Skip to main content

“முதலமைச்சர் தன்னை முன்னிலைப்படுத்தாமல் தமிழகத்தை முன்னிறுத்தி வருகிறார்” - அமைச்சர் சக்கரபாணி

Published on 24/01/2023 | Edited on 24/01/2023

 

minister sakkarapani dindigul function talks about government recent schemes for oddanchatram 

 

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் நகராட்சி காந்தி மார்க்கெட் பகுதியில் டாக்டர் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் புதிய காய்கனி விற்பனை வளாகம் கட்டுவதற்கான  கட்டுமான பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் விசாகன் தலைமை தாங்கினார். விழாவில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி கலந்து கொண்டு ரூ. 21.25 கோடி மதிப்பீட்டிலான கட்டுமான பணிகளை அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.

 

இதனைத் தொடர்ந்து அமைச்சர் சக்கரபாணி பேசும்போது, “முதலமைச்சர் விவசாயப் பெருமக்களின் நலன் காக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார். விவசாயிகளுக்கு என  தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. விவசாயிகளின் கருத்துக்களை கேட்டு அவைகளை நிதிநிலை அறிக்கையில் சேர்ப்பதற்காக கருத்துக்கேட்பு கூட்டங்களை மாவட்டந்தோறும் நடத்தி வருகிறார்கள். விவசாயிகளின் எண்ணங்களை பூர்த்தி செய்யும் முதல்வராக நமது முதல்வர் இருக்கிறார். ஒட்டன்சத்திரம் பகுதி காய்கறி உற்பத்தி அதிகமாக உள்ள பகுதி ஆகும். தினசரி 1000 டன் முதல் 1500 டன் வரை காய்கறி வியாபாரம் நடைபெறுகிறது. மேலும், இப்பகுதியில் காய்கறி விலை குறைவாக உள்ள சமயங்களில் அவற்றைச் சேமித்து வைக்கும் விதமாக 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் குளிர்பதனக் கிடங்கு கட்டப்பட்டு வருகிறது.

 

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கடந்தாண்டு 31 கல்லூரிகளை கொண்டு வந்தார்கள். அதில் 4 கல்லூரிகள் திண்டுக்கல் மாவட்டத்தில் தொடங்கப்பட்டுள்ளது. 11 தொழில்நுட்பக் கல்லூரிகளை அறிவித்தார்கள். அதில் ஒட்டன்சத்திரம் தொகுதியில் 1 கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது தொழிற்பயிற்சி நிலையத்திற்கு என 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டடம் கட்டப்படவுள்ளது. மேலும், ஒட்டன்சத்திரம் பகுதியில் சார்பதிவாளர் அலுவலகம் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் கட்டப்படவுள்ளது. விருப்பாச்சி பகுதியில் போக்குவரத்து பணிமனை கட்டப்படவுள்ளது.

 

ஒட்டன்சத்திரம் தொகுதியில் உள்ள பேரூராட்சி, ஊராட்சி, நகராட்சி பகுதிகளுக்கு என 1000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் குடிநீர் திட்டம் முதலமைச்சரால் அறிவிக்கப்பட்டு, வரும் 31-ந் தேதி அதற்கான டெண்டர் விடப்படுகிறது. இந்த பணிகள் 15 மாத காலத்திற்குள் முடிவடையும். இதற்கென புதிய 20 மீட்டர் உயரம் கொண்ட மேல்நிலை குடிநீர் தொட்டிகள் கட்டப்பட்டு வருகின்றன. இதன் மூலம் நமது பகுதி மக்களுக்கு தினந்தோறும் குடிநீர் கிடைக்கும். முதலமைச்சர் ஒட்டன்சத்திரம் தொகுதிக்கு என சிறப்புவாய்ந்த இந்த திட்டத்தை செய்துள்ளார்கள். மேலும், ஒட்டன்சத்திரம் நகராட்சி பகுதியில் 3 இடங்களில் மக்கள் சாலைகளை கடக்க லிப்ட் வசதியுடன் கூடிய நடைபாதை அமைக்கப்படும்.

