Skip to main content

குழந்தை பிறந்து 11 நாட்களில் தாய் இறந்த சோகம்

Published on 22/11/2022 | Edited on 22/11/2022

 

Mother passed away 11 days after birth;a few days after the surgery

 

நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள பெட்டட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். இவரது மனைவி அனுசியா. கர்ப்பிணிப் பெண்ணான அனுசியாவிற்கு கடந்த 10 ஆம் தேதி குன்னூரில் தனியார் மருத்துவமனையில் குழந்தை பிறந்துள்ளது. 

 

இரண்டு நாட்களுக்குப் பின் அவருக்கு கருத்தடை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சை முடிந்து ஒரு நாள் ஆகியும் மயக்கம் தெளியாததால் அனுசியாவை அவரது குடும்பத்தினர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

 

தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அனுசியா நேற்று சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து அனுசியாவின் குடும்பத்தினர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரைப் பெற்றுக்கொண்ட காவல்துறையினர், சந்தேக மரணம் என்ற பெயரில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

குழந்தை பிறந்து 11 நாட்களில் பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உதகையில் தள்ளுமுள்ளு; எஸ்.பி. வாகனத்தை சேதப்படுத்திய அதிமுகவினர்

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
police and AIADMK pushed back when they filed their nomination papers in Utagai

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழகம் மற்றும் புதுவையில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனையொட்டி தமிழக அரசியல் கட்சிகள் கூட்டணி அமைத்து தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்து வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு வந்தனர்.

இந்த நிலையில், இன்று தமிழகத்தின் பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் வேட்புமனுக்கள் தாக்கல் செய்து வருகின்றனர். அதன்படி நீலகிரி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடக்கூடிய பாஜக வேட்பாளர் எல். முருகன் மற்றும் அதிமுக வேட்பாளர் லோகேஷ் தமிழ்செல்வன் இருவரும் இன்று ஒரே நாளில் உதகையில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இதற்கு முன்பாக எல். முருகன் வேட்புமனு தாக்கல் செய்ய 11 மணி முதல் 12 மணி வரை நேரம் ஒதுக்கித் தர கேட்டிருந்தார். அதற்கு அனுமதியும் வழங்கப்பட்டிருந்தது.

அதேபோன்று அதிமுக வேட்பாளருக்கும் அதற்கு அடுத்த நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் எல். முருகனும், பாஜக நிர்வாகிகளும் கோவில்களுக்குச் சென்றுவிட்டு  தாமதமாக 12 மணிக்கு உதகை ஆட்சியர் அலுவலகத்திற்கு வேட்புமனு தாக்கல் செய்ய வந்துள்ளனர். இதனிடையே எல்.முருகன் தாமதமாக வந்ததால் அந்த பகுதியில் ஆயிரக்கணக்கில் பாஜக மற்றும் அதிமுக தொண்டர்களும் குவியத் தொடங்கியுள்ளனர். இதனால் அங்கு பெரும் பதற்றமான சூழல் ஏற்பட்டது.

police and AIADMK pushed back when they filed their nomination papers in Utagai

இந்த நிலையில், பாஜக வேட்பாளர் தாமதமாக வந்து எங்கள் நேரத்தில் அவர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர் என்று அதிமுகவினர் வாக்குவாதம் செய்தனர். இதனைத் தொடர்ந்து  பாஜக - அதிமுகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனிடையே பாஜவினர் பேரணி செல்வதால் சற்று நின்று செல்லுமாறு காவல்துறையினர் அதிமுகவினரிடம் அறிவுறுத்தியுள்ளனர். ஆனால் அதிமுகவினர் அதனைக் கேட்காமல் போலீசாரின் தடுப்புகளை மீறிச் சென்றதால் போலீசாருக்கும் அதிமுகவினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. அப்போது அந்த வழியாக வந்த காவல் கண்காணிப்பாளர் வாகனத்தை மறித்து அதிமுகவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

பிரபல தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
Ooty famous private schools email incident

நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள இரு பிரபல சர்வதேசத் தனியார் பள்ளிகளுக்கு இ-மெயில் மூலம் இன்று (19.03.2024) மதியம் 02.30 மணியளவில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு பள்ளி நிர்வாகம் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து மோப்ப நாய் உதவியுடன் 3 வெடிகுண்டு செயலிழப்பு போலீசார் சம்பந்தப்பட்ட பள்ளியில் தீவிர சோதனை மேற்கொண்டுள்ளனர்.

அதே சமயம் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து பள்ளியில் இருந்து மாணவர்களைப் பெற்றோர்கள் அழைத்துச் சென்றனர். போலீசார் மேற்கொண்ட சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது வதந்தி என்பது தெரிய வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மத்தியிலும், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக சென்னையில் உள்ள அண்ணா நகர், பாரிமுனை, கோபாலபுரம், ராஜா அண்ணாமலைபுரம், ஜெ.ஜெ. நகர், திருமழிசை ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வரும் 13 தனியார் பள்ளிகளுக்கு கடந்த பிப்ரவரி மாதம் 8 ஆம் தேதி (08.02.2024) வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.