Skip to main content

‘பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில் வழி நடத்திச்சென்றாயே...’ - தாயின் சடலத்தின் மீது மரணித்த மகள்

Published on 26/11/2022 | Edited on 26/11/2022

 

mother and daughter passed away same day
தாய் - மகள்

 

‘அம்மா, உனக்கு கடைசிக்காலம் வரை தினமும் ஒரு வேளை சாப்பாட்டை என் கையால்தான் ஊட்டி விடுவேன்’ என்ற மகளின் அளவு கடந்த பாசத்தால், 31 ஆண்டுகளாக தன் மகளின் கையால்  சாப்பிட்டு வந்த தாய் திடீரென்று இறந்ததால், இறந்த தாயின் மாா்பில் விழுந்து தன் உயிரையும் மகள் மாய்த்துக்கொண்ட சம்பவம் குமாியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

கன்னியாகுமரி மாவட்டம், இரணியல் அருகே காற்றாடிமுக்கு பகுதியைச் சோ்ந்த நடேசன் மனைவி வேலம்மாள் (78) ஓய்வு பெற்ற அரசு பள்ளி ஆசிாியை. இவா்களுக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் இருக்கின்றனர். ஒரே பெண் பிள்ளையான பகவதியம்மாளை (56) சிறு வயதில் இருந்தே தாயாா் வேலம்மாள் மிகுந்தப் பாசத்துடன் வளர்த்து வந்தார். அதே போல், மகள் பகவதியம்மாளும் வளர, வளர தாயார் மீது பிாியமாகவே இருந்து வந்தார்.

 

பகவதியம்மாளுக்கு திருமண வரன் பாா்த்தபோது கூட, தினமும் என் தாயாரை நான் பாா்க்க வேண்டும். அதற்கு வசதியாக வீட்டின் அருகில் வரன் பாருங்கள் என பகவதியம்மாள் கூறியதையடுத்து, வீட்டில் இருந்து 5 கி.மீ தூரத்தில் தலக்குளம் பகுதியைச் சோ்ந்த ராதாகிருஷ்ணன் என்பவருக்கு மணம் முடித்து வைத்தனா். இவர்களுக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர்.

 

பகவதியம்மாளுக்கு திருமணம் முடிந்த அடுத்த வாரத்திலிருந்தே, தனது வீட்டிலிருந்து தாயாருக்கு தினம் ஓரு வேளை, காலை அல்லது மதிய சாப்பாட்டை கொண்டு போய் அவரே ஊட்டி விட்டு வந்தார். இதைப் பாா்த்த அக்கம்பக்கத்தினா் கூட ஆச்சரியப்பட்டுள்ளனா். கணவன் வீட்டிலும் இதற்கு எந்த எதிா்ப்பும் காட்டவில்லை. அந்தளவு தாயும் மகளும் பாசத்தோடு இருப்பதை உறவினா்களும் ஊராரும் பெருமையோடு பேசி வந்தனா்.

 

இந்த சூழ்நிலையில் தான் வேலம்மாளுக்கு சில நாட்களாக உடல்நிலை சாியில்லாமல் இருந்தது. கடந்த 24 ஆம் தேதி மதியம், பகவதியம்மாள் தாயாருக்கு உணவு கொடுத்து விட்டு வீட்டிற்குச் சென்றாா். மறுநாள் 25 ஆம் தேதி காலை, தாயாருக்கு டிபன் கொடுக்க தயாா் செய்து கொண்டிருந்த போது, அவாின் சகோதரா் போன் செய்து அம்மா இறந்துவிட்டார் எனக் கூறியதை கேட்டு அதிர்ச்சியடைந்த பகவதியம்மாள், உடனே தாயாரைப் பார்க்கச் சென்றார்.

 

தாயாாின் உடலைக் கட்டிப்பிடித்து அழுது கொண்டிருந்தவரை உறவினர்கள் ஒருபுறம் தேற்றிக்கொண்டிருந்தனா். இந்நிலையில், திடீரென்று பகவதியம்மாள் தாயாாின் மாா்பில் விழுந்து பேச்சு மூச்சின்றி கிடந்தாா். இதனால் அதிர்ச்சியடைந்த உறவினா்கள் பகவதியம்மாளை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கனவே இறந்துவிட்டதாகக் கூறியுள்ளனர்.

 

திருமணத்துக்கு முன்பே பிள்ளைகள் பெற்றோரை வெறுக்கும்  இந்த காலக்கட்டத்தில் திருமணம் முடிந்தும் கடைசி வரை தாய், மகள் பாசத்துக்கு கொஞ்சமும் குறை இல்லாமல் வாழ்ந்த வேலம்மாளும் பகவதியம்மாளும் தாய், மகள் பாசத்துக்கு இந்தக் காலத்தின் உதாரணமாகிவிட்டனா் என்கின்றனா் ஊராா்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இந்த முறையாவது அ.தி.மு.க.வை வெற்றிபெறச் செய்யுங்கள்” - இ.பி.எஸ். ஆதங்கம்!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Make ADMK win at least this time EPS Fear

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலில் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் பசிலியான் நசரேத் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி வேட்பாளர் ராணி ஆகியோரை ஆதரித்து இன்று (27.03.2024) தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “தேசிய கட்சிகளும் சரி, மாநில கட்சிகளும் சரி, இதுவரை மீனவ சமுதாயத்தினருக்கு இதுபோன்று வாய்ப்பு வழங்கியதில்லை. இந்த முறை அ.தி.மு.க. சார்பில் மீனவ சமுதாயத்தை சேர்ந்த பசிலியான் நசரேத்தை வேட்பாளராக நிறுத்தி உள்ளோம். கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியைப் பொறுத்தவரையில் ஒரு முறை பா.ஜ.க. வெற்றி பெறுகிறது. அடுத்த முறை காங்கிரஸ் வெற்றி பெறுகிறது. ஆனால் ஒரு முறை கூட அ.தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெறவில்லை. எனவே இந்த முறையாவது அ.தி.மு.க.வை வெற்றிபெறச் செய்யுங்கள்.