 

ஒட்டன்சத்திரம் நகராட்சியை குப்பையில்லா நகராட்சியாக மாற்றும் வகையில் 20 ஏக்கர் நிலப்பரப்பில் குப்பை கிடங்கு அமைக்கப்பட்டு, குப்பைகள் தரம் பிரிக்கப்படவுள்ளது. மேலும், இங்கு பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்ளும் வகையில் 12 கோடி ரூபாயில் நடைபாதை பூங்கா அமைக்கப்படவுள்ளது. மேலும், இந்த பகுதியில் ரூ. 7 கோடி மதிப்பீட்டில் விளையாட்டு மைதானமும் அமைக்கப்படவுள்ளது. முதலமைச்சர் தன்னை முன்னிலைப்படுத்தாமல், தமிழகத்தை முன்மாதிரியாக முன்னிலைப்படுத்தி செயல்பட்டு வருகிறார். ஒட்டன்சத்திரம் பகுதியில் குற்றச்செயல்களை தடுக்க அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட உள்ளது.

 

ஒட்டன்சத்திரம் நகராட்சி பகுதியில் 26 பணிகள் 47.65 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. 2451 எல்.இ.டி விளக்குகள் புதிதாக அமைக்கப்படவுள்ளது. ஒட்டன்சத்திரம் அரசு பொது மருத்துவமனைக்கு 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய கட்டடங்கள் கட்டப்பட்டு வருகிறது. மார்க்கம்பட்டியில் புதிதாக அரசு ஆரம்ப சுகாதார நிலையம் துவக்கப்படவுள்ளது. ஒட்டன்சத்திரம் பகுதிக்கு என அதிக திட்டங்களை வழங்கி சிறப்பித்து வரும் முதலமைச்சருக்கு நீங்கள் என்றும் ஆதரவுடன் இருக்க வேண்டும்” என்று கூறினார்.

 

இதில் ஒட்டன்சத்திரம் நகர்மன்றத் தலைவர் திருமலைச்சாமி, நகர்மன்றத் துணைத்தலைவர் வெள்ளைச்சாமி உட்பட கட்சி பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாலியல் புகார்; பாஜக மாவட்ட முன்னாள் செயலாளர் கைது!

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
dindigul palani bjp district secretary issue

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி அருகே சாமிநாதபுரத்தில் இருக்கும் அரசு நடுநிலைப் பள்ளியில் காலை உணவுத்திட்ட ஒருங்கிணைப்பாளராக பெண் ஒருவர் பணிபுரிந்து வருகிறார். இவர் பணியில் இருந்தபோது புஷ்பத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் செல்வராணியின் கணவரும், திண்டுக்கல் பாஜக மேற்கு மாவட்ட முன்னாள் செயலாளரான மகுடீஸ்வரன் காலை உணவுத்திட்ட பணிகளை ஆய்வு செய்வதாக கூறி அங்கு வந்துள்ளார்.

அச்சமயத்தில் மகுடீஸ்வரன் மது போதையில் இருந்ததாக தெரிகிறது. அப்போது அந்த பெண் ஒருங்கிணைப்பாளரிடம் எத்தனை குழந்தைகளுக்கு சமைக்கிறாய் என்று கேட்டு இருக்கிறார். அதற்கு அந்த பெண் 35 பேருக்கு என்று சொல்லியிருக்கிறார். அதனைத் தொடர்ந்து நான் சமையல் அறையை பார்க்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். அதற்கு அந்த பெண்ணும் சம்மதம் தெரிவித்து, சமையல் அறைக்கு அழைத்து சென்று இருக்கிறார். அப்போது திடீரென சமையல் ரூமின் கதவை அடைத்த போது அந்த பெண் ஒருங்கிணைப்பாளர் நான் ரூமை திறந்து தான் வைப்பேன் என்று கூறியிருக்கிறார். மது போதையில் இருந்த மகுடீஸ்வரன் அந்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தெரிகிறது. இது குறித்து அறிந்த அக்கம்பக்கத்தினர் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர். அதைக்கண்டு பாஜக மாவட்ட செயலாளார் மகுடீஸ்வரன் அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவாகிவிட்டார். 

