stalin

தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டது குறித்து திமுக நடத்திய ஆய்வு அறிக்கையை முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று ஒப்படைக்கிறார்.

அரசு போக்குவரத்து கழக நிர்வாகத்தை சீரமைப்பது குறித்து ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும்படி, முன்னாள் மத்திய மந்திரி டி.ஆர்.பாலு தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் பொன்முடி, கே.என்.நேரு, செங்குட்டுவன் மற்றும் தொ.மு.ச. பேரவை பொதுச்செயலாளர் சண்முகம் ஆகியோர் அடங்கிய குழுவை தி.மு.க. அமைத்தது.

Advertisment

அந்த குழுவினர் நடத்திய ஆய்வு அறிக்கை தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலினிடம் நேற்று முன்தினம் சமர்ப்பிக்கப்பட்டது.

தி.மு.க.வின் ஆய்வு அறிக்கையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் நேரில் ஒப்படைக்க மு.க.ஸ்டாலின் முடிவு செய்தார். அதன்படி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்திப்பதற்காக அவரது அலுவலகத்தில் நேரம் கேட்கப்பட்டிருந்தது.

இதையடுத்து இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து தி.மு.க.வின் ஆய்வு அறிக்கையை மு.க.ஸ்டாலின் நேரில் ஒப்படைக்கிறார். சென்னை தலைமை செயலகத்தில் நடைபெறும் இந்த சந்திப்பின் போது முதலமைச்சரிடம் பேருந்து கட்டண உயர்வை திரும்ப பெற மு.க.ஸ்டாலின் வலியுறுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.