Skip to main content

தமிழகத்தில் தேர்தல் ஆணையம் கைப்பற்றிய பணங்களை தமிழகத்தின் நீர் ஆதாரத்தை பெருக்குவதற்கு பயன்படுத்த வேண்டும் - விக்கிரமராஜா பேட்டி

Published on 29/04/2019 | Edited on 29/04/2019

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்டத் தலைவர் சண்முகம் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாநில தலைவர் விக்கிரம ராஜா பங்கேற்று சிறப்புரையாற்றினார். 

 

vikiramaraja

 

பின்பு அவர் செய்தியாளர்களை சந்தித்து நேர்காணல் அளித்த போது கூறியதாவது, தேர்தல் ஆணையர்கள் கைப்பற்றிய பணங்கள்,  நகைகள்,  பாத்திர பண்டங்கள் எல்லாம் வணிகர்கள் உடையன.  அதை எந்தவித நிபந்தனையும் இல்லாமல் தேர்தல் ஆணையம் திருப்பி வழங்க வேண்டும்.அதற்கு மேலாக தமிழகத்திலேயே கைப்பற்றப்பட்ட பணங்களை தமிழகத்தினுடைய நீர் ஆதாரத்தை பெருக்கும்வகையாக ஏரி, குளங்களைச் சீரமைத்து இங்கு நீர் ஆதாரத்தை பெருக்குவதற்கு அந்த பணத்தை நேரடியாக பயன்படுத்தி செயல்படுத்த வேண்டும்.
 

  
நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்று முடிந்திருக்கிறது எங்களது இந்த மாநாட்டிற்குப் பிறகு பதினெட்டாம் நாள் தேர்தல் தீர்ப்பு வர இருக்கிறது.  இதற்கு இடையில் கடந்த பாரதிய ஜனதா ஆட்சியில் நாங்கள் பல்வேறு பிரச்சனைகளை கொண்டு போராடிக் கொண்டிருக்கிறோம். அந்த போராட்டத்திற்கு இன்னமும் தீர்வு கிடைக்கப் பெறவில்லை.  ஆனால், பாரதப் பிரதமர் அகில இந்திய வணிகர் மாநாட்டிலே வணிகர்களின் பிரச்சனைகளை முழுமையாக தீர்ப்பேன் என்று உறுதி அளித்து இருக்கிறார்.  
 

அதே போன்று காங்கிரஸ் கட்சியினுடைய தலைவர் ராகுல் காந்தி அவர்கள் ஜிஎஸ்டி வரி விதிப்பு முழுமையாக மாற்றி அமைக்கப்படும். பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்  என்று சொல்லி இருக்கிறார்.  இந்த இடைப்பட்ட காலத்தில் நடக்கும் இந்த மாநாடு என்பது எங்களுடைய தொடர் போராட்டங்களின் அடிப்படையில்  தொடர்ச்சியாக வரக்கூடிய அரசு எங்களை அழைத்துப் பேசி தீர்வு ஏற்படவில்லை என்று சொன்னால் தொடர் போராட்டம் நடத்துவதற்கு தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை முடிவெடுத்திருக்கிறது.  
 


அதேபோன்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி இங்கு ஒரு லட்சம் கோடிக்கும் மேலாக ஜிஎஸ்டி மூலம் வருவாய் ஏற்பட்டால் தமிழகத்தில் மட்டுமல்ல, இருக்கின்ற டோல்கேட்டுகளை உடனடியாக அப்புறப்படுத்தப்படும் என்று தெரிவித்தார். ஆனால் ஒரு லட்சத்து 6 ஆயிரம் கோடியை தாண்டி ஜிஎஸ்டி வரிவிதிப்பு வசூலிக்கப்பட்டு கொண்டிருக்கிறது. ஆனால் சுங்கச்சாவடி கட்டணம் உயர்த்தப்பட்டு கொண்டிருக்கிறது.  அதனை நாங்கள் ஏற்றுக்கொள்ள இயலாது. அவர் வாக்குறுதி அளித்ததுபோல சுங்கச்சாவடி கட்டணத்தை திரும்பப் பெற வேண்டும்.  சிறு சாலைகளில் கூட சுங்கச்சாவடி அமைத்துக் கொண்டிருக்கிறார்கள் முழுமையாக அப்புறப்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு வலியுறுத்துகிறது என்று கூறினார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தண்ணீர் தேடிச் செல்லும் வன விலங்குகள் பலியாகும் துயரம்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Tragedy of wild animals lost life in search of water

தமிழ்நாட்டில் இந்த ஆண்டு பருவமழை பொய்த்துவிட்டதால் ஏரி, குளம், குட்டைகளில் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது. இதனால் கால்நடைகளுக்குத் தண்ணீர் கிடைக்கவில்லை. அதேபோல தமிழ்நாடு முழுவதும் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள காடுகளிலும் தண்ணீர் இன்றி மரங்கள் கருகி வருவதுடன் வனவிலங்குகளும் தண்ணீர் இன்றி தவித்து வருகிறது.

இதேபோல புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிகமாக உள்ள வனப்பரப்புகள் மற்றும் கீரமங்கலம் மற்றும் சேந்தன்குடி, குளமங்கலம், மேற்பனைக்காடு, நெய்வத்தளி உள்ளிட்ட பல கிராமங்களில் வனத்துறைக்கு சொந்தமான காப்புக்காடுகளில் பல ஆண்டுகளுக்கு முன்பே பலமரக்காடுகள் அழிக்கப்பட்டு முந்திரி மற்றும் தைலமரக்காடுகளாக பராமரிக்கப்பட்டு வந்தது.

இதனால் பலமரக்காடுகளில் இருந்த முயல், மான், மயில்கள், குருவிகள், பறவைகள் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது. தற்போது தைலமரக்காடுகள் அழிக்கப்பட்டு முந்திரி மரக்காடுகள் வளர்க்கப்பட்டு வருகிறது. இதனால் இந்தக் காடுகளில் வன உயிரினங்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது. மேலும் இந்தக் காடுகளில் உள்ள மான் போன்ற உயிரினங்கள் தண்ணீர் தேடி வெளியிடங்களுக்குச் செல்லும் போது நாய்களால் கடித்து குதறப்படுகிறது. அதேபோல தண்ணீர் தேடி சாலையைக் கடக்க முயலும்போது வாகனம் மோதி பலியாகிறது. இதேபோல புதுக்கோட்டை  மாவட்டத்தில் திருமயம், கீரமங்கலம் என மாவட்டம் முழுவதும் பல விபத்து சம்பவங்களில் மான்கள், மயில்கள் போன்ற உயிரினங்கள் பலியாகி வருகிறது. இதேபோல வியாழக்கிழமை கீரமங்கலம் பகுதியில் இருந்து தண்ணீர் தேடிச் சென்ற ஒரு மான் திசை மாறி பேராவூரணி பக்கம் சென்றுள்ளது. அந்த மானை பொதுமக்கள் பிடித்து வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

ஆகவே, கோடைக்காலம் தொடங்கிவிட்டதால் காடுகளில் சுற்றித்திரியும் பறவைகள், வன உயிரினங்களுக்கு இரையும், தண்ணீரும் கிடைக்காமல் தண்ணீர் தேடி கிராமங்களுக்குள் வரும் மயில், மான் போன்றவற்றை நாய்கள் கடிப்பதும், விபத்துகளில் சிக்கி பலியாவதும் தொடர்ந்து கொண்டிருப்பதால்  ஒவ்வொரு காட்டுப் பகுதியிலும் சில இடங்களில் கோடைக்காலம் முடியும் வரை தண்ணீர் தொட்டிகள் அமைத்து வன உயிரினங்களைப் பாதுகாக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். தண்ணீர் கிடைக்காமல் இப்படி வெளியில் வந்து விபத்துகளில் சிக்கி பலியாகிறது. ஆகவே வனத்துறை தண்ணீர் தொட்டிகள் அமைக்க வேண்டும். கோடை வெயிலில் தாகத்தில் தவிக்கும் மக்களுக்கு ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைப்பது போல வன உயிரினங்களின் தாகம் தீர்க்கவும் உயிர் காக்கவும் தண்ணீர் தொட்டிகள் அமைக்க வேண்டும் என்கின்றனர் இளைஞர்களும் விவசாயிகளும்.

