Skip to main content

காணாமல் போன பெண்.. எரிந்த நிலையில் மீட்பு..!

Published on 09/02/2021 | Edited on 09/02/2021

 

Missing woman .. Recovered in kallakurichi

 

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகில் உள்ளது மயிலம்பாறை. இங்கு, காட்டுப் பிள்ளையார் கோயில் ஒன்று உள்ளது. இதன் அருகில் நேற்று முன்தினம் (07.02.2021) இரவு ஒரு பெண் தீயில் எரிந்த நிலையில் சடலமாகக் கிடந்துள்ளார். இதுகுறித்து காவல் துறைக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, கள்ளக்குறிச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக் மற்றும் சங்கராபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று எரிந்துபோன அந்தப் பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

 

மேலும், விழுப்புரம் தடய அறிவியல் நிபுணர் ராஜீவ், சம்பவ இடத்திற்குச் சென்று தடயங்களைச் சேகரித்தார். இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் சோழம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பிரபு என்பவர், தனது தாயாரைக் காணவில்லை எனக் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதன் பேரில் அவர் கூறிய அங்க அடையாளங்களை வைத்து இறந்து போனவர் சோழம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த வெண்ணிலா (வயது 35) என்பது தெரியவந்துள்ளது.

 

இவரது கணவர் முருகேசன் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்ட காரணத்தால் இவர் தனது மகள் மற்றும் மகனுடன் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் அவர் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

இதுகுறித்து வட சிறுவள்ளுர் கிராம நிர்வாக அலுவலர் ஜெயலட்சுமி, காவல்துறையில் அளித்தப் புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் திருமால் தலைமையிலான போலீசார், பெண்ணை எரித்துக் கொலை செய்த குற்றவாளிகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். மயிலம்பாறை பகுதியில் மர்மமான முறையில் பெண் எரித்துக் கொலை செய்யப்பட்டுக் கிடந்த சம்பவம் சங்கராபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ளக்குறிச்சி, விழுப்புரம் தொகுதியில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் 

Published on 25/03/2024 | Edited on 25/03/2024

 

கள்ளக்குறிச்சி திமுக வேட்பாளர் மலையரசன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். திமுக கூட்டணி கட்சிகள், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ஜெய்கணேஷ், சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ்.ஆர். சிவலிங்கம், சிபிஐ, சிபிஎம், முஸ்லீம் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் வந்தனர். 

அதேபோல் அதிமுக மாவட்டச் செயலாளரும் வேட்பாளருமான குமரகுரு கூட்டணி கட்சியான தேமுதிக நிர்வாகிகளுடன் சென்று தேர்தல் அதிகாரி ஷரவண்குமாரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். திமுக, அதிமுக கட்சி வேட்பாளர்கள் ஒரே நாளில் வேட்புமனு தாக்கல் செய்ததால் இரு கட்சி மற்றும் கூட்டணி கட்சித் தொண்டர்கள் கூட்டம் கள்ளக்குறிச்சி நகரில் நிரம்பி வழிந்தது.

விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணிக் கட்சிகளின் சார்பில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் துரை. ரவிக்குமார் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவரும் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலருமான பழனியிடம் வழங்கினார். ரவிக்குமாருடன் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, விசிக பொதுச் செயலாளர் சிந்தனைச் செல்வன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமமூர்த்தி, காங்கிரஸ் கட்சியின் குலாம் மொய்தீன் உட்பட கூட்டணிக் கட்சியினர் கலந்து கொண்டனர். 

அதேபோல் பா.ம.க. வேட்பாளர் முரளி சங்கர் பாமக மற்றும் பிஜேபி கட்சி நிர்வாகிகளுடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். இவரைத் தொடர்ந்து அதிமுக சார்பில் போட்டியிடும் மாவட்ட மாணவர் அணி செயலாளர் காந்தலவாடி பாக்யராஜ், அதிமுக மாவட்டச் செயலாளர் சண்முகம், தேமுதிக மாவட்டச் செயலாளர் வெங்கடேசன் உள்ளிட்டோருடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். 

Next Story

ஏமாற்றிய வடமாநில இளைஞர்; தர்ம அடி கொடுத்த பொது மக்கள்

Published on 11/03/2024 | Edited on 11/03/2024
Two people were arrested for deceiving people by claiming were applying jewelry polish

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள நயினார்பாளையம் பஸ் ஸ்டாப் அருகே பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு வாலிபர்கள் பழைய வெள்ளி, தங்கம், கண்ணாடி பொருட்கள், ஆகியவற்றிற்கு பாலிஷ் போட்டு தருவதாக கூறி கிராம மக்களை நம்ப வைத்துள்ளனர். அப்போது ஒரிஜினல் தங்க நகைகள் உள்ளிட்ட பொருட்களை பொதுமக்களிடம் வாங்கிய அந்த பீகார் இளைஞர்கள் பாலிஷ் போட்டு கொடுத்துள்ளனர்.

இதை பயன்படுத்திக் கொண்டு அந்த பீகார் இளைஞர்கள் ஒரிஜினல் நகைகளை பாலிஷ் போடுவதாக வாங்கிக் மறைத்து வைத்துக்கொண்டு அதற்கு பதிலாக போலியான நகை மற்றும் பொருட்களை திருப்பிக் கொடுத்துள்ளனர். இந்த விவகாரம் ஊர்மக்களுக்கு தெரியவர இருவரையும் பிடித்து தர்ம அடிகொடுத்து நயினார்பாளையம் வி.ஏ.ஓவுக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த வி.ஏ.ஓ ரஞ்சித் குமார் பீகார் இளைஞர்களிடம் விசாரணை நடத்தினார். 

விசாரணையில், பீகார் மாநிலத்தை சேர்ந்த பப்புகுமார்(31), அமர குமார் யாதவ்(34) இருவரும் தான் என தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து பாலிஷ் போட வைத்திருந்த உபகரண பொருட்களுடன் இருவரையும் கீழ்குப்பம் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று ஒப்படைத்தனர். பொதுமக்கள் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.