Skip to main content

"அமைச்சரை காணவில்லை!!!" -வாட்ஸ் அப்பில் பதிவிட்ட ஊராட்சிமன்ற தலைவரின் கணவர் உட்பட 2 பேர் கைது!

Published on 18/06/2020 | Edited on 18/06/2020
Missing Minister” - 2 people arrested, including husband of municipal council leader

 

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே உள்ளது மேல்குமாரமங்கலம் கிராமம், தமிழக தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத்தின் சொந்த ஊர். இந்த கிராமத்தின் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் மகாலட்சுமி, அவரது கணவர் பாலாஜி. கடந்த ஏப்ரல் மாதம் 5-ஆம் தேதி அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவர் மேல்குமாரமங்கலம் என்ற பெயரில் ஒரு வாட்ஸ்அப் குழு அமைத்திருந்தார். அந்த குழுவில் உள்ள பாலாஜி, அமைச்சர் சம்பத்தை காணவில்லை என்று வாட்ஸ்அப் குழுவில் பதிவிட்டுள்ளார். அதில் அதிருப்தியடைந்த அப்பகுதி அ.தி.மு.க கிளை செயலாளரும், அமைச்சர் சம்பத்தின் அக்கா மகனுமான ரஜினி என்பவர் பண்ருட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின்பேரில் போலீசார் பாலாஜி மற்றும் வாட்ஸ்அப் குழு அட்மின் ஆறுமுகம் ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து, பல மாதங்களாக தேடி வந்தனர். அதேசமயம் இவ்வழக்கில் ஜாமீன் கேட்டு பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம் பாலாஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது.

இந்நிலையில் பண்ருட்டி இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் மற்றும் போலீசார், கடலூர் மெயின்ரோட்டில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அவ்வழியே வந்த கொண்டிருந்த இருவரை பிடித்து சந்தேகத்தின்பேரில் விசாரணை செய்தனர். அதில் அவர்கள் மேல்குமாரமங்கலம் சேர்ந்த பாலாஜி(36), ஆறுமுகம்(33) என்பது தெரியவந்தது. தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் கடந்த ஏப்ரல் மாதம் அமைச்சர் சம்பத்தை காணவில்லை என வாட்ஸ் அப்பில் பதிவு செய்தவர்கள் இவர்கள்  என்பது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர். அமைச்சரை விமர்சனம் செய்தவர் கைது செய்யப்பட்டிருப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

எந்த சின்னத்திற்கு ஓட்டு போட்டேன் என சொன்ன பெண் அடித்து கொலை; 7 பேருக்கு வலை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
nn

நேற்று தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்த நிலையில் எந்த சின்னத்தில் வாக்களித்தேன் என வெளியே சொன்னதால் ஒரு பெண் கொலை செய்யப்பட்டதாக வெளியான தகவல் தமிழகத்தில் பரபரப்பு ஏற்படுத்திருக்கிறது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அடுத்துள்ளது பக்ரிமாணியம் கிராமம். அந்த பகுதியில் வசித்து வந்தவர் கோமதி. நேற்று நடந்த மக்களவைத் தேர்தலில் குறிப்பிட்ட ஒரு சின்னத்திற்கு வாக்களித்ததாக வெளியில் கூறியுள்ளார். இதனைக் கேட்ட அதே ஊரைச் சேர்ந்த அருள், பாண்டியன், அறிவுமணி, ரவிராஜா, கலைமணி, தர்மராஜ் ஆகியோர் அப்பெண்ணிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து 'நீ ஏன் எங்கள் கட்சிக்கு வாக்களிக்கவில்லை' என கூறி ஏழு பேரும் ஒன்றாக சேர்ந்து கோமதியை பலமாக தாக்கியுள்ளனர்.

இதில் கோமதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதுகுறித்து உடனடியாக ஸ்ரீமுஷ்ணம் காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பெண்ணின் உடலைக்  கைப்பற்றி விருதாச்சலம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அவரது உடலை அனுப்பி வைத்தனர். இதில் சம்பந்தப்பட்ட ஏழு பேரையும் போலீசார் தேடி வருகின்றனர். இக்கொலைக்கு உடைந்தையாக இருந்ததாக அந்த பகுதியைச் சேர்ந்த மூன்று பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Next Story

திமுக பிரமுகரின் வீடு சூறை; மோட்டார் சைக்கிள் எரிப்பு - திருச்சியில் பரபரப்பு

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
beaten on DMK executive house in Trichy

திருச்சி சின்னக்கடை வீதி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(45). இவரது வீட்டில் நேற்று இரவு மர்ம நபர்கள் ஐந்துக்கும் மேற்பட்டோர் நுழைந்து அவரது வீட்டை அடித்து நொறுக்கியதுடன் வெளியில் நின்று இருந்த இவரது மோட்டார் சைக்கிளை தீயிட்டு கொளுத்தினர். நள்ளிரவில் திடீரென   அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததை கண்டதும் மர்ம நபர்கள்  அங்கிருந்து தப்பி சென்றனர். பிறகு அக்கம் பக்கத்தினர்  தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து  எரிந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளின் தீயை அணைத்தனர்.

இருப்பினும் மோட்டார் சைக்கிள் முழுவதும் எரிந்து எலும்பு கூடானது. பின்னர் இது குறித்து சுரேஷ்குமார் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில் அவருக்கும் தாராநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஒரு சில நபர்களுக்கும் கோவில் சம்பந்தமாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. எனவே அவர்கள் தான் செய்திருக்கலாம் என புகாரில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். நள்ளிரவில் மர்ம நபர்கள் வீடு புகுந்து, வீட்டை  அடித்து நொறுக்கி மோட்டார் சைக்கிளை எரித்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியது. சுரேஷ்குமாருக்கும் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் பழக்கடை நடத்தி வரும் நபர் ஒருவருக்கும் கோவில் திருவிழா சம்பந்தமான பிரச்சனை ஒன்று ஏற்கெனவே உள்ளது. அதுமட்டுமின்றி தேர்தல் வேலைகளில் சுரேஷ்குமார் தீவிரமாக ஈடுபட்டதும், சுரேஷ்குமார் திமுக பிரமுகர் என்பதும் குறிப்பிடத்தக்கது