Skip to main content

 சிறுமிக்கு பிறந்த குழந்தை; தாயின் கொடூர செயல்

Published on 28/08/2023 | Edited on 28/08/2023

 

Mother's unethical act A child born to a girl

 

மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள சந்தையூர் பகுதியைச் சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் அங்குள்ள பள்ளியில் 10ஆம் வகுப்பு வரை படித்து முடித்துள்ளார். இந்த நிலையில், கோவையைச் சேர்ந்த செல்வகுமார் என்பவர் சந்தையூர் பகுதிக்கு கூலி தொழிலாளியாக அங்கு வந்து பணிபுரிந்துள்ளார். இவருக்கும், அந்த பகுதியில் உள்ள 17 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட பழக்கத்தினால் சிறுமி கர்ப்பம் அடைந்தார். 

 

இந்த நிலையில், கடந்த 7ஆம் தேதி அன்று அந்த சிறுமி பேரையூர் அரசு மருத்துவமனையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அந்த சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்த தகவலை அரசு மருத்துவர்கள், காவல்துறையினருக்கு தெரிவித்தனர். அதன் அடிப்படையில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து செல்வகுமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

 

மேலும், சிறுமியும் ஆண் குழந்தையும் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால், அந்த சிறுமி, குழந்தையுடன் மருத்துவமனைக்கு செல்லாமல் வீட்டுக்கு வந்து விட்டார். இந்த தகவல் சந்தையூர் ஆரம்ப சுகாதாரத்துறை நிலையத்தை சேர்ந்த செவிலியர் காந்திமதிக்கு தெரியவந்தது. இதையடுத்து, செவிலியர் காந்திமதி சிறுமியின் வீட்டுக்கு சென்று குழந்தையை பற்றி விசாரித்துள்ளார். மேலும், அந்த குழந்தையைப் பார்க்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். அதற்கு அந்த சிறுமி, ‘குழந்தை என்னிடம் இல்லை என் தாயிடம் கொடுத்து விட்டேன்’ என்று கூறியுள்ளார். மேலும், குழந்தை குறித்த தகவலை முன்னுக்கு பின் முரணாகத் தெரிவித்துள்ளார்.

 

இதில் சந்தேகமடைந்த செவிலியர் காந்திமதி, பேரையூர் காவல் நிலையத்துக்கு சென்று புகார் அளித்துள்ளார். அவர் அளித்த அந்த புகாரின் பேரில், குழந்தையை காணவில்லை என்று காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து  விசாரணை நடத்தி வந்தனர். அவர்கள் நடத்திய அந்த விசாரணையில், சிறுமியின் தாய்க்கும், மெய்யனூத்தம்பட்டியைச் சேர்ந்த சுந்தரலிங்கம் (48) என்பவருக்கும் தொடர்பு இருந்துள்ளது. இந்த இருவரும் உசிலம்பட்டியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் வாயிலாக குழந்தையை விற்க முடிவு செய்துள்ளனர். அதன் பின், இவர் மூலம் ஈரோட்டில் திருமண தகவல் மையம் நடத்தி வந்த கார்த்திக் என்பவரை தொடர்பு கொண்டு இது குறித்து தெரிவித்து குழந்தையை கொடுத்துள்ளனர்.

 

கார்த்திக், அந்த குழந்தையை பெங்களூரில் உள்ள கார்த்திகேயன் (50), சீனிவாசன் (38) ஆகியோர் மூலம் பெங்களூரில் கண் பார்வை இழந்த தேஜஸ்வரி (36) என்பவருக்கு ரூ.8 லட்சத்து 20 ஆயிரத்துக்கு விற்றுள்ளார். தேஜஸ்வரிக்கு ஏற்கனவே பெண் குழந்தை ஒன்று உள்ளது. இவருக்கு ஆண் குழந்தை இல்லாத காரணத்தினால் பச்சிளம் குழந்தையை விலை கொடுத்து வாங்கியுள்ளார் என்று காவல்துறையினருக்கு தெரியவந்தது. இது குறித்து, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சிறுமியின் தாயார், சுந்தரலிங்கம், தேஜஸ்வரி, பெங்களூர் கார்த்திக், சீனிவாசன் ஆகிய ஐந்து பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நகைகள் கொள்ளைச் சம்பவம்; நூதன முறையில் வலம் வந்த கொள்ளையன் கைது

Published on 11/12/2023 | Edited on 11/12/2023
coimbatore Jewelery issue police action