தேர்தல் வாக்குறுதிகளில் 10 சதவீதத்தைக் கூட தி.மு.க. நிறைவேற்றவில்லை. தேர்தல் காலங்களில் ஆசை வார்த்தைகளை கூறி தி.மு.க. மக்களை ஏமாற்றி வருகிறது. நெல் குவிண்டாலுக்கு ரூ. 2,500 கொடுப்பதாக கூறி விவசாயிகளை தி.மு.க. அரசு  ஏமாற்றியுள்ளது. தேர்தல் வாக்குறுதியில் பெட்ரோல், டீசல் விலையில் லிட்டருக்கு ரூ.4 குறைப்பதாக சொன்னார்கள். ஆனால் குறைக்கவில்லை. ஆனால் நாடாளுமன்றத்தில் நாடாளுமன்ற மக்களவையே ஸ்தம்பிக்கும் அளவுக்கு பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்க நமது அ.தி.மு.க. வேட்பாளர் குரல் கொடுப்பார். விலைவாசி உயர்வுக்கு டீசல் விலை உயர்வே காரணம். பெட்ரோல் விலை உயர்வால் நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நீட் தேர்வை கொண்டு வந்தது காங்கிரஸ் மற்றும் தி.மு.க.தான். நீட்டை தடுத்து நிறுத்த போராடுவது அ.தி.மு.க.. அதே சமயம் தி.மு.க. ஆட்சியில் ஒரு மருத்துவக் கல்லூரி கொண்டு வரவில்லை. அ.தி.மு.க. ஆட்சியில் மருத்துவக் கல்லூரி, வேளாண்மை கல்லூரி என பல கல்லூரிகளை அ.தி.மு.க. அரசு கொண்டு வந்தது. மின்சார கட்டண உயர்வு, குடிநீர் கட்டண உயர்வு, குப்பைக்கு கூட வரி விதிப்பு என அனைத்திற்கும் வரி போடும் அரசாக தி.மு.க. உள்ளது. சிறுபான்மையின மக்களுக்கு அதிக திட்டங்களை நிறைவேற்றி தந்துள்ளோம். சிறுபான்மையின மக்களுக்கு அரணாக அ.தி.மு.க. அரசு இருக்கிறது. கண் இமையை பாதுகாப்பது போல் பாதுகாக்கும். தி.மு.க.வினரை தன் குடும்பம் என்று கூறும் முதல்வர் மு.க. ஸ்டாலின் கட்சித் தலைவராக தொண்டரை நிறுத்துவாரா?. வாக்குகளை பெறவே கட்சியினரை தன் குடும்பம் என்று கூறி தி.மு.க.வினரிடம் முதல்வர் மு.க. ஸ்டாலின் இரட்டை வேடம் போடுகிறார். இந்தியாவிலேயே ஜனநாயகம் உள்ள கட்சி அ.தி.மு.க. எனவே சாதாரண தொண்டனும் அ.தி.மு.க.வில் பொறுப்புக்கு வரலாம்” எனத் தெரிவித்தார். 

Next Story

'அப்பாவை விட அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்' - விஜய் வசந்த் நம்பிக்கை

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
'I will win by a bigger margin than my father' - Vijay Vasant Hope

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இந்நிலையில் இன்று திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் சார்பாக கன்னியாகுமரியில் போட்டியிடும் விஜய் வசந்த் வேட்புமனு தாக்கல் செய்தார். அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், ''நான் காங்கிரஸ் கட்சி சார்பில் மீண்டும் போட்டியிட என்னுடைய வேட்புமனுவைத் தாக்கல் செய்திருக்கிறேன். மீண்டும் வெற்றிபெற்று என்னுடைய மக்கள் பணியை மீண்டும் தொடருவேன் என்று நம்பிக்கையோடு இந்த பயணத்தை தொடர்கிறேன். தேர்தலைப் பொறுத்தவரை 2019ல் எனது தந்தை அதிகபட்ச வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த 2024 தேர்தலில் மூன்று லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது.

2024 பாராளுமன்றத் தேர்தலை பொறுத்தவரை கன்னியாகுமரி என்பது இயற்கை வளம் சார்ந்த பகுதி. குமரி மாவட்டத்தை உலகத்தரம் வாய்ந்த சுற்றுலாத் தலமாக மாற்ற வேண்டும். இளைஞர்கள் வேலை வாய்ப்பு இல்லாமல் இருக்கிறார்கள். அவர்களுக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். இந்த தொகுதியில் நான் எதுவுமே செய்யவில்லை என்று சொல்பவர்கள் ஏதாவது செய்திருக்கிறார்களா? இந்த தொகுதிக்கு இரண்டு ஆண்டுகளில் என்னால் முடிந்த அளவுக்கு செய்து கொண்டு வந்திருக்கிறேன். மெதுவாக நடந்து கொண்டிருந்த ரயில்வே ரெட்டிப்பு பாதையை வேகப்படுத்தியிருக்கிறோம். இப்படி பல விஷயங்கள் செய்து கொண்டிருக்கிறோம். அரசியல் காரணத்திற்காகவும், தேர்தல் நேரம் என்பதாலும் இப்படி குற்றச்சாட்டுகளை வைக்கிறார்கள்'' என்றார்.