காக தனது நண்பரின் உதவியுடன் சென்னை வந்துள்ளதாகவும் தந்தை பெரியார் திராவிடர் கழகச் செயலாளர் வீட்டில் தங்கியுள்ளதாகவும், குடும்பத்தினரும் ஏபிவிபி அமைப்பினரும் வலுக்கட்டாயமாக தன்னை போபால் அழைத்துச் சென்றுவிடுவார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார். அப்படி போபால் கொண்டு சென்றுவிட்டால் தன்னை நரபலி கொடுத்துவிடுவார்களோ என்று அச்சமாக உள்ளது என்றும் ஷாலினி ஷர்மா தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு பெண்களுக்கு பாதுகாப்பான இடம் என்பதால் தனக்கும் பாதுகாப்பு அளிக்கும்படி ஷாலினி ஷர்மா கேட்டுள்ளார். இந்த வழக்கு நாளை நீதிபதி சந்திரசேகர் முன்னிலையில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.