கோவை மாவட்டம் காந்திபுரம் நூறடி ரோட்டில் உள்ள பிரபல நகைக் கடையில் கடந்த நவம்பர் மாதம் 28 ஆம் தேதி ஏசி வென்டிலேட்டர் வழியே துளையிட்டு உள்ளே சென்ற மர்ம நபர் ஒருவர், சுமார் 200 சவரன் நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அதே சமயம் இந்தக் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக கோவை மாநகர துணைக் காவல் ஆணையர் சண்முகம் தலைமையில் ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. முதல் கட்டமாக அந்தக் கடையில் பணியாற்றும் ஊழியர்களிடம் விசாரணை நடைபெற்றது. மேலும் கடைக்குள் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, நள்ளிரவு 1.30 மணிக்கு அடையாளம் தெரியாத நபர் கடைக்குள் நுழைந்து நகைகளைத் திருடியது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டது தருமபுரி மாவட்டம் அரூரைச் சேர்ந்த விஜயகுமார் என்பது விசாரணையில் தெரியவந்தது. மேலும் இவர் மீது தருமபுரி மாவட்டத்தில் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக வழக்குகள் நிலுவையில் இருப்பதும், போலீசார் இவரைத் தேடி வருவதும் தனிப்படை போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து இவரைப் பிடிக்க தனிப்படை போலீசார் ஆனைமலைக்கு விரைந்தனர். அப்போது அவர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். மேலும் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் அவரது வீட்டிலும், அவரது நண்பர் சுரேஷ் என்பவர் வீட்டில் இருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து நகைக் கடையில் கொள்ளையடிக்கப்பட்ட 2.7 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் தருமபுரி மாவட்டம் அரூரைச் சேர்ந்த கொள்ளையன் விஜயகுமார் வீட்டில் இருந்தும், ஆனைமலையில் உள்ள அவரது நண்பர் சுரேஷ் வீட்டில் இருந்து போலீசார் கைப்பற்றி இருந்தனர்.

இந்நிலையில் இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளியான விஜயகுமாரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னையில் ஐயப்ப பக்தர் போல் வேடம் அணிந்து வலம் வந்த நிலையில், போலீசார் இவரை அதிரடியாக கைது செய்துள்ளனர். மேலும் போலீசாரால் கைது செய்யப்பட்ட விஜயகுமார் விசாரணைக்காக கோவைக்கு அழைத்து வரப்பட உள்ளார்.

Next Story

பிரணவ் ஜுவல்லரி உரிமையாளருக்கு போலீஸ் காவல்!

Published on 11/12/2023 | Edited on 11/12/2023
Pranav Jewelery owner police custody

திருச்சியைத் தலைமை இடமாகக் கொண்டு சென்னை, ஈரோடு, நாகர்கோவில், மதுரை, கும்பகோணம், பாண்டிச்சேரி உள்ளிட்ட 7 இடங்களில் பிரணவ் ஜுவல்லரி கடை செயல்பட்டு வந்தது. நகை விற்பனையுடன் செய்கூலி இல்லை, சேதாரம் இல்லை என நிர்வாகம் கொடுத்த விளம்பரத்தைப் பார்த்த பலரும் லட்சங்களில் முதலீடு செய்தனர். 5 லட்ச ரூபாய் முதலீடு செய்தால் 2 சதவீத வட்டி வீதம் என மாதம் தோறும் 10000 ரூபாய், பத்து மாத முடிவில் செய்கூலி, சேதாரம் இல்லாமல் 106 கிராம் தங்கம் வாடிக்கையாளருக்கு வழங்கப்படும் என்ற கவர்ச்சி அறிவிப்பை நம்பி பலரும் 5 லட்சம் முதல் 1 கோடி ரூபாய் வரை முதலீடு செய்திருந்தனர்.

இந்தச் சூழலில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கப்பட்ட காசோலைகள் பணமில்லாத காரணத்தால் திரும்பி வந்துள்ளன. இதுகுறித்து வாடிக்கையாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு ஓரிரு வாரங்களில் பணம் செட்டில் செய்வதாக ஜுவல்லரி சார்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. இருப்பினும் உரிய பணம் சென்று சேராததால் முதலீடு செய்தவர்கள் மதுரை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து மோசடி புகாரில் பிரணவ் ஜுவல்லரி உரிமையாளர்களான மதன் செல்வராஜ், அவரது மனைவி கார்த்திகா ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி இருவரையும் தேடியும் வந்தனர். இந்த சூழலில் நகை சேமிப்பு மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த பிரணவ் ஜுவல்லரி உரிமையாளர்களில் ஒருவரான மதன் செல்வராஜ் மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் சரணடைந்திருந்தார். இதனையடுத்து இவரை டிசம்பர் 21 ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி ஜோதி உத்தரவிட்டிருந்தார்.

அதே சமயம் பிரணவ் ஜுவல்லரி உரிமையாளர் மதன் செல்வராஜ், அவரது மனைவி கார்த்திகா ஆகியோர் முன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இதனையடுத்து இந்த மனு கடந்த 8 ஆம் தேதி (08.12.2023) விசாரணைக்கு வந்தது. அப்போது, “பிரணவ் ஜுவல்லரி நிறுவனம் 100 கோடிக்கு மேல் மோசடி செய்துள்ளது. இது குறித்து 1,900க்கும் மேற்பட்டோர் புகார்கள் கொடுத்துள்ளனர். மதன் செல்வராஜ் ஏற்கனவே நீதிமன்றத்தில் சரணடைந்த நிலையில், அவரது மனைவி கார்த்திகா தலைமறைவாக உள்ளார்” என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனைக் கேட்ட நீதிபதி பிரணவ் ஜுவல்லரி உரிமையாளர்களான மதன் செல்வராஜ், கார்த்திகா ஆகியோரின் முன் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், பிரணவ் ஜுவல்லரி மோசடி வழக்கில் பிரணவ் ஜுவல்லரி உரிமையாளர் மதன் செல்வராஜை 7 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க மதுரை சிறப்பு நீதிமன்றம் நீதிபதி அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளார்.