இது சம்பந்தமாக காலை உணவுத்திட்ட பெண் ஒருங்கிணைப்பாளர் சாமிநாதபுரம் போலீசில் புகார் செய்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட சில பிரிவுகளின் கீழ் மகுடீஸ்வரன் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். இந்த விசயம் காட்டுத்தீ போல் பாஜக மாநில பொறுப்பாளர்களுக்கும் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்களுக்கும் தெரியவே மகுடீஸ்வரனை கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டிருப்பதாகவும், கட்சியினர் யாரும் அவருடன் தொடர்பு கொள்ள வேண்டாமென்றும், மாவட்ட தலைவர் கனகராஜ்  உடனடியாக அறிக்கை வெளியிட்டு இருந்தார்.

இந்நிலையில் மங்களூரில் தலைமறைவாக இருந்த மகுடீஸ்வரனை போலீசார் கைது செய்துள்ளனர். பழனி துணை காவல் கண்காணிப்பாளர் தனஞ்செயன் தலைமையிலான தனிப்படை போலீசார் கைது செய்து சாமிநாதபுரம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அதன்பின்னர் அவரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கும் பணியிலும் போலீசார் ஈடுபட்டுள்ளனர். 

Next Story

தேனியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பிரச்சாரம்; ஏற்பாடுகள் தீவிரம்!

Published on 09/04/2024 | Edited on 09/04/2024
Chief Minister M.K. Stalin's campaign In Theni

தமிழகத்தில் வருகிற 19 ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக முதல் அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க. ஸ்டாலின் தமிழகத்தில் சுற்றப்பயணம் செய்து, தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி தேனி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் தங்கதமிழ்ச்செல்வன் திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோரை ஆதரித்து முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேனியில் நாளை (புதன் கிழமை) தேர்தல் பிரச்சாரம் செய்கிறார். இதனையொட்டி தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே லட்சுமிபுரத்தில் பிரம்மாண்ட தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்று பேசுகிறார்.

Chief Minister M.K. Stalin's campaign In Theni

இதில் பங்கேற்க மு.க.ஸ்டாலின் இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு மதுரையில் இருந்து தேனி வருகிறார். தேனியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் அவர் தங்குகிறார். முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டங்களில் பங்கேற்க செல்லும் ஊர்களில் எல்லாம் காலை நேரத்தில் நடைபயிற்சி செய்து மக்களை சந்தித்து வாக்கு சேகரித்து வருகிறார். அதன்படி தேனியிலும் அவர் நாளை காலையில் நடைபயிற்சி மேற்கொண்டு மக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பின்னர் மாலையில் லட்சுமிபுரத்தில் நடக்கும் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். இதற்காக லட்சுமிபுரத்தில் பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது ஏராளமான தொண்டர்கள் அமருவதற்காக பொதுக்கூட்ட திடல் தயார் செய்யும் பணிகள் கடந்த சில  நாட்களாக மும்முரமாக நடந்து வருகின்றது. பொதுக்கூட்டம் நடக்கும் இடத்தில் பிரம்மாண்ட கம்பங்கள் நடப்பட்டு தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளின் கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன. 

Chief Minister M.K. Stalin's campaign In Theni

இந்த பொதுக்கூட்டத்தில் தேனி, திண்டுக்கல், மதுரை ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள 12 தொகுதிகளில் இருந்தும் கட்சிக்காரர்கள், பொதுமக்கள் என ஒரு லட்சம் பேரை திரட்ட இருக்கிறார்கள். அதற்கான பணியில் தொகுதி பொறுப்பாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி மற்றும் பத்திரபதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி உள்பட பொறுப்பாளர்களும் ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.