Skip to main content

பிறந்த நேரம் சரியில்லை என 4 மாத குழந்தையைக் கொன்ற தாய் கைது!

Published on 24/03/2022 | Edited on 24/03/2022

 

 Mother arrested for BABY incident in pazhani

 

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனையில் குழந்தை பிறந்த நேரம் சரியில்லாததால் பிரச்சனை ஏற்படுவதாக சொன்ன ஜோசியரின் பேச்சைக் கேட்டு தாய் தான் பெற்ற 4 மாத குழந்தையைக் கொன்ற கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

 

பழனி அருகே உள்ள ராசாபுரம் ஊராட்சி  இரண்டாவது வார்டை சேர்ந்தவர்கள் மகேஷ்வரன்-லதா தம்பதியினர். இவர்களுக்கு மூன்று வயதில் ஆண் குழந்தையும், பிறந்து நான்கே மாதமான ஆண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் நேற்று மகேஷ் வேலைக்குச் சென்றிருந்த நிலையில் தாய் லதா நான்கு மாத குழந்தை கோகுலுடன் வீட்டிலிருந்துள்ளார். கழிவறைக்குச் சென்று வந்த நேரத்தில் குழந்தையை காணவில்லை என லதா அக்கம் பக்கத்தினரிடம் கூறியுள்ளார். பிறகு குழந்தையை உறவினர்கள் சேர்ந்து தேடிய நிலையில் அருகிலிருந்த ஆற்றின் கரையில் செடிகளுக்கு நடுவே குழந்தை இறந்து கிடந்தது தெரியவந்தது. உடனே குழந்தையின் உடல் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டு உடற்கூறாய்வு செய்யப்பட்டது. அதன்பின் தாலுகா போலீசார் குழந்தையின் பெற்றோரிடம் இது தொடர்பாக விசாரணை நடத்தினர்.

 

போலீசார் நடத்திய விசாரணையில் குழந்தையின் தாய் லதா முன்னுக்குப்பின் முரணான தகவலை அளித்த நிலையில், சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் விசாரணையைத் தீவிரப்படுத்தியபோது அந்த அதிர்ச்சி தகவல் வெளியானது. குடும்பத்தில் அடிக்கடி ஏற்படும் பிரச்சனைக்கு உங்கள் மகன் பிறந்த நேரம் சரியில்லாததே காரணம் என ஜோசியர் கூறியதை கேட்ட தாய் லதா, கொடூர மனதுடன் பெற்ற நான்கு மாத மகனை ஆற்றின் கரைக்கு அழைத்துச் சென்று கொலை செய்துவிட்டு நாடகமாடியது தெரியவந்தது. தற்பொழுது கொடூர தாய் லதாவை போலீசார் கைது செய்து சிறையிலடைத்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'மீண்டும் சிக்கிய 4 கோடி'-பறக்கும் படை அதிரடி!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
erode


நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தீவிரப்படுத்தியுள்ளன.

மேலும், தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் பறக்கும் படையினர் நிலை கண்காணிப்பு குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் இரவு பகல் என சுழற்சி முறையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு ரூ.50 ஆயிரத்திற்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்படும் தொகையைப் பறிமுதல் செய்து வருகின்றனர்.

அதன்படி ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி, கோபி, அந்தியூர், பவானி சாகர் என மாவட்டம் முழுவதும் உள்ள 8 சட்டமன்றத் தொகுதிகளில் இதுவரைத் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையின் போது, உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.4 கோடியே 28 லட்சத்து 20 ஆயிரத்து 303 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் உரிய ஆவணங்கள் காண்பித்ததால் ரூ.2 கோடியே 95 லட்சத்து 65 ஆயிரத்து 213 சம்பந்தப்பட்டவர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது. மீதம் 1 கோடியே 32 லட்சத்து 55 ஆயிரத்து 90 ரூபாய் பணம் மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் உரிய ஆவணங்களை காண்பித்து பணத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அண்மையில் பாஜகவின் நெல்லை வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான பணம் 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக செய்திகள் வெளியான நிலையில் அது தொடர்பாக அவருக்கு போலீசார் சம்மன் அனுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story

18 மாவோயிஸ்டுகள் பலி; சத்தீஸ்கரில் பரபரப்பு!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
nn

சத்தீஸ்கர் மாநிலத்தில் 18 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சத்தீஸ்கர் மாநிலம் கன்கர் மாவட்டத்தில் நக்சலைட்டுகள் மற்றும் பாதுகாப்பு படைகளுக்கு இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இதில் மொத்தமாக 18 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்தத் தாக்குதலில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த மூன்று வீரர்கள் படுகாயம் அடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

மொத்தமாக 18 மாவோயிஸ்டுகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அவர்கள் பயன்படுத்திய துப்பாக்கிகள், மெஷின் கன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் ஒரே ஒரு எல்லை பாதுகாப்பு வீரரின் காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து இருப்பதாகவும் ஆனால் உயிருக்கு எந்தவிதமான சேதம் இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் நேரத்திற்கு முன்பாக நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தில் 18 மாவோயிஸ்டுகள் கொலை செய்யப்பட்டிருப்பது முக்கிய சம்பவமாக பார்க்கப்படுகிறது.  நக்சலைட்டுகள் ஆதிக்கம்  அதிகம் இருக்கும் சத்தீஸ்கரில் இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.