கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகிலுள்ளது உ.செல்லூர் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜாராம். இவர் ஆசனூரில் உள்ள டாஸ்மாக் கடையில் சூப்பர்வைசராக பணி செய்து வருகிறார். அதே ஊரைச் சேர்ந்த வாசு, சந்திரசேகர் ஆகிய இருவரும் விற்பனையாளர்களாக பணி செய்து வருகின்றனர். இவர்கள் மூவரும் நேற்று இரவு எட்டு முப்பது மணி அளவில் கடையை மூடிவிட்டு மதுபாட்டில்கள் வாங்க வந்த அதே பகுதியைச் சேர்ந்த சக்திவேல் என்பவரை துணைக்கு அழைத்துக் கொண்டு கடையில் வசூலான தொகை இரண்டு லட்ச ரூபாயுடன் புறப்பட்டனர்.
அப்போது திடீரென 2 பைக்குகளில் ஹெல்மெட் அணிந்து வந்த 4 மர்ம நபர்கள் சக்திவேல் உட்பட டாஸ்மாக் ஊழியர்களை மடக்கி கத்தியைக் காட்டி மிரட்டி அவர்கள் வைத்திருந்த இரண்டு லட்ச ரூபாய் பணத்தைப் பறித்துக் கொண்டு தப்பிச் செல்ல முயன்றனர். அப்போது சக்திவேல் அவர்களைப் பிடிக்க முயன்றார். இதனால் ஆத்திரமடைந்த அந்த மர்ம நபர்கள் நால்வரும் தாங்கள் வைத்திருந்த கத்தியால் சக்திவேலை தாக்கி விட்டு பைக்கில் தப்பிச் சென்றனர்.
இந்தச் சம்பவத்தில் சக்திவேல் படுகாயம் அடைந்தார். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை செய்து வருகின்றனர். மேலும் டாஸ்மாக் கடை வசூல் பணம் 2 லட்சத்தைக் கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது ஆசனூர். எப்போதும் பரபரப்பாக வாகனப் போக்குவரத்து உள்ள இந்தப் பகுதியில், கொள்ளை சம்பவம் நடந்துள்ளது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.