மேலும் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு வனப்பகுதியில் தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டது சில நாட்கள் தண்ணீர் வைக்கப்பட்டது. ஆனால் அதன் பிறகு தண்ணீர் வைத்து பராமரிப்பு செய்யவில்லை. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் JJ வடிவத்தில் அமைக்கப்பட்ட தண்ணீர் தொட்டிகளில் கூட தண்ணீர் இல்லை. வனவிலங்குகளை காக்க தண்ணீர் தொட்டி அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Next Story

22 குடும்பங்களுக்கு அபராதம்; ஹோலி மழை நடன நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
 22 families fined; Holi rain dance performance restricted

கர்நாடகா மாநிலம், பெங்களூர் பகுதியில் 1 கோடிக்கும் அதிகமான மக்கள் வசித்து வருகிறார்கள். அதிகப்படியான ஐ.டி நிறுவனங்கள், தொழில்நுட்ப நிறுவனங்களால் இந்தியாவில் தகவல் தொழில்நுட்பத் தலைநகரமாக பெங்களூர் திகழ்ந்து வருகிறது. இந்த நிலையில், கடந்த ஆண்டு பெய்த தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழையால் நீர்நிலைகளில் குறைவான நீர் மட்டுமே தேக்கி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், பெங்களூர் பகுதியில் வழக்கமாக வழங்கப்படும் அளவை விடக் குறைந்த அளவில் மட்டுமே நீர் விநியோகிக்கப்பட்டு வந்தது.

குறிப்பாக, புறநகர்ப் பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு அதிகமாக இருந்து வருகிறது. இதனால், அந்தப் பகுதிகளில் வாடகை வீடுகளில் குடியிருப்பவர்கள் பலர் தங்கள் வீடுகளை காலி செய்து தங்களது சொந்த ஊருக்குச் செல்லும் நிலைமைக்கும் தள்ளப்பட்டுள்ளனர். இதனிடையே, குடிநீர் சிக்கனத்தை கடைப்பிடிக்கும் நோக்கில் பெங்களூரில் காரை குடிநீரில் கழுவ தடை விதித்து பெங்களூர் மாநகராட்சி உத்தரவிட்டது. அந்த உத்தரவில், தோட்டம், கார் கழுவுதல், கட்டுமான பணிகளுக்கு குடிநீரைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அடுத்த 3 மாதங்களுக்கு இந்த தடை அமலில் இருக்கும் எனவும், தடையை மீறினால் 5000 ரூபாயும், தொடர்ந்து தடையை மீறினால் 5000 ரூபாயுடன் தினமும் கூடுதலாக 500 ரூபாயும் அபராதமாக செலுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் பெங்களூருவில் குடிக்கும் தண்ணீரை பயன்படுத்தி வாகனங்களை கழுவிய 22 குடும்பங்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர். அதே நேரம் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக பெங்களூரில் ஹோலி பண்டிகை கொண்டாடுவதற்குப் பல்வேறு கட்டுப்பாடுகளை பெங்களூரு நிர்வாகம் விதித்துள்ளது. ஹோலி பண்டிகையை வணிக நோக்கத்திற்காக செயற்கை மழை நடனம், தண்ணீரை பீய்ச்சி அடித்து நடனமாடுவது போன்ற பொழுதுபோக்கு அம்சங்களுக்கு கட்டுப்பாடு விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. காவிரி நீர் மற்றும் குழாய், கிணற்று நீரை ஹோலி கொண்டாட்டத்திற்குப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பெங்களூருவில்  பிரபல ஹோட்டல்களில் ஹோலி பண்டிகையை  முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மழை நடன